You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தெற்காசிய பின்னணியுடைய பிரிட்டன் பெண்கள் புற்றுநோயை மறைத்து வாழ்வது ஏன்?
புற்றுநோயை பற்றி சமூகத்தில் நிலவும் களங்கமான முத்திரையால், தெற்காசிய பின்னணியுடைய பல பிரிட்டன் மற்றும் ஐக்கிய ராஜ்ஜிய பெண்கள் தங்களுக்கு இருக்கும் புற்றுநோயை யாருக்கும் தெரியாமல் மறைத்து வாழ்வது பிபிசிக்கு தெரிய வந்துள்ளது.
குடும்பத்தினரின் மறுமொழி எவ்வாறு இருக்குமோ என்று அஞ்சியும், கடவுள் தன்னை தண்டிக்கிறாரா என்று பயந்தும் ஒரு பெண், தனியாக வேதியல் சிகிச்சை மூலம் துன்புறும் பாதையை தேர்ந்தெடுத்துள்ளார்.
புற்றுநோய்க்கு பலரும் மிகவும் தாமதமாக சிகிச்சை பெறுவதற்கு வருவதால், தடுக்கக்கூடிய மரணங்களையும் தடுக்க முடியாமல் போவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்
பெண்ணொருவர் தன்னுடைய மார்பகங்கள் அழுகிய பின்னர்தான் மருத்துவ சிகிச்சைக்கு வந்திருந்தார். அவரது மார்பக புற்றுநோய் ஏற்கெனவே உடலின் வேறு பாகங்களுக்கு பரவிவிட்டதால் அவர் மரணமடைந்தார்
"மிகவும் இருண்ட காலங்கள்"
விக்டோரியா டெர்பிஷைரில் பிபிசி நடத்திய நிகழ்ச்சியில் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்ட பிரவீனா பட்டேல் என்பவர், 36வது வயதிலேயே புற்றுநோய் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
புற்றுநோய் பற்றி பேசுவதுகூட வெட்கக்கேடானதாக கருதப்படும், கடுமையான இந்திய சமூகத்தில் வளர்ந்தவர் அவர். தனக்கு புற்றுநோய் என்பதை கண்டறிந்தபோது, அதனை அவர் மறைத்துவிட முடிவு செய்தார்.
"நான் புற்றுநோய் பெற்றிருப்பதை மக்கள் அறிய வந்தால், அவர்கள் இதனை எனக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை என்று நினைப்பார்கள் என்று எண்ணினேன்" என்று அவர் தெரிவித்தார்.
அவள் மோசமான வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அதனால், கடவுள் அவரை தண்டித்துவிட்டார் என்று மக்கள் பேசுவர் என்று கவலைப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.
சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோதே, தன்னுடைய புற்றுநோயைப் பற்றி யாருக்கும் தெரிந்துவிடாமல் இருக்க தொடர்ந்து மிகவும் கவனமாக நடந்துகொண்டார் பிரவீனா பட்டேல். இதற்காக வேதியல் சிகிச்சை எடுத்துக்கொண்டபோது கடும் தனிமையை அனுபவித்ததாக அவர் கூறுகிறார்.
"நான் தனியாகவே வேதியல் சிகிச்சைகளை பெற்றுவந்தேன்.... மிகவும் இருண்ட நாட்கள் சிலவற்றையும் அனுபவித்தேன்" என்று அவர் விளக்கியுள்ளார்.
சிஎல்எஹெச்ஆர்சி வட-மேற்கு கடற்கரையில் சுகாதார சமத்துவமின்மையில் கவனம் செலுத்தும் தேசிய சுகாதார சேவை ஆய்வுப்பிரிவை சேர்ந்தவரும், இந்த ஆய்வுக்கு தலைமைதாங்கியவருமான பூஜா சாய்னி, இந்த நோய் பற்றிய அவரது மீளாய்வு "உண்மையிலேயே அதிர்ச்சியடைய" வைத்ததாக கூறியிருக்கிறார்.
"தாங்கள் சிகிச்சைக்கு சென்றால், அவர்கள் தலைமுடியை இழக்கின்றபோது, மக்களுக்கு தெரிய வரும் என்பதற்காகவே சில பெண்கள், சிகிச்சையே வேண்டாம் என்ற நிலைக்கு சென்றுள்ளனர்" என்று அவர் விளக்குகிறார்.
பிறர், "தங்களுடைய நோயால் தங்கள் குழந்தைகளை பாதிக்கப்படுவர். அவர்களை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வர மாட்டார்கள் என்று அஞ்சுகின்றனர்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இனம் மற்றும் இறப்பு பற்றிய குறைவான தகவல்களே சேகரிக்கப்பட்டுள்ளதால், இந்த பிரச்சனை எந்த அளவுக்கு பரவியுள்ளது என்பதை கூறுவது கடினம்.
2014 ஆம் ஆண்டு பிரிட்ஜ்வாட்டர் தேசிய சுகாதார சேவை நடத்திய ஆய்வில் மார்பக புற்றுநோய் கொண்டிருக்கும் 15 முதல் 64 வயது வரையான ஆசிய பெண்களின் சராசரி ஆயுட்காலம் 3 ஆண்டுகள் குறைந்திருந்தன.
குடும்பத்தில் ஆண்களின் செல்வாக்கும், சமூகத்திலுள்ள மூத்தோரின் விரிவான செல்வாக்கும் இந்தப் பிரச்சனைக்கு பங்காற்றுகிறது என்று தன்னுடைய ஆய்வு தெரிவிப்பதாக சாய்னி கூறுகிறார்.
"பெண்கள் மருத்துவ சோதனைக்கு செல்ல வேண்டாம் என்று இவர்கள் எண்ணினால், பெண்கள் மருத்துவ சோதனைக்கு செல்வதில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
கலாசார எதிர்பார்ப்புகள்
புற்றுநோய் பற்றி தெற்காசிய சமூகத்தில் வலம்வரும் முத்திரை, இந்த நோயின் பல்வேறு வடிவங்களை சுற்றி சுழல்கிறது.
'சிமிர்' சோதனைக்கு செல்ல பெண்களிடம் ஒரு தயக்கம் காணப்படுகிறது. அவர்கள் தீட்டானவர்கள் அல்லது சுத்தமற்றவர்கள் என்று கருதப்படுவதை விரும்புவதில்லை என்பதுதான் இதற்கு காரணமாகும்.
அவர் தன்னுடைய வேதியல் சிகிச்சையை நிறைவு செய்துள்ளார். குணமடைந்து வருகிறார்.
இவருடைய சிகிச்சையின்போது, பிரவீனா பட்டேலும், அவருடைய கணவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். மனைவி என்பவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கலாசார எதிர்ப்பார்ப்பு இதற்கு ஓரளவுக்கு காரணம் என்று அவர் தெரிவிக்கிறார்.
புற்றுநோய் விடயத்தில் பெண்கள் தேவையின்றி துன்பப்படுவதாக சில நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தெற்காசிய பெண்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் பின்தங்கிய பிண்ணியில் இருந்து வந்தவர்கள். இதனால், புற்றுநோய் பற்றிய அவர்களின் விழிப்புணர்வு நிலைகள் குறைவாக இருக்கலாம் என இது பொருள்படுகிறது.
வெள்ளையர்களை போல, சிறுபான்மையின சமூகங்களை சேர்ந்தோர், இந்நோய் தொடர்பான மருத்துவ சோதனைகளை செய்து கொள்ளவதில்லை.
இவ்வாறு இருப்பதால்தான் தெற்காசிய பெண்கள் தேவையில்லா மரணத்திற்கு ஆளாவதாக 30 ஆண்டுகளுக்கு மேலாக புற்றுநோய் களத்தில் பணியாற்றியுள்ள புற்றுநோய் ஆதரவு மேலாளர் மது அகர்வால் தெரிவிக்கிறார்.
தொடக்கத்திலேயே மருத்துவ பரிசோதனைக்கு வராதிருத்தல், மார்பகங்களை பரிசோதனை செய்யாதிருத்தல், பின்னர், அவர்கள் உதவியை நாடும்போது, இந்த நோய் ஏற்கெனவே பரவியிருக்கும். அப்போது சிகிச்சையால் அதனை கையாள்வது மிகவும் கடினமாக இருக்கும்.
"இவ்வாறு இருக்கும்போது, இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும். எனவே, உங்களுக்கு புற்றுநோய் என்றால், நீங்கள் இறக்கப் போகிறீர்கள் என்று இதில் ஒரு சமூக முத்திரை இணைக்கப்பட்டுள்ளது".
தன்னிடம் வந்த நோயாளி ஒருவர் மிகவும் தாமதமாக வந்ததால், அவருடைய மார்பகம் பூஞ்சனம் பிடித்து அழுகியிருந்தது என்கிறார் மது அகர்வால்.
"ஒருவர் பக்கத்தில் உட்கார முடியாத அளவுக்கு அது துர்நாற்றம் வீசியது" என்று அவர் நினைவுகூர்ந்தார்.
அவருடைய உடலின் பிற பகுதிகளுக்கு புற்றுநோய் பரவி விட்டதால், இளம் குழந்தைகளை கொண்டிருந்த இந்த பெண் மரணமடைந்தார்.
புற்றுநோயை சுற்றியிருக்கும் சமூக முத்திரையால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விக்டோரியா டெர்பிஷிர் நிகழ்ச்சியில் பலரின் வாழ்க்கைக் கதைகள் பகிரப்பட்டன.
"நீ இப்போது இதனை மூடிமறைத்து விடலாம்" என்று கூறி புற்றுநோயை மறைக்க தன்னுடைய குடும்ப உறுப்பினரில் ஒருவர் ஹிஜாபை அணிவதற்கு அறிவுரை வழங்கியதாக சாமினா ஹூசைன் தெரிவித்துள்ளார்.
புற்றுநோயை கடவுள் தனக்கு வழங்கியதாக எண்ணி கொண்டு வேதியல் சிகிச்சை பெறுவதற்கு தன்னுடைய அத்தை மறத்துவிட்டதாக இனா பட் தெரிவித்திருக்கிறார்.
"உதவி பெண்களை காப்பாற்றும்"
இன ரீதியாக புற்றுநோய்க்கு மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது பற்றி அதிக தரவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று சாய்னி தெரிவிக்கிறார். அந்த தரவுகளை ஆய்வு செய்து அதிகம் பாதிக்கப்படும் சமூகங்களுக்கு உதவிகளை நிறையவே வழங்க முடியும்.
சாய்னியின் இந்த ஆய்வு வெளியானவுடன், இதனுடைய பரிந்துரைகளை செயல்படுத்தப் போவதாக இங்கிலாந்தின் பொது சுகாதார மருத்துவ ஆய்வின் இயக்குநர் ஆனி மேக்கியே தெரிவித்திருக்கிறார்.
தெற்காசிய பின்னணி உடைய பெண்களுக்கும், பின்தங்கிய பின்னணியையும் கொண்ட பெண்களுக்கு உதவுவதற்கு இது நிச்சயம் பயன்படும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார்.
புற்றுநோய் எவ்வாறு பரவுகிறது என்பதை காட்டும் துல்லிய வீடியோ
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்