You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'காலா' படத்தை ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தவர் கைது
ஃபேஸ்புக்கில் காலா திரைப்படத்தை நேரடி ஒளிபரப்பு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ள காலா திரைப்படம், நேற்று இரவு ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட படம் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த தகவலை கேட்டறிந்த படத்தின் தயாரிப்புக்குழு அதிர்ச்சியடைந்தது.
அது தொடர்பான தகவல்களும், பல்வேறு விமர்சனங்களும், கேள்விகளும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த சூழலில், இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தனது ட்விட்டர் வலைத்தளத்தில் விளக்கம் அளித்தார்.
அதில், காலா திரைப்படம் சிங்கப்பூரிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதாகவும், அதை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து ரஜினியின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் விரைவான நடவடிக்கைக்காக தனது நன்றியை தெரிவித்தார்.
இதற்கிடையே இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னையில் சில திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியானது.
ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு வெளியாகும் முதல் திரைப்படம் இது என்பதால், அவரது தீவிர ரசிகர்கள் இந்த வெளியீட்டை வழக்கத்தைவிட கூடுதலாக கொண்டாடினர்.
பிரம்மாண்ட கேக்குகளை வெட்டியும், ரஜினியின் கட்டவுட்டுக்கு பூஜை போட்டும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டங்கள் தொடர்ந்தன.
காலா படத்தில் ரஜினியின் கெட்டப்பான கருப்பு சட்டை, கருப்பு வேட்டி அணிந்து ரஜினி ரசிகர்கள் மகிழ்ந்தனர்.
ரஜினிகாந்தின் ஜப்பான் நாட்டு ரசிகர்களும் சென்னையில் முதல் காட்சியை காண திரையரங்குகளுக்கு வந்திருந்தனர்.
கர்நாடக மாநிலத்திலும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று கிட்டத்தட்ட 150 திரையரங்குகளில் காலா திரைப்படம் உறுதியாக திரையிடப்படும் என தயாரிப்புக்குழு கூறியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்