உயிரோடு இருப்பவர்களின் படங்களுடன் பேனர் வைப்பதைத் தடைசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் உயிருடன் இருப்பவர்களின் படங்களுடன் பேனர்கள், ஃப்ளெக்ஸ் போர்டுகளை, பதாகைகளை வைப்பதற்கு தடைசெய்யும் வகையில் விதிகளை உருவாக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேனர் வைப்பதைத் தடைசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புப் படம்)

தமிழ்நாட்டில் திறந்தவெளி இடங்களை அழகாக வைத்துக்கொள்ளும் நோக்கில், எந்த ஒரு சுவற்றிலும் அனுமதி இல்லாமல் எழுதுவதைத் தடுக்கவும், பேனர்கள் வைக்கும்போது உயிருடன் இருப்பவர்களின் படங்களை அதில் பயன்படுத்தாமல் இருக்கவும் ஏற்ற வகையில் தமிழ்நாடு திறந்தவெளி இடங்களை சீர்குலைப்பதைத் தடுக்கும் சட்டத்தை திருத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இம்மாதிரி பேனர்களை வைப்பவர்கள், தங்களை படங்களையே அதில் போட்டுக்கொள்ளக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காணொளிக் குறிப்பு, கிரிக்கெட்

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருலோச்சன குமாரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். தனக்குச் சொந்தமான இடத்தின் முன்பாக ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள், அந்த அமைப்பின் பெயர்ப் பலகையுடன் கொடி ஒன்றை வைத்திருப்பதாகவும் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்தபோது, காவல்துறையினர் தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியதாகவும் தனது மனுவில் திருலோச்சன குமாரி கூறியிருந்தார்.

ஆகவே, தனக்குச் சொந்தமான இடத்தின் முன்பாக உள்ள பலகை, கொடி ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும், அதற்கு காவல்துறை உதவ வேண்டுமென உத்தரவிடக் கோரி இந்த மனுவை திருலோச்சன குமாரி தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், உடனடியாக மனுதாரருக்குச் சொந்தமான வீட்டின் முன்பாக உள்ள பலகைகையும் கொடியையும் அகற்றும்படி உத்தரவிட்டார்.

மேலும் நகரில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருக்கும் பலகைகள் உள்ளிட்டவை உடனடியாக அகற்றப்பட வேண்டுமென்றும் யாராவது அதைத் தடுத்தால் அவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவுசெய்ய வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :