You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐ.எஸ் அமைப்பு: இராக்கில் மீண்டும் வலிமை பெறுகிறதா? - #BBCExclusive
- எழுதியவர், ஓர்லா குரின்
- பதவி, பிபிசி செய்திகள், வட இராக்
இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ எஸ் குழுவினர், தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சில பிராந்தியங்களை இழந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இராக்கில் மீண்டும் வலிமை பெறுகிறது என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
ஐ எஸ் தாக்குதல்கள் அதிகரிக்கிறது என்றும் இராக்கில் ஐ.எஸ் குழுவின் கிளர்ச்சி அதிகரித்திருப்பதாகவும் பிபிசியிடம் பேசிய குர்திஷ் மற்றும் மேற்கு உளவுத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது ஐ எஸ் பயங்கரவாத குழுவினர், அல்கொய்தாவை விட மிகவும் ஆபத்தானவர்கள் என்றும் வலிமையான பயிற்சி பெற்றவர்கள் என்றும் குர்திஷ் பயங்கரவாத எதிர்ப்பு படை அதிகாரி லாஹூர் தளபனி கூறுகிறார்.
அவர்கள் சிறந்த நுட்பங்கள், தந்திரங்கள் மற்றும் நிறையப் பணம் வைத்திருக்கிறார்கள் என்றும் லாஹூர் கூறினார்.
ஐ எஸ் குழுக்களால் கனரக வாகனங்கள், ஆயுதங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை வாங்க முடியும். தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு நிறைய ஆர்வம் உள்ளது. அவர்களை வெளியேற்றுவது மிகவும் கடினம் என்றும் லாஹூர் தெரிவித்தார்.
வடக்கு இராக்கில் அமைந்துள்ள குர்திஷ் பிராந்தியத்தின் நிலப்பரப்பில் தான் சுலைமனியா உள்ளது, அங்கு தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து தகர்க்கப்பட்ட கலிஃபைட் பகுதிகளை ஐ எஸ் குழுவினர் 12 மாதங்களில் எப்படி மீண்டும் கட்டி எழுப்பினர் என்பதை லாஹூர் தத்ரூபமாக விலகினார்.
''இந்த பணிகள் விரைவாக நடைபெறுவதைக் காணமுடிந்தது மேலும் தற்போது முழுமையாக முடிந்திருக்கவும் வாய்ப்புள்ளது என நினைக்கிறேன் '' என்றும் லாஹூர் கூறுகிறார்.
பல வகையான ஐ எஸ் குழுக்கள் தற்போது உருவாகிறது, இருப்பினும் அவர்கள் குறிவைக்கப்படுவதைத் தவிர்க்க ஐ எஸ் குழுக்கள் எந்த பிராந்தியத்தையும் கட்டுப்படுத்த முயல்வதில்லை. அதற்குப் பதிலாக அல்கொய்தா பயங்கரவாதிகளைப் போல் அவர்களுக்கான மலைப் பகுதி ஒன்றை ஆக்கிரமிக்க முயற்சி செய்கின்றனர். அவ்வாறு இராக்கில் உள்ள ஹம்ரின் மலை பகுதியைக் கைப்பற்ற ஐ எஸ் குழுவினர் முயல்வதாக லாஹூர் கூறுகிறார்.
அதேபோல் தற்போது இந்த மலைப்பகுதி ஐ.எஸ் குழுவினரின் முக்கிய மையமாக விளங்குகிறது. பறந்து விரிந்த இந்த மலைப்பகுதியை இராக்கின் ராணுவ படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது மிகவும் கடினம். இங்கு உள்ளடங்கிய பல இடங்களும் குகைகளும் உள்ளன.
ஈராக் தலைநகர் பாக்தாதில் தற்போது நிலவும் அமைதியின்மையால் ஐ எஸ் குழுக்கள் வளர வாய்ப்புள்ளது எனவும் லாஹூர் எச்சரித்தார். மேலும் சிறுபான்மை சமூகமான பாக்தாதில் உள்ள சன்னி முஸ்லீம்களின் கொள்கைகள் சுரண்டப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இதுவே இராக்கில் காலம் காலமாக நடைபெறுகிறது.
அரசியல் ரீதியாக நிலவும் அமைதியின்மை, ஐ எஸ் குழுக்களுக்குக் கிறிஸ்மஸ் ஆக அமையலாம் என்று லாஹூர் தளபனி தெரிவிக்கிறார்.
ஐ எஸ் குழு ஆதாயம் அடைவதற்கான காரணம்
2017 ம் ஆண்டு நடந்த குர்திஷ் மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு முறையைத் தொடர்ந்து பாக்தாத் மற்றும் குர்திஷ் பிராந்திய அரசாங்கத்திற்கு இடையே நிலவும் மோசமான உறவால் ஐ எஸ் குழுக்கள் ஆதாயம் அடைகின்றன.
வடக்கு ஈராக் மற்றும் குர்திஷ் பேஷ்மேர்கா பாதுகாப்புப் படைகளுக்கு இடையில் ஆள் அரவமற்ற மிகப் பெரிய இடம் உள்ளது. லாஹூர் தளபணியை பொறுத்தவரை அந்த மலைப்பகுதிகளில் ஐ எஸ் குழுக்கள் மட்டுமே ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிரேட் சாப் மற்றும் டிக்ரிஸ் நதிக்கு இடையே உள்ள கழிமுக பகுதிகளில் ஐ எஸ் குழுவினர் நிரந்தரமாகவே தங்கியுள்ளனர் . இந்த இடத்தில் நாளுக்கு நாள் ஐ எஸ் குழுவினரின் நடமாட்டம் கூடுகிறது எனக் கூறப்படுகிறது.
தற்கொலை படையினராக சிரியா மற்றும் வெளியூர்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட போராளிகளை இங்குள்ள ஐ எஸ் குழுவில் சேர்த்துள்ளதாக பெஷ்மெர்கா உளவுத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராக்கில் மட்டும் 4000 அல்லது 5000 ஐ எஸ் போராளிகள் உள்ளதாக குர்திஷ் உளவுத்துறை அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.
ஐ எஸ் குழுக்கள் இராக்கில் மிகவும் வசதியாக உள்ளதை நினைத்து சர்வதேச சமூகம் கவலை கொள்ளவேண்டும் என்றும் லாஹூர் தெரிவித்தார். அவர்கள் இராக்கில் இருப்பதால் இராக் மற்றும் சிரியாவை தவிர்த்து மற்ற நாடுகளில் தாக்குதல் நடத்துவது குறித்து சிந்திப்பார்கள் என்று மேலும் தெரிவித்தார்.
இராக்கின் சிறப்பு படை தளபதி பிரிகைடர் ஜெனரல் வில்லியம் கூறுகையில் , தற்போது ஐ எஸ் குழுக்கள் குகைகளிலும் பாலைவனத்திலும் பதுங்கியுள்ளனர். அங்கு நீண்ட நாட்கள் தஞ்சம் அடைந்திருப்பது மிகவும் கடினம், அவ்வாறான இடங்களிலிருந்து வேறு இடத்திற்கு மாற பெரிய எண்ணிக்கையில் தான் முயற்சி செய்வார்கள். கடந்த ஆறு மாதங்களில் அவர்கள் 15 பேராகச் சேர்ந்து வேறு இடத்திற்கு நகர முயன்றது எனக்குத் தெரியும். மேலும் ஒரு ஐ எஸ் போராளி பல போராளிகளுக்கு சமமானவர் தான் என மேலும் தெரிவித்தார்.
ஆனால் ஆரம்பக்கட்டத்தில் இருந்து இராக் இத்தகைய பயங்கரவாதங்களை எதிர்கொண்டுள்ளது. இருப்பினும் சிலர் மேற்கிலிருந்து தங்கள் பிராந்தியத்திற்கு புதிய ஆபத்து வரவுள்ளது என்ற அச்சத்தில் உள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: