வடகொரிய அணு ஆயுத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது: அமெரிக்கா
வடகொரியாவினால் ஏற்பட்டுள்ள அணு ஆயுத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ் அணு ஆயுதமுள்ள வடகொரியாவை அமெரிக்கா ஏற்காது என்று குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Reuters
தனது தென்கொரியப் பயணத்தின்போது இதைத் தெரிவித்த மேட்டிஸ், தமது சட்டவிரோத, தேவையற்ற ஏவுகணை மற்றும் அணு ஆயுதத் திட்டங்கள் மூலம் தமது அண்டை நாடுகளுக்கு வடகொரியா அச்சுறுத்தலை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார் என ஏபி செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
வருடாந்திர பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்காக தென்கொரியத் தலைநகர் சோல் வந்துள்ள மேட்டிஸ் வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுதத் திட்டங்கள் அந்நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்துமே தவிர பலப்படுத்தாது என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், AFP/Getty
வடகொரியாவின் நடத்தையால் அமெரிக்க-தென்கொரிய பாதுகாப்பு கூட்டு நடவடிக்கையில் புதிய அவசர நிலை தோன்றியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் அமெரிக்கா மீதோ அதன் நட்பு நாடுகள் மீதோ அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால் மாபெரும், திணறச் செய்யும் பதிலடி கிடைக்கும் என்று எச்சரித்தார் அவர்.
இதனிடையே, தமது கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்தது என்று கூறி வடகொரியா பிடித்து வைத்திருந்த தென் கொரிய மீன்பிடிப் படகின் ஊழியர்கள் பத்து பேர் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :








