அனுமதியில்லாமலே நீங்கள் இருக்கும் இடத்தை 'காட்டிக்கொடுக்கும்' ஆண்ட்ராய்டு செல்பேசிகள்

பட மூலாதாரம், Getty Images
பெரும்பான்மையான ஆண்ட்ராய்டு திறன்பேசிகள் அதன் இருப்பிட சேவை அணைக்கப்பட்டிருந்தாலும் பயனரின் இருப்பிடம் சார்ந்த தரவுகளை கூகுள் நிறுவனத்துக்கு அனுப்புவதாக தெரியவந்துள்ளது.
ஆண்ட்ராய்டு திறன்பேசிகள் அருகிலுள்ள செல்பேசி கோபுரங்கள் சார்ந்த தகவல்களை திரட்டி அவற்றை கூகுள் நிறுவனத்திடம் பகிர்வதாக குவார்ட்ஸ் என்ற இணையதள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அந்தரங்க உரிமைக்காக வாதிடும் ஒருவர், இது பயன்பட்டாளர்களை "காட்டிக்கொடுப்பதற்கு" சமம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குவார்ட்ஸுக்கு பதிலளித்துள்ள கூகுள் நிறுவனம், இதுபோன்று பெறப்பட்ட தரவுகள் சேமிக்கப்படவில்லை என்றும் இந்த செயற்பாட்டை நிறுத்துவதற்காக ஆண்ட்ராய்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கூகுள் பிலே சர்வீஸ்சஸ் என்னும் செயலி ஆண்ட்ராய்டு திறன்பேசியின் பின்னணியில் இயங்கும்போது இப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கூகுள் பிலே சர்வீஸ்சஸ் கூகுளின் பெரும்பாலான செயலிகள் இயங்குவதற்கு அவசியமானதாகும். மேலும், இது பெரும்பான்மையான ஆண்ட்ராய்டு திறன்பேசிகளில் முன்பதிந்து வெளியிடப்படுகிறது.

பட மூலாதாரம், AFP
திறன்பேசிகள் செல்பேசி கோபுரங்களின் முகவரிகளை இனங்கண்டு அதிலுள்ள குறிப்பிட்ட இலக்கங்களின் மூலம் குறிப்பிட்ட செல்பேசி கோபுரங்கள் குறித்த தகவல்களை பிரித்து அதை கூகுளுக்கு அனுப்புவதை குவார்ட்ஸ் கண்டறிந்துள்ளது.
ஒருவர் இருக்கும் இடத்தை கண்டறிவதற்கு இந்த தரவுகளை பயன்படுத்தலாம்.
இருப்பிட சேவை அணைக்கப்பட்டிருக்கும் போது மற்றும் திறன்பேசியில் சிம் கார்டுகள் எடுக்கப்பட்டாலும் கூட மேற்கண்ட இந்த செயற்பாட்டை திறன்பேசிகள் நிகழ்த்துகின்றன.
இச்செயற்பாட்டை நிறுத்துவதற்குரிய தேர்வு திறன்பேசிகளில் இல்லை.
தரவுகளை சேமிப்பதில்லை
"திறன்பேசிகளில் செய்திகளை அனுப்புவதன் வேகம் மற்றும் திறனை மேம்படுவதற்காக செல்பேசி கோபுரங்களின் சிக்கனல்களை கூடுதலாக ஆராய்தோம்" என்றும் இதை கடந்த 11 மாதங்களாக செய்து வருவதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"செல் குறியீட்டை எங்களின் வலைப்பின்னல் ஒத்திசைவு அமைப்போடு ஒருபோதும் இணைப்பதில்லை என்பதால் சேகரிக்கப்பட்ட தரவுகள் உடனடியாக அழிக்கப்பட்டுவிடும்" என்று அந்நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பின்னணியில் திறன்பேசிகள் என்ன செய்கின்றன என்பதைக் கட்டுப்படுத்துவதில் பயனர்களுக்கு உரிமையேதும் இல்லை என்பதை இது காட்டுவதாக இணையம் சார்ந்த உரிமைகள் தொடர்பான குழுவான பிரைவசி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
"நாம் ஒரு திறன்பேசியை வாங்கும்போது அது நம்மை காட்டிக்கொடுக்கும் என்பதை எதிர்பார்ப்பதில்லை" என்று பிரைவசி இன்டர்நேஷனல் அமைப்பை சேர்ந்த மில்லி கிரஹாம் கூறுகிறார்.
"இச்செயற்பாட்டை நிறுத்தவுள்ளதாக கூகுள் அறிவித்தாலும், இது பயனரின் கவனத்துக்கு செல்லாமல் என்னவெல்லாம் செய்கிறது மற்றும் எதற்காக செய்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது," என்றும் அவர் கூறியுள்ளார்.
பிற செய்திகள்
- 15 நாள் டெங்கு சிகிச்சைக்குப்பின் இறந்த சிறுமி; மருத்துவக் கட்டணமோ ரூ. 16 லட்சம்
- மோதியின் சொந்த கிராமத்திற்கு சென்றடையாத “தூய்மை இந்தியா” திட்டம்
- 40 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் வெளியான `பத்மாவதி'
- இரட்டை குடியுரிமை: பதவி இழக்கும் 9-ஆவது ஆஸ்திரேலிய எம்.பி.
- ''அதிமுக = அனைத்திந்திய மோடி முன்னேற்றக் கழகம்?''
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













