'மன்னிப்பு' - ஊர் பற்றி எரியும் போது விடுமுறை சென்ற ஆஸ்திரேலியா பிரதமர் - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பற்றி எரியும் போது விடுமுறை சென்றதற்காக மன்னிப்பு கேட்டார் அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன்.
விடுமுறை சென்றது சர்ச்சையானதை அடுத்து தனது ஹவாய் பயணத்தைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் அவர்.
ஆஸ்திரேலியாவில் மூன்று மாநிலங்களில் காட்டுத்தீ பற்றி எரிகிறது.இதன் காரணமாக சனிக்கிழமை ஒருவர் உயிரிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
செப்டம்பரில் பரவ தொடங்கிய இந்த காட்டுத்தீயின் காரணமாக இது வரை 9 பேர் உயிரிழந்துள்ளனர், 700க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகி உள்ளன. லட்சக்கணக்கான ஹெக்டேர் பரப்பு நிலங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன.
புவிவெப்பமயமாதல்தான் இந்த காட்டுத்தீக்கு முக்கிய காரணமென சொல்லப்படுகிறது. இதனை எதிர்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகப் ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் மிக்கேல் தெரிவித்துள்ளார்.
என்ன சொன்னார் பிரதமர்?

பட மூலாதாரம், Getty Images
மக்கள் மிகுந்த அழுத்தத்தில், மன உளைச்சலை உள்ள போது நான் குடும்பத்துடன் சுற்றுலா சென்றதை அறிந்து அவர்கள் கோபத்திலிருந்ததை புரிந்துகொள்ள முடிகிறது என்று மோரிசன் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Reuters
மேலும் அவர், "காட்டுத்தீ குறித்த ஆஸ்திரேலியா மக்களின் கவலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், நம்முடைய அவசரக்கால மேலாண்மை குழு உலகத்திலேயே சிறந்த ஒன்று," என்றார்.
காலநிலை மாற்றம்தான் ஆஸ்திரேலிய பருவநிலையில் தாக்கம் செலுத்துகிறது என்பதை ஒப்புக் கொண்ட அவர், அதேநேரம் இந்த காட்டுத்தீக்கும் காலநிலை மாற்றத்துக்கும் நேரடி தொடர்பில்லை என்றும் தெரிவித்தார்.
தீயணைப்புத்துறை வீரர்கள் இருவர் நியூ சவூத் வேல்ஸ் பகுதியில் உயிரிழந்தனர். அவர்களுக்கு மோர்சன் அஞ்சலி செலுத்தினார்.
காட்டுத்தீக்கு என்ன காரணம்?
40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பம், குறைவான ஈரப்பதம், பலத்த காற்று, இவைதான் இப்போதைய சூழலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் 3000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
கடுமையான வறட்சி காலத்தில் நாம் இருக்கிறோம். பல பகுதிகளில் கடந்த 12 மாதங்களாக ஒரு சொட்டு மழைகூட பெய்யவில்லை என்று நியூ சவூத் வேல்ஸ் தீயணைப்புத் துறை அதிகாரி செப்பர்ட் தெரிவித்தார்.
பிற செய்திகள்
- தமிழக உள்ளாட்சி தேர்தல்: பதவியில் பெண்கள்; அதிகாரத்தில் ஆண்கள் - இந்த நிலை மாறுமா?
- குடியுரிமை, காஷ்மீர், முஸ்லிம்கள் - மீண்டும் இந்தியாவை விமர்சிக்கும் மலேசிய பிரதமர்
- குடியுரிமை திருத்த சட்டம்: 3 கோடி குடும்பங்களை நாட பாஜக முடிவு
- ஹைதராபாத் என்கவுண்டர்: அழுகிய உடல்களை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












