உலகப் பார்வை: மீண்டும் மிதக்கவைக்கப்பட்டது இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்

இரண்டாம் உலகப் போரின் போது மூழ்கடிக்கப்பட்ட பிரிட்டிஷ் பயணிகள் கப்பல் ஒன்றை மீண்டும் மிதக்க வைத்துள்ளது இலங்கை. இந்த கப்பல் ஜப்பான் வான் வழி தாக்குதலில் இலங்கை கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டது. இலங்கை கடல் படை உதவியுடன் 75 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இக்கப்பல் மிதக்க வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கையை பல மாதங்களாக இலங்கை கிழக்கு கடற்கபடை தலைமை எடுத்து வந்தது.

மக்களை வெளியெற்ற ஒப்பந்தம்

சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த டூமா நகரிலிருந்து மோசாமாக காயமடைந்த மக்களை வெளியேற்ற ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளர்ச்சி குழுவான ஜெய்ஷ் அக் இஸ்லாம், மக்கள் தலைவர்கள் மற்றும் ரஷ்யா ஆகியோருக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக தெரிகிறது.

சர்வதேச நீதிமன்ற பிடியில் ஜிஹாதி

ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம், மாலியில் போர் குற்றங்களுக்காக தேடப்படும் ஒருவரை தனது பிடியில் எடுத்துள்ளது. மாலியின் டிம்பக்டூ பகுதி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜிஹாதி ஆயுத குழு வசமிருந்த போது, அல் ஹசன் அக் அப்துல் அஜீஸ் என்பவர் அங்கு இஸ்லாமிய போலீஸுக்கு தலைமை வகித்து இருக்கிறார்.

அங்குள்ள பெண்களை ஜிஹாதிகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. அதுபோல பழங்கால நினைவு தூண்கள், கட்டடங்கள் உடைக்க உதவி புரிந்தார் என்பதும் இவர் மீதான குற்றச்சாட்டு

ராட்டினம் விபத்து

கிடைமட்டமாகச் சுழலும் ராட்டினம் ஒன்று விபத்துக்குள்ளானதில் தென் கிழக்கு ஃபிரான்ஸில் ஒருவர் இறந்துள்ளார், 12 பேர் காயமடைந்துள்ளனர். தொழில்நுட்ப பிரச்சனைதான் இந்த விபத்துக்கு காரணம் என்று துணை ஆளுநர் லாரண்ட் தெரிவித்தார். காயமடைந்த நான்கு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரி தெரிவித்தார். இந்த ராட்டினத்தை இயக்கியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: