சிங்கப்பூரில் ஒரு டாலர் லஞ்சம் பெற்ற சீனர்கள் மீது வழக்கு

பட மூலாதாரம், Getty Images
சரக்கு வாகன ஓட்டுநர்களிடமிருந்து பொருளை ஏற்றி, இறக்குவதற்கு லஞ்சம் பெற்ற இரண்டு சீன குடியேறிகள் மீது சிங்கப்பூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரிய சரக்கு வாகனங்களில் இருந்து பொருட்களை ஏற்றி, இறக்க பயன்படுத்தப்படும் டிரக்குகளின் ஓட்டுனர்கள் தங்களது பணியை தாமதமின்றி செய்வதற்தாக பலமுறை ஒரு டாலர், அதாவது இந்திய மதிப்பில் 70 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
47 வயதாகும் சென் ஜிலியாங், 43 வயதாகும் ஜாவோ யுகன் ஆகிய சீன குடியேறிகளின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 53 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூர் உலகின் மிகக் குறைவான ஊழல் உள்ள நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இரண்டு ஓட்டுநர்களும் சரக்கு ஏற்றுமதி நிலையம் ஒன்றில் பணிபுரிந்தபோது லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், AFP
ஊழியர்கள் "நன்முறையில்" வேலை பார்க்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூரின் ஊழல் நடைமுறைகள் புலனாய்வு பணியகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
"சிங்கப்பூரில் ஒரு டாலருக்கும் குறைவாக லஞ்சம் பெற்றாலும் கூட அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்சமாக பெறும் தொகை அல்லது காரணம் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது," என்று அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
உலகின் மிகச் சிறிய தீவு நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் ஊழலற்ற நாடு என்ற பெயரை தக்க வைத்துகொள்வதற்காக லஞ்ச புகார்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்கிறது. ட்ரான்ஸ்பரென்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு 2017ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள உலகின் ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில், சிங்கப்பூர் ஆறாவது இடத்தை வகிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












