தலித்தை திருமணம் செய்ததால் மகளை எரித்துக் கொன்ற முஸ்லிம் தாய்
"எட்டரை மாத குழந்தையை தாங்கியிருந்த அவளுடைய வயிற்றில் அவர்கள் அந்த பெரிய கற்களை தான் எறிந்தார்கள். அப்படியும் அவர் இறக்கவில்லை என்பதால், அவரை அவர்களுடைய வீட்டுக்கு அருகில் இழுத்து சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றார்கள்".

பட மூலாதாரம், MARTIN BUREAU/AFP/Getty Images
கர்நாடகத்திலுள்ள கிராமத்தில் தலித் ஒருவரை திருமணம் செய்து கொண்ட தன்னுடைய மகளை எரித்து கொன்றதை விவரிக்கும் தாயின் சொற்கள் அல்ல இவை.
தன்னுடைய "நல்ல மருமகள்" அவருடைய சொந்த தாயான ரம்ஸான்பேயால் எரித்து சாம்பலாக்கப்பட்டதை விவரிக்கும் மாமியார் கஸ்தூர்பாயின் சொற்கள்தான் இவை.
விஜயபுரம் மாவட்டத்தில் இருந்து ஏறக்குறைய 93 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் குன்டாகாலா கிராமத்தில் வாழும் ரம்ஸான்பேயின் மகளான பானு பேகம், சிறு வயதிலிருந்தே தோழராக இருந்துவந்த கஸ்தூர்பாயின் மகன் சயாபாணா ஷார்னாப்பா கோணுரை திருமணம் செய்துகொண்டது தான் இதற்கு காரணமாகும்.
இந்த கோரமான சம்பவத்திற்கு பிறகு, இந்த கிரமத்திலுள்ள தலித் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் சமூகப் பதட்டம் தோன்றாதது மட்டுமே வெளிப்படும் நல்லதொரு செய்தியாகும்.

பட மூலாதாரம், SAFIN HAMED/AFP/Getty Images
கொடூர சோகம்
பானு மற்றும் சயாபாணாவின் இடையில் குழந்தை பருவத்தில் இருந்தே தோன்றிய மாறாத அன்பு, ஆண்டுகள் செல்ல செல்ல தீவிரக் காதலாக மலர்ந்துள்ளது. இதற்கு பிறகு மிகவும் மகிழ்ச்சியாக நீடித்திருக்க வேண்டிய இந்தக் காதல் வாழ்வு, பிறரை பீதியடைய வைக்கும் விகாரமான முறையில் நிறைவு பெற்றிருக்கிறது.
உணர்ச்சிப் பெருக்கால் அவருடைய கண்களில் இருந்து வழிந்தோடும் கண்ணீரை துடைக்க தீவிரமாக முயன்று கொண்டு, கஸ்தூர்பாய் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
அவர் சமைத்து கொண்டிருந்தபோது, அவருடைய விறகு அடுப்புக்கு எதிர்பக்கத்தில் ஓரளவு கூரையிடப்பட்டிருந்ததில் தீ வைக்கப்பட்டிருந்தது.
அந்த ஒரு அறை வசிப்பிடத்தில் இருந்து கஸ்தூர்பாய் அவருடைய தோழியோடு விரைவாக வெளியேறியபோது, கத்தி வைத்திருந்த ரம்ஸான்பேயின் குழந்தைகளால் தன்னுடைய மகன் விரட்டப்படுவததை பார்த்தார்.
உடனே, தன்னுடைய மருமகளை மறைத்து வைத்திருந்த வெறுமையாக இருந்த பள்ளிக்கு கஸ்தூர்பாய் விரைந்தார்.
பானுவின் தாய் விடுத்திருந்த மிரட்டல் நிஜமாகிப் போனதை கஸ்துர்பாய் அப்போதுதான் உணர்ந்தார்.
"என்னுடைய கழுத்தை பிடித்த அவர்கள், எனது மருமகளை பள்ளிக்கு வெளியே கொண்டு சென்று இந்த கற்களால் அவரது வயிற்றில் கடுமையாக தாக்கினர்" என்று பிபிசியிடம் கஸ்தூர்பாய் தெரிவித்தார்.

பட மூலாதாரம், PEDRO PARDO/AFP/Getty Images
இந்த சிறிய பள்ளிக்கு அடுத்தாக வீடு ஒன்று கட்டுவதற்காக இந்த கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு கல் பாளமும், இந்த கிராமத்தில் கட்டப்படும் வீடுகளுக்கு சுவர் எழுப்புவதற்கான 3 அங்குலம் தடிமனும், 2 அடியும் கொண்டவையாக இருந்தன.
கத்தியுடன் வந்த பானுவின் சகோதரர்கள் மற்றும் மைத்துனரால் துரத்தப்பட்ட சயாபாணா, தன்னுடைய மனைவியை காப்பாற்ற விரைந்தார்.
ஆனால், அவர் மீதும் தீ வைக்க பானுவின் குடும்பத்தினர் முயல்வதை உணர்ந்தார்.
"கர்ப்பமாக இருந்த என்னுடைய மனைவியின் இறப்புக்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக நான் வாழ வேண்டும் என்று எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன்" என்று சயாபாணா தெரிவித்தார்.
ரம்ஸான்பேயின் மருமகனும், பிற குழந்தைகளும் இந்த கிராமத்திற்குள் வந்தவுடனேயே ஏதோ நடைபெறப்போகிறது என்று கஸ்தூர்பாயும் சயாபாணாவும் சந்தேகப்பட்டிருக்க வேண்டும்.
கத்தியை வைத்து கொண்டு அந்த குடும்பத்தினர் சயாபாணாவை விரட்ட தொடங்கியது வரை இவ்வாறு நடக்கும் என்று முன்னரே கணிக்க அவர்கள் தவறிவிட்டனர்.
அக்கம்பக்கத்தில் உள்ளோர் இந்த விவகாரத்தில் தலையிடக்கூடாது என்றும் அவர்கள் மிரட்டினர்.
திட்டமிட்ட கொலை
ரம்ஸான்பே (பானுவின் தாய்), சால்மா (சகோதரி), அக்பர் (சகோதரர்) மற்றும் ஜீலானி (மைத்துனர்) அனைவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. பானுவுக்கு 5 சகோதரிகளும், 4 சகோதரர்களும் உள்ளனர்.

கைதாகி போலீஸ் காவலில் ஏற்கெனவே இருப்பவர் உள்பட அவர்களின் பக்க நிலையை விளக்குவதற்கு யாரும் இல்லாத நிலைமையே உள்ளது.
"இது முன்னரே திட்மிடப்பட்டு நடத்தப்பட கொலை என்பது தெளிவாக தெரிகிறது" என்று விஜயபுரம் போலீஸ் கண்காணிப்பாளர் குல்தீப் குமார் ஆர்.ஜெயின் தெரிவித்துள்ளார்.
காதல் முதல் திருணம் வரை
ரம்சான்பேயும், கஸ்தூர்பாயும் அண்டை வீட்டார்தான். மூன்று வீடுகள் தள்ளி அவர்கள் வசிக்கின்றனர்.
"குழந்தைப் பருவத்தில் இருந்தே, பானுவும், என்னுடைய மகனும் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள். அவன் வளர்ந்தபோது, அவள் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், மிகவும் நெருக்கமாக பழக வேண்டாம் என்று அவனிடம் எச்சரித்தேன். எங்களுடைய சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கூட அவனுக்காக பார்த்து வைத்திருந்தேன். ஆனால், பானுவை மட்டுமே திருமணம் செய்வேன் என்று அவன் கூறிவிட்டான்" என்கிறார் கஸ்தூர்பாய்.
பானுவை அவருடைய தாய் அடித்து நொறுக்க தொடங்கியதும், சரக்கு வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்த சயாபாணாவும், பானுவும் வீட்டைவிட்டு வெளியேறி கோவா சென்றனர். அங்கேயே திருணம் செய்து கொண்டனர்.

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE/AFP/Getty Images
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மே மாதம் அவர்கள் வீடு திரும்ப முடிவு செய்தபோது, கிராமத்தில் வரவேற்கப்படுவர் என்று எண்ணினர்.
திரும்பி வந்த தம்பதியை ஏற்றுகொண்ட பையனின் குடும்பத்தார் பதிவு திருமணத்தையும் நடத்தி வைத்தனர்.
பெண்ணின் குடும்பமோ எதிர்மறையாக இதனை எடுத்துக்கொண்டது. பானுவை அவர்கள் தொடர்ந்து மிரட்டி வந்ததாக, சயாபாணா கூறியுள்ளார்.
தடுக்க யாருமில்லை
"எங்களுடைய அக்கம்பக்கத்தார் யாரும், என்னுடைய சமூகத்தினரோ அல்லது அவர்களின் சமூகத்தினரோ பானு கொல்லப்படுவதை தடுக்க வரவில்லை" என்கிறார் கஸ்தூர்பாய்.
ரம்ஸான்பேயின் குழந்தைகள் ஆயுதத்தை காட்டி மிரட்டிய பிறகு அண்டை வீட்டார் இன்னும் வீடு திரும்பவில்லை என்பதுதான் உண்மை.
குன்டாகாலா கிராமம் பிற கிராமங்களை விட வேறுபட்ட ஒன்றாகும்.
பொதுவாக எல்லா இடங்களிலும் இருப்பதைபோல, கிராமத்திற்கு வெளியே தலித்துகளுக்கு என்று தனியான காலனி என்று ஒன்றும் இந்த கிராமத்தில் கிடையாது.
உயர் சாதி குழு ரொட்டிகள், தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அடுத்தடுத்து வாழ்ந்து வருகின்றனர்.
குடும்ப பிரச்சனை, சமூக பிரச்சனையல்ல
"இது சமூகங்களோடு தொடர்புடைய விடயமல்ல. இது இரு குடும்பங்களுக்கு இடையில் நடப்பது. ஒரு குடும்பம் தலித், இன்னொரு குடும்பம் முஸ்லிம் என்பதில் என்ன இருக்கிறது" என்று பருப்பு, சோளம் மற்றும் பருத்தி விளையும் ஒரு கிராமத்தின் விவசாயியான ஷான்தானகௌடா கூறியுள்ளார்.

பட மூலாதாரம், KIEFERPIX/Getty Images
"இருவர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அவர்களுடைய தனிப்பட்ட விடயத்தில் நாங்கள் எதுவும் சொல்வதற்கில்லை. தலித்துக்களோ, எங்களுடைய சமூகமோ அங்கு செல்லவில்லை. காரணம் இது இரண்டு குடும்பங்களுக்கு இடையில் நடப்பது. இந்த சம்பவம் இரு சமூகங்களுக்கு இடையில் காணப்படும் சமூக உறவுகளை பாதிக்க போவதில்லை" என்று கூலித் தொழிலாளி சையத் தெரிவித்தார்.
பெருக்கெடுத்து வந்த கண்ணீரை எப்போதும் கட்டுப்படுத்தி கொண்டிருந்த கஸ்தூர்பாய். "நாங்கள் ஏழைகள். அதனால் எங்களுக்கு இது நடந்துள்ளது. பணக்காரர்கள் அவர்களை சுற்றியிருக்கும் மக்களிடம் இருந்து சிறிது உதவியை பெற்றிருப்பார்கள். துரதிஷ்டவசமாக நாங்கள் இழந்தவர்கள் ஆகிவிட்டோம்" என்கிறார்.
இந்த கிராமத்தில் தலித்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான திருமணப் பந்தம் நிகழவேயில்லை என்றில்லை. "என்னுடைய உறவினர் என்னுடைய மனைவியின் மூத்த சகோதரியை திருமணம் செய்தார். அவர்கள் சோர்பூரில் (கால்புராஜி மாவட்டம்) வாழ்கின்றனர். அவர் ஒழுங்காக தொழுகை செய்கிறார். நாங்கள் பதிவு திருணம் செய்து கொண்டதால் பானுவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது" என்கிறார் சயாபாணா.
"ஆம், இந்த கிராமத்திற்கு வந்ததை எண்ணி வருந்துகிறேன்" என்கிறார் சனாபாணா.
கணவனை பகிர்ந்து வாழ்வதை விரும்பும் பெண்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













