அம்மா உணவகத்தை விட ருசியாக இருக்கிறதா இந்திரா உணவகம்?
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி செய்தியாளர்
கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சி, சமீபத்தில் பெங்களூருவில் இந்திரா உணவகங்களைத் திறந்தது. இந்த உணவகம் ஒவ்வொரு நாளும் 2 லட்சத்திற்கும் அதிகமான குறைந்த விலையிலான உணவுகளை வழங்கி வருகிறது. இந்திரா உணவகத்தில் உணவை பிபிசியின் கீதா பாண்டே சுவைத்தார்.

பட மூலாதாரம், ASIF SAUD
காலை ஏழு மணி கடந்த சற்று நேரத்தில், பரபரப்பான நகர மார்கெட்டிற்கு அருகில் உள்ள கட்டடத்திற்கு வெளியே மக்கள் கூட ஆரம்பித்தனர்.
7:30 மணிக்கு வாசல் திறக்கப்பட்டதும், மக்கள் உள்ளே விரைந்து சென்றனர். அங்கு நெருக்கடி ஏற்பட்டபோதும், விரைவிலேயே மக்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்தனர். பொறுமையற்றவர்கள் மற்றவர்களைத் தள்ள ஆரம்பித்தனர்.
வரிசையில் நின்றவர்கள் விரைவாக நகர்ந்தனர். ஆண்களும், பெண்களும் சிறிய ஜன்னல் அருகே சென்று தங்களது பணத்தை கொடுத்து ஒன்று, இரண்டு டோக்கன்களை பெற்றுக்கொண்டனர். இந்த டோக்கன்களை கொடுத்து உணவைப் பெற்றுக்கொள்கின்றனர்.
மஞ்சள் நிற தட்டுகளில் உணவைப் பெற்றுக்கொண்டு, அங்குள்ள மேஜையிலோ வெளியில் உள்ள வராண்டாவிலோ சாப்பிடுகின்றனர்.
நானும் டோக்கன் பெற்றுக்கொண்டு காலை உணவைப் பெற வரிசையில் நின்றேன். காலை உணவாக இட்லி, பொங்கல் மற்றும் தேங்காய் சட்டினி இருந்தது.

பட மூலாதாரம், ASIF SAUD
உணவு புதிதாகவும், சூடாகவும், மணத்துடனும், சுவையுடனும் இருந்தது. இதில் சிறப்பு, ஒவ்வொரு தட்டு உணவும் ஐந்து ரூபாயில் கிடைத்தது.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பெயரில் அமைக்கப்பட்ட இந்த உணவகங்கள், ஆகஸ்ட் 16-ம் தேதி திறக்கப்பட்டன. அப்போதிலிருந்து இங்கு மக்கள் கூட்டம் வந்துகொண்டிருக்கிறது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட அம்மா உணவக திட்டத்தை பார்த்து, இந்திரா உணவகம் திறக்கப்பட்டது. கடந்த வருடம் நான் அம்மா உணவகத்தில் சாப்பிட்டேன். உணவு நன்றாக இருந்தது. இந்திரா உணவகத்தில் உணவு இன்னும் சிறப்பாக இருக்கிறது.

பட மூலாதாரம், ASIF SAUD
ஒரு நாளைக்கும் 100 ரூபாய் சம்பாதிக்க கூடிய, அதுவும் சம்பாதிக்க முடியாத தினசரி கூலித் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், பாதுகாவலர்கள், பிச்சைக்காரர்கள் இந்த உணவகத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
பெங்களூருவின் ஒரு ஷாப்பிங் மையத்தில் பாதுகாவலராக பணியாற்றும் முகமது இர்ஷாத் அஹ்மத், இந்திரா உணவகத்தில் வழக்கமாகச் சாப்பிடுவதாக கூறுகிறார்.
''இங்கு உணவு அருமையாக இருக்கிறது. முன்பு அருகில் உள்ள உணவகத்தில் 30 ரூபாய்க்குக் காலை உணவு சாப்பிடுவேன். தற்போது 25 ரூபாய் சேமிக்கிறேன். இது மிகவும் நல்ல விஷயம். இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும்'' என்கிறார் அவர்.
தினமும் மார்க்கெட்டிற்கு வந்து பழங்களை வாங்கி, அதனைப் பள்ளிக்கு வெளியே விற்கும் லட்சுமி கூறுகையில்,''தற்போது காலை நேரத்தில் சமைக்க வேண்டிய அவசியம் இல்லை. இது என் வாழ்க்கையை மிகவும் சுலபமாக்கியுள்ளது. உணவின் விலை குறைவாக இருப்பதால் என்னால் வாங்க முடிகிறது.'' என்கிறார்.
இந்த உணவகங்கள் அரசு நிதியில் சுமையாக இருக்கும் என பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், கோடிக்கணக்கான ஏழை மக்கள் வாழும் இந்தியாவில் இத்திட்டம் நன்கு வெற்றிபெற்றுள்ளது.

பட மூலாதாரம், ASIF SAUD
கடந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற்றதற்கான முக்கிய காரணங்களில் அம்மா உணவகமும் ஒன்று என பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்திரா உணவகத்திற்கான நோக்கம் பொதுநலன் சார்ந்தது என அதிகாரிகள் அழுத்திக் கூறினாலும், அடுத்த வருடத் தொடக்கத்தில் கர்நாடகாவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இத்திட்டம் நிச்சயம் அரசியல் சார்ந்ததாக இருக்கும்.
''ஏழைகளுக்கு உணவளிக்க எங்கள் முதல்வர் முடிவெடுத்துள்ளார்'' என இத்திட்டத்திற்கான அதிகாரி மனோஜ் ராஜன் கூறுகிறார்.
''கார் ஓட்டுநர்கள், மாணவர்கள் என இடம்பெயர்ந்த மக்களையும், வேலைக்குச் செல்லும் தம்பதிகளையும் இலக்காக வைத்து இந்த உணவகம் நடத்தப்படுகிறது. ஆனால், நிச்சயமாக அனைத்து குடிமக்களுக்காகவும் நடத்தப்படுகிறது" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், ASIF SAUD
தற்போது 152 உணவகங்களில் தினசரி 2 லட்சம் தட்டுகள் உணவு விநியோகிக்கப்படுகிறது. நவம்பர் இறுதிக்குள் 198 உணகங்களில் 3 லட்சம் தட்டுகள் உணவுகள் விநியோகிக்கப்படும் என மனோஜ் ராஜன் கூறுகிறார்.
ஜனவரி மாதம் மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் மொத்தம் 300 உணவகங்கள் உருவாகும் என்றும் அவர் கூறுகிறார்.
மக்களின் வயிறு வழியாக அவர்களில் இதயத்திற்குச் செல்ல முடியும் எனப் பிரபல பழமொழி உள்ளது. இத்திட்டம் தேர்தலின் போது ஓட்டுகளைப் பெற்றுத்தரும் என காங்கிரஸ் கட்சி நம்புகிறது.

பட மூலாதாரம், ASIF SAUD
ஒருவேளை அரசு மாறினால், இந்த உணவகங்கள் மூடப்படும் என்ற பயம் மக்களிடம் இருக்கிறது என என்னுடன் உணவு உண்ட வெங்கடேஷ் கூறுகிறார்.
காங்கிரஸ் கட்சி தோற்றால் இத்திட்டம் என்னவாகும் என மனோஜ் ராஜனிடம் கேட்டேன். ''மக்களுக்கான திட்டம் தொடரும். யார் ஆட்சியமைத்தாலும் இது மாறாது'' என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
- எகிப்து மசூதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது யார்? சம்பவம் நடந்தது எப்படி?
- ஐக்கிய அரபு எமிரேட்டில் இல்லாதது, இந்தியாவில் உள்ளது எது தெரியுமா?
- “மக்கள் திருந்தினால் அரசியல்வாதிகள் திருந்துவார்கள்”
- ஜிம்பாப்வே அதிபராகப் பொறுப்பேற்றார் எமர்சன் முனங்காக்வா
- நேற்று அதிமுக சின்னம்; இன்று தேர்தல் தேதி: ஆணையத்தின் மீது சீறும் சமூக ஊடகம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













