அயோத்தி வழக்கு: விசாரணை அமர்வில் இருந்து நீதிபதி லலித் விலகல் - காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
அயோத்தி வழக்கை விசாரிக்க இருந்த 5 நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி லலித் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
வழக்கு தாக்கல் செய்திருந்த முஸ்லிம் கட்சி ஒன்றின் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராஜீவ் தவான், நீதிபதி லலித் இந்த வழக்கினை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்தார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான கிரிமினல் வழக்கில், அப்போது வழக்குரைஞராக இருந்த லலித் ஆஜராகியுள்ளார். அதனால், இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக இவர் இருக்க முடியாது என்று தவான் குறிப்பிட்டார்.
தவானின் எதிர்ப்பையடுத்து அரசியலமைப்பு அமர்வில் இருந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ் ஏ பாப்டே, என் வி ராமன், யூ யூ லலித் மற்றும் டி.யு.சந்திரசூட் ஆகிய 5 பேரும் கலந்து ஆலோசித்தனர்.
பின்னர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி லலித் இந்த வழக்கில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்வதால் விசாரணையை தள்ளிவைப்பதாக தெரிவித்தார்.
இந்த வழக்கு ஜனவரி 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தை சுன்னி வக்பு வாரியம், நிரோமி அக்ஹாரா மற்றும் ராம் லல்லா ஆகியோர் பிரித்து எடுத்து கொள்ள வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பின் மீது மேல் முறையீடுகள் செய்யப்பட்டன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













