You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சரோஜ் கான் மரணம்: ஶ்ரீதேவி, மாதுரியை நடனத்தால் பிரபலமாக்கியவர்
இந்தி திரைப்பட உலகில் முன்னணி நடன இயக்குநராக இருந்த சரோஜ் கான் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மும்பையில் காலமானார்.
சரோஜ் கான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு வயது 72.
மும்பை பாந்திராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சுவாசக் கோளாறு காரணமாக ஜூன் 20ஆம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் கோவிட்-19 தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார் சரோஜ் கான்.
இவர் சுமார் இரண்டாயிரம் பாடல்களுக்கு நடன இயக்குநராக இருந்துள்ளார்.
சரோஜ் கான் மூன்று முறை சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.
1948ஆம் ஆண்டு பிறந்தவர் சரோஜ் கான். இவரது பெற்றோர் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள். இவரது குடும்ப சூழல் நன்றாக இல்லாததால் குழந்தை பருவத்திலேயே நடிக்க ஆரம்பித்தார். இவர் சோகன்லால் என்பவரிடம் நடன உதவியாளராக இவர் சேர்ந்தார்.
1974ல் வெளியான 'கீதா மேரா நாம்' எனும் படத்தில் இவர் நடன இயக்குநராக அறிமுகமானார். அதற்கு முன் நடன உதவியாளராக பல படங்களில் பணியாற்றினார்.
ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித் ஆகியோர் நடிப்புக்கு இவர் நடனம் அமைத்த பாடல்கள் மூலம் மிகவும் பிரபலமானார்.
கடைசியாக 2019ல் வெளியான 'தபா ஹோகயே' எனும் இந்திப் படத்துக்கு அவர் நடன இயக்குநராக பணியாற்றி இருந்தார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பின்பு தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரோஜ் கான் ஓர் உணர்வுபூர்வமான பதிவை வெளியிட்டு இருந்தார்.
"நான் உன்னுடன் பணியாற்றியதில்லை ஆனால் பலமுறை நாம் சந்தித்திருக்கிறோம். உன் வாழ்க்கையில் எது தவறாகிப் போனது? நீ இப்படி ஓர் அதீத முடிவை எடுத்தது எனக்கு மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது. மூத்தவர்கள் யாரிடமாவது நீ பேசி இருந்தால் அது உனக்கு உதவி இருக்கலாம். அது உன்னை பார்த்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கலாம்.
கடவுள் உன் ஆன்மாவை ஆசீர்வதிப்பாராக. உன் தந்தையும் சகோதரியும் இப்போது எத்தகைய உணர்வுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. காலம் அவர்களுக்கு வலிமையை தரட்டும் நீ
நடித்த அனைத்து படங்களிலும் உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும். இனிமேலும் உன்னை நான் மிகவும் நேசிப்பேன்," என்று அவர் பதிவிட்டிருந்தார்.
பிற செய்திகள்:
- சாத்தான்குளம் சம்பவம்: தலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு
- சாத்தான்குளம் சம்பவம்: "காவல்துறையை சேர்ந்த யாரும் எங்களிடம் பேசவில்லை"
- புதுக்கோட்டையில் ஏழு வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை
- சீனாவில் உய்குர் முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாட்டை கடுமையாக்கும் அரசு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: