கி.ராஜநாராயணன் மறைவு- "பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி"- கமல் உள்ளிட்ட பிரபலங்கள் உருக்கம்!

'கரிசல் இலக்கியத்தின் தந்தை' என அழைக்கப்படும் மூத்த எழுத்தாளர் கி. ராஜநாரயணனின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன், சிவகுமார், கவிஞர் வைரமுத்து உள்பட திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

உடல்நல குறைவால் கடந்த சில நாட்களாக சிகிச்சை எடுத்து வந்த அவர் உயிரிழந்த செய்தி, அவரது வாசகர்களை வட்டாரத்தில் மட்டுமின்றி தமிழ் கலை, இலக்கிய உலகிலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், பல திரையுலக பிரபலங்களும் கி.ரா மறைவிற்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகரும், 'மக்கள் நீதி மய்ய'த்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கி.ரா. மறைவிற்கு தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

கரிசல் வட்டாரத்தை எழுதி பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி கி.ராஜநாராயணன் நம்மை நீங்கினார் என தனது அஞ்சலியை அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகுமார், தன்னுடைய 80வது வயதில் ஒரு ஞானத்தந்தையை இழந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், கி.ராவும் கணபதி அம்மாளும் எனக்கு இன்னொரு தாய், தந்தையர் எனவும் அவர்களுடன் 35 வருட காலமாக தனக்கு உறவு உண்டு எனவும் கூறியுள்ளார்.

"அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணைப் பற்றி எழுதிய கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், கரிசல்காட்டு கடுதாசி, வட்டார வழக்கு சொல்லகராதி போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். இந்த கொரோனா பொது முடக்கத்தால் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செய்ய முடியாததற்கு மனமார வருந்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இயக்குநரும், 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், கி.ரா. மறைவுற்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

"தன் இறுதி மூச்சை சுவாசிக்கும் நொடிவரை எழுத்துலகில் பெருமை மிக்க படைப்புகளை செய்துள்ளார். ஒப்பற்ற இலக்கிய பெருவாழ்வினை வாழ்ந்து, தமிழின் பெருமை மிக்க இலக்கிய அடையாளமாக, கரிசல் நில இலக்கியத்தின் முகமாக மாறியிருக்கிற ஐயாவின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு. அவர் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது மகத்தான படைப்புகள் வாயிலாக என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்" என நீண்ட இரங்கல் குறிப்பை சீமான் பகிர்ந்துள்ளார்.

கவிஞர் வைரமுத்துவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கி.ரா. மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கி.ரா வட்டார மொழி இலக்கியத்தின் ஆதி ஊற்று எனவும் அவரது மறைவால் இலக்கிய நதிகளில் கண்ணீர் ஓடுகிறது எனவும் உருக்கமாக கூறியுள்ளார். மேலும்அவர் மறைவுக்கு அரசு மரியாதை அறிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தனது நன்றியை தெரிவித்ததோடு, அரசு அவருக்கு எதிர்காலத்தில் நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.

நடிகை ப்ரியா பவானி ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் நூலகர் ஒருவர் பரிந்துரைத்த 'கோபல்ல கிராமம்' மூலமாக அறிமுகமானவர் கி.ராஜநாரயணன் என தெரிவித்துள்ளார்.

அவரது சிறுகதைகள் இதுவரை வாழாத புதிய உலகத்தை மனதில் பதிய வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், "எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை. இப்பவும் என்னை புன்னகைக்க வைக்கிறார். நிறைவான வாழ்க்கை" என அவரது புகைப்படத்துடன் உருக்கமான இரங்கல் குறிப்பை பகிர்ந்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :