மலேசியாவிற்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ம.தி.மு.க. தகவல்
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவிற்கு மலேசிய நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அவர் திருப்பி அனுப்பப்படுவதாக ம.தி.மு.க. தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.

பட மூலாதாரம், MDMKPARTY
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியின் மகளது திருமண வரவேற்பில் கலந்துகொள்வதற்காக வைகோ வியாழக்கிழமையன்று இரவில் மலேசியா புறப்பட்டுச் சென்றதாகவும் அவர், கோலாலம்பூர் வந்தடைந்தவுடன் அவர் உள்ளே அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் விமான நிலையத்தில் உள்ள குடிவரவுத் துறை அதிகாரிகள், நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறி புலிகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளைக் கேட்டதாகவும் இலங்கையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் குற்றம்சாட்டியதாக ம.தி.மு.க. தெரிவிக்கிறது.
வைகோ, தான் இந்தியக் குடிமகன் என்று கூறி கடவுச் சீட்டைக் காட்டியபோதும் "மலேசியாவுக்கு ஆபத்தானவர்" என்ற பட்டியலில் வைகோவின் பெயர் இருப்பதால் அவர் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அவருடைய கடவுச் சீட்டை வாங்கி வைத்துக்கொண்டதாகவும் அக்கட்சியின் அறிக்கை கூறுகிறது.
பினாங்கு மாநில முதல்வர் லிங் குவான் யங், துணை முதல்வர் ராமசாமி ஆகியோர் பரிந்துரைத்தும் அவர் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை.
தற்போது விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவர், இன்று இரவு 10.45 மணிக்கு சென்னை வந்து சேரும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 180 விமானத்தில் நாடு திரும்புவார் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
மேலும், வைகோ திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டித்து, மலேசியத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












