பனாமா ஆவணங்கள்: ஐஸ்லாந்துப் பிரதமர் ராஜினாமா
பல மில்லியன் டாலர் பணத்தை வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாகக் கூறும் ஆவணங்கள் வெளியானதையடுத்து ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்முந்தூர் குன்க்ளோஸன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

பட மூலாதாரம், Reuters
பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனமான மொஸாக் ஃபொன்ஸெகவிலிருந்து கோடிக்கணக்கான ஆவணங்கள் சமீபத்தில் வெளியாகின.
இந்த ஆவணங்களின்படி, வின்ட்ரின் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்களாக ஐஸ்லாந்து நாட்டின் பிரதமரும் அவரது மனைவியும் இருப்பது தெரியவந்தது.
பல கோடி டாலர் பணத்தை அவர் பதுக்கியிருந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து திங்கட்கிழமையன்று ஐஸ்லாந்து நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்நாட்டின் புதிய பிரதமராக விவசாயத் துறை அமைச்சர் பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அந்நாட்டு குடியரசுத் தலைவரைச் சந்தித்த குன்க்ளோஸன், நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி பரிந்துரைத்தார். ஆனால், அதற்கு குடியரசுத் தலைவர் மறுத்துவிட்டார்.








