இயக்குநர், நடிகர் மனோபாலா காலமானார் - தமிழ் சினிமாவில் அவரது பங்களிப்பு என்ன?

இயக்குநரும் நடிகருமான மனோபாலா காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பாதிப்புக்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனோபாலா.

1982-ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகம் ஆனார்.

ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் திரைப்படம் அவரது இயக்கத்தில் வெளியானது. பெரிய வெற்றியைப் பெற்ற சதுரங்க வேட்டை திரைப்படத்தை மனோபாலா தயாரித்தார்.

குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மனோபாலா பங்கேற்றிருக்கிறார்.

மனோபாலா வாழ்க்கைக் குறிப்பு

தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் 1956இல் பிறந்தவர் மனோபாலா. பாலச்சந்தர் எனும் இயற்பெயரைக் கொண்ட அவர், 1970களில் இயக்குநராகும் கனவோடு சினிமாத்துறையில் பணியாற்றத் தொடங்கினார். அதன்பிறகு நடிகர் கமல்ஹாசன் பரிந்துரையில், இயக்குநர் பாரதிராஜாவின் உதவி இயக்குநரானார். பாலச்சந்தர், மனோபாலாவாக மாறியது அப்போதுதான்.

‘புதிய வார்ப்புகள்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியபோதே, அவரது மெலிந்த தேகமும், நகைச்சுவை நிறைந்த உடல்மொழியும் இயக்குநர் பாரதிராஜாவை ஈர்க்க, முதல் படத்திலேயே சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அதன்பிறகு, கல்லுக்குள் ஈரம், கோபுரங்கள் சாய்வதில்லை, டிக் டிக் டிக் என எக்கச்சக்கமான படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், முன்னணி நடிகர்களின் படங்களில் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்குமளவிற்கு தன்னை தகவமைத்துக் கொண்டார். அதனால், சுமார் 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் அவரால் நடிக்க முடிந்தது.

சிறுசிறு வேடங்களில் நடித்தாலும் மனோபாலாவின் தோற்றம் பார்வையாளர்களுக்கு எளிதில் அவரை அடையாளம் காட்ட பரிச்சயமான நடிகரானார் மனோபாலா. தொடர்ந்து, 1982-ல் ‘ஆகாய கங்கை’ திரைப்படத்தின் மூலம் இயக்குநரானார். கார்த்திக் நாயகனாக நடித்த அந்தப் படம், பிரபல இயக்குநர் மணிவண்ணன் கதாசிரியராக பணியாற்றினார்.

20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கும் மனோபாலாவின் திரை வாழ்க்கையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஊர்க்காவலன்’, ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ போன்ற படங்கள் பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. தமிழ் மட்டுமின்றி, ’மேரா பதி ஷிர்ப் மேரா ஹை’ எனும் இந்தி படத்தையும், ‘டிசம்பர் 31’ எனும் கன்னட படத்தையும் இயக்கியிருக்கிறார்.

இயக்குநர், நடிகராக வலம் வந்த மனோபாலா, 2014-ல் வெளியான ‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் தயாரிப்பாளரானார். எச். வினோத் இயக்குநராக அறிமுகமான அந்தப் படம் வியபார ரீதியாக வெற்றியடைந்ததோடு, நற்பெயரையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து, பாம்பு சட்டை, சதுரங்க வேட்டை- 2 ஆகிய படங்களையும் அவர் தயாரித்திருக்கிறார்.

தொடர்ச்சியாக படப்பிடிப்புகளில் கலந்துகொண்டிருந்த மனோபாலா, கடந்த 15 நாட்களாக கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் இரங்கல்

மனோபாலா மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மனோபாலா மறைவுக்கு திரையுலகில் அவரது ஆசானாக இருந்த இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார். மனோபாலா மிகச்சிறந்த ஓவியர், மிகவும் மென்மையானவர், அவரது திரைப்படங்கள் வன்முறை இல்லாமல் மிகவும் மென்மையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள் கார்த்தி, கவுதம் கார்த்திக், இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் உள்பட திரைத்துறையினர் பலரும் இயக்குநர் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: