ஐக்கிய அரபு எமிரேட்டில் கிடைக்காதது எது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சுபேர் அகமத்
- பதவி, பிபிசி இருமொழி செய்தியாளர், யுஏஇ
கடந்த வாரம் நான் முதல்முறையாக ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு (யுஏஇ) சென்றிருந்தேன். அதிகம் நேரம் துபாயில் செலவிடட்டேன்.
துபாயின் நவீன மற்றும் உலகத் தர கட்டுமானங்களை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
வானளாவிய கட்டடங்கள், உலகின் மிக விலையுயர்ந்த கார்கள் பரவலாக பயன்படுத்தப்படுவது, அசர வைக்கும் அழகு கடற்கரைகள் ஆகியவை பலரையும் முற்றிலும் வியப்புக்குள்ளாக்கும்.
இன்னும் சொல்லப்போனால், துபாய் பல்கலாசார சமூகமாக உள்ளது. பலரும் ஒன்று கலக்கிற இடமாக இடமாக இது உள்ளது.
உள்ளூர் அரேபியரை விட வெளிநாடுகள் பலவற்றை சேர்ந்த மக்கள் அதிகமாக இங்கு வாழ்ந்து, வேலை செய்து வருகின்றனர்.
சுருக்கமாக சொன்னால், ஐக்கிய அரபு எமிரேட்டில் ஏறக்குறைய எல்லாமே உள்ளன.

பட மூலாதாரம், Warren Little/Getty Images
ஆனால், ஐக்கிய அரபு எமிரேட்டில் இல்லாத ஒன்று இந்தியாவில் உள்ளது. அதுதான் மதிப்பில் மிகவும் உயர்ந்த ஜனநாயகம்.
ஐக்கிய அரபு எமிரேட்டில் பேச்சு சுதந்திரம் கிடையாது. ஊடகங்களுக்கு மனசாட்சியே இல்லாததுபோல தோன்றுகிறது.
சாதாரண மனிதர் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது.
தெருக்களில் சீருடையோடு நடமாடுவோர் மிகவும் குறைவே. ஆனால், உளவுத்துறை நிறுவனங்களின் முகவர்கள் சாதாரண ஆடைகளில் எங்கும் இருப்பர் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
பெரிய அண்ணன் உங்களை எப்போதும் கவனித்து கொண்டிருக்கிறார் என்று இங்கு குடியேறியுள்ள இந்தியர்கள் கூறுவதுண்டு.
இந்தியாவில் ஒருவர், தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சமில்லாமல் நாட்டை, அரசை, பிரதமரை வெளிப்படையாக விமர்சிக்கலாம்.
சமூக ஊடகங்களில் பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிரான கருத்துக்களை அடிக்கடி வாசிக்கலாம். மோதியை பல்வேறு தளங்களில் மக்கள் கேலி செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன்.

பட மூலாதாரம், Chris Jackson/Getty Images
அதிக ஆர்வமுடைய சில காவல்துறையினரால் இத்தகையோர் கைது செய்யப்பட்ட சில வழக்குகளும் இந்தியாவில் உள்ளன.
ஆனால், இந்திய அரசுக்கும், அதனுடைய தலைவர்களுக்கும் எதிராக உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க பெருமளவு சுதந்திரம் இந்தியாவில் உள்ளது.
ஆனால், இதனை நீங்கள் ஐக்கிய அரபு எமிரேட்டில் செய்தால். சிறையில் கம்பி எண்ண வேண்டியிருக்கும்.
நீங்கள் வெளிநாட்டவராக இருந்தால், அடுத்த விமானத்தில் தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள்.
ஐக்கிய அரபு எமிரேட்டு குடிமக்கள் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள குறிப்புக்களை பார்வையிட்டேன்.
ஆளும் அரச குடும்பத்தை சிறிதளவு விமர்சிப்பதாக ஒரு பதிவைக் கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
வெளிப்படைத்தன்மை குறைவாக இருப்பது தெளிவாக தெரிகிறது. எடுத்துக்காட்டாக, மிகவும் முன்னிலையிலுள்ள ஐக்கிய அரபு எமிரேட்டிலுள்ள நிறுவனங்களுக்கு அரசக் குடும்பத்தினார் உரிமையாளராக உள்ளனர் என்று உள்ளூர் அரேபியர் ஒருவர் என்னுடைய காதில் ரகசியமாக கிசுகிசுத்தார்.
இந்த நிறுவனங்களை எல்லாம், அவர்கள் எவ்வாறு உரிமையாக்கி கொண்டார்கள் என்று யாரும் கேள்வி கேட்பதற்கு எந்த வழியும் இல்லை என்று அவர் கூறினார்.
ஜனநாயக நாட்டில் வாழ்வதால் நாம் அதிஷ்டம் மிக்கவர்கள் என்று துபாயில் இருந்தபோது எனக்கு தோன்றியது.
இந்தியர்கள் தங்களுடைய தலைவர்களை வெளிப்படையாக விமர்சிக்கிறார்கள். மக்கள் தலைவர்களுக்கு சவால் விடலாம். கேள்விகள் கேட்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக தேர்தல்களில் இந்த தலைவர்களை தோல்வியுற செய்யவும் மக்களால் முடியும்.
உண்மையிலேயே ஐக்கிய அரபு எமிரேட்டிலுள்ள காற்றின் தரம் டெல்லியில் உள்ளதை விட மிகவும் நன்றாகவே உள்ளது. ஆனால், இங்கு தனிப்பட்ட சுதந்திரம் இல்லாததால், மூச்சு திணறுகிற உணர்வை பெற்றேன்.

பட மூலாதாரம், Kevin Frayer/Getty Image
அவர்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கின்ற பிரச்சனைகள் பற்றி பல்வேறு மக்களிடம் இருந்து கருத்துகளைப் பெறுவதற்கு நான் முயன்றேன். ஆனால், அவர்கள் பேசுவதற்கே பயந்தனர். அதிகாரிகளிடம் நாங்கள் பேசியபோதும், இதே சூழலையே சந்தித்தோம்.
ஆனால், உண்மையிலேயே உணர்ந்ததை சொல்வதாக இருந்தால், பேச்சு சுதந்திரம் அங்கு இல்லாததை நான் உணர்ந்தேன் அல்லது அந்த விடயத்தில் ஜனநாயகம் பற்றி உள்ளூர் மக்கள் பெரிதாக கவலைப்பட்டதாக தெரியவில்லை.
மாறாக, அவர்களுடைய அரசியல் அமைப்பை அவர்கள் நியாயப்படுத்தினர். இந்தியாவின் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கினர்.
இந்தியாவில் ஜனநாயகம் இருந்தபோதிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கு எதிரான வன்முறை பரவலாகி வருகிறது என்பது அவர்களின் வாதமாக இருந்தது.
உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக ஐக்கிய அரபு எமிரேட்டு உள்ளது என்று அவர்கள் வாதிட்டனர்.
அவர்களின் நாட்டில் பாலியல் வல்லுறவு வழக்குகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் குறைவு என்று அவர்கள் கூறினர்.

பட மூலாதாரம், KARIM SAHIB/AFP/Getty Images
ஐக்கிய அரபு எமிரேட்டில் உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் சட்டப்படியான ஆட்சியை பற்றி குறிப்பிட்டு அவர்கள் என்னுடைய கவனத்தை ஈர்த்தனர்.
அவர்களிடம் ஜனநாயகம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்களின் மனதில் அமைதி உள்ளது, இரவில் நன்றாக தூங்க முடிகிறது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆண்டபோது செயல்படுத்தப்பட்ட அவசர நிலை என்று அறியப்படும் காலத்தை கண்டு, கடந்து வந்த இந்தியர்கள், துபாயின் மிகுந்த செல்வத்தோடு இந்தியாவின் பேச்சு சுதந்திரத்ழைதயும், ஜனநாயகத்தையும் பதிலீடு செய்து பார்க்க மாட்டார்கள்.
ஜனநாயகம் இடைநீக்கப்பட்டு, மனித உரிமை மீறல் நடைபெற்ற, பிடியாணை இல்லாமல் கைது செய்த 1975-77ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான இரண்டு ஆண்டு காலத்தை அவர்களால் மறக்கவே முடியாது.
என்னுடைய பார்வையில். எவ்வளவு தவறாக இருந்தாலும், அவர்கள் ஜனநாயகத்தை அவர்களின் எல்லா சக்தியோடும் ஜனநாயகத்தையே நியாயப்படுத்துவார்கள்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












