உயிரை பறிக்கும் மெத்தனால் கடும் கட்டுப்பாடுகளையும் மீறி கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு கிடைப்பது எப்படி?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்
    • எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
    • பதவி, பிபிசி தமிழ்

மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடிப்பவர்களின் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்? அரசின் அதீத கட்டுப்பாடுகளையும், கண்காணிப்பையும் மீறி மெத்தனால் கள்ளச்சாராய வியாபாரிகளின் கைகளில் சிக்குவது எப்படி? என்பதை விளக்கும் வகையில், கடந்த ஆண்டு மரக்காணம் சம்பவத்தின் போது எழுதப்பட்ட இந்த கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.

மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்புகள் அடுத்தடுத்து பல கேள்விகளுக்கு வித்திட்டுள்ளன. மெத்தனால் கலந்த சாராயம் எந்த அளவுக்கு அபாயகரமானது? மனித உடலுக்குள் மெத்தனால் கலந்ததும் என்ன நடக்கிறது? உயிர் போகும் அளவுக்கு அதில் அப்படி என்ன ஆபத்து? உயிருக்கு ஆபத்தான, தொழிற்சாலைகளில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய மெத்தனால் கள்ளச்சாராய வியாபாரிகளின் கைகளில் எப்படி சேர்கிறது?

தமிழ்நாட்டில் விஷ சாராய உயிரிழப்புகள் ஒன்றும் புதிதல்ல. குறிப்பாக, கொரோனா பேரிடர் காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் வீட்டிலேயே முடங்கியிருக்க நேரிட்ட போது, சிலர் போதைக்காக தின்னர் போன்ற பலவற்றையும் போதை வஸ்துகளாக பயன்படுத்திய செய்திகள் வந்திருக்கின்றன. போதைக்காக விபரீத வழிகளை முயற்சித்த சிலர் ஆங்காங்கே உயிரிழந்த செய்தியும் நம்மை எட்டியுள்ளது.

2019-ம் ஆண்டு கடலூரில் தொழிற்சாலையில் இருந்த மெத்தனாலை போதைக்காக குடித்த 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததே, ஒரே நிகழ்வில் அதிகம் பேர் உயிரிழந்த அண்மைக்கால பதிவாக இருக்கிறது. அதுபோன்ற தருணங்களில் எல்லாம், மெத்தனால் உயிரைப் பறிக்கக் கூடியது என்று அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் அதன் ஆபத்தை அனைவரும் உணரச் செய்ய பலவிதங்களிலும் முயற்சித்தே வந்துள்ளன.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆனாலும், அதையெல்லாம் மீறி குஜராத், பிகார் ஆகிய மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் விஷ சாராயம் 20-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்துள்ளது. கள்ளச்சாராயம் ஆபத்தானது என்று தெரிந்திருந்தும் கூட சிலர் அதனை நாடுவது ஏன்? மெத்தனால் எந்த வகையில் உயிரைப் பறிக்கிறது? அது நுழைந்ததும் மனித உடலுக்குள் என்ன நடக்கும்? என்பது உள்ளிட்ட கேள்விகளை சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராமனிடம் முன்வைத்தோம்.

மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்புகள்
படக்குறிப்பு, தேவகி, விஷ சாராயத்திற்கு கணவரை பறி கொடுத்தவர்

மெத்தனால் உயிரைப் பறிப்பது எப்படி?

"கள்ளச்சாராயத்திற்கும், விஷ சாராயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. மதுவை அரசு அனுமதியில்லாமல், உரிமம் இல்லாமல் காய்ச்சி குடித்தால் அது கள்ளச்சாராயம்.

அதுவே, போதைக்காக மெத்தனால் கலக்கப்படும் போது விஷ சாராயமாகி விடும். எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியது. மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும்.

அது தொழிற்சாலைகளில் சில வேதிப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு வரும் மெத்தனாலில் 90 முதல் 100 சதவீதம் ஆல்கஹால் இருக்கும். அந்த மெத்தனாலை, நீர்த்துப் போகச் செய்யாமல் அப்படியே குடித்தால் ஓரிரு நிமிடங்களில் மரணம் சம்பவிக்கும்." என்று அவர் கூறினார்.

மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்புகள்
படக்குறிப்பு, மருத்துவர் ஜெயராமன்

மேலும் தொடர்ந்த மருத்துவர் ஜெயராமன், மெத்தனால் மனித உடலுக்குள் நுழைந்ததும் உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தை சீர்குலைத்துவிடும். வயிற்றுக்குள் விஷ சாராயம் சென்றவுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றும். ஆனால் அடுத்த சில விநாடிகளில் வயிறும், குடலும் வெந்துவிடும். மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்தவர்கள் நுரைநுரையாக வாந்தி எடுப்பார்கள். அந்த வாந்தி எல்லாம் நுரையீரலுக்குச் சென்றுவிடும் என்பதால் சட்டென்று மூச்சு அடைத்துவிடும். அதேநேரத்தில் நரம்பு மண்டலம் வழியாக மெத்தனாலின் விஷத்தன்மை மூளைக்கும் பரவுவதால், மூளை செல்கள் உடனே அழிந்துவிடும். மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அவர்கள் மயக்கமடைந்துவிடுவார்கள். அதிக போதை வேண்டும் என்ற எண்ணத்தில் அறியாமையால்தான் இதனை சிலர் சாப்பிடுகின்றனர். அதிக நேரம் போதையில் மிதக்கச் செய்வதன் மூலம் இது தங்களை நேராக சொர்க்கத்திற்கே கூட்டிச் செல்லும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால், நடப்பதோ வேறு," என்று விவரித்தார்.

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மெத்தனாலை தனி மனிதர்களின் கைகளில் கிடைக்கவிடாமல் செய்ய ஏற்கனவே பல கடுமையான விதிகள் அமலில் உள்ளன. தொழிற்சாலை பயன்பாட்டிற்காக மட்டுமே மெத்தனால் பயனாகும் என்பதால், அதனை வாங்குவது, பயன்படுத்துவது என அனைத்தையும் கண்காணிக்க ஏற்கனவே பல அமைப்புகள் உள்ளன. தொழிற்சாலைகள் கடைபிடிக்க வேண்டிய பல கட்டுப்பாடுகளும் விதிகளும் இருக்கவே செய்கின்றன. இவை அத்தனையையும் மீறி கள்ளச்சாராய வியாபாரிகளின் கைகளுக்கு மெத்தனால் கிடைப்பது எப்படி? என்ற கேள்விக்கு ஓய்வு பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி பதில் தந்தார்.

"பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் ஒவ்வொரு பகுதியிலும் எந்தெந்த தொழிற்சாலைகளில் மெத்தனால் கிடைக்கும் என்பதை கள்ளச்சாராய வியாபாரிகள் தெரிந்து வைத்துக் கொள்வார்கள். அதேபோல், கள்ளச்சாராய வியாபாரிகள் விவரத்தை தொழிற்சாலை உரிமையாளர்களும் அறிந்திருப்பார்கள். அவர்களிடம் மெத்தனாலை விற்பதன் மூலம் கூடுதல் பணம் கிடைக்கும் என்பதே காரணம். இந்த சட்டவிரோத கூட்டுதான், உயிரைப் பறிக்கும் மெத்தனால் கள்ளச்சாராயம் வழியாக மனித உடலுக்குள் நுழைய வழியமைக்கிறது.

மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்புகள்

பட மூலாதாரம், Getty Images

மெத்தனால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என்பதால் அதனை விற்பனை செய்ய கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. மெத்தனாலை வாங்க வேண்டுமென்றால் அதற்கான உரிமம் வைத்திருப்பது அவசியம். அது போக, வாங்கும் மெத்தனாலை எவ்வாறு பயன்படுத்துகிறோம்? எவ்வளவு பயன்படுத்துகிறோம்? எவ்வளவு இருப்பு இருக்கிறது? என்பது போன்ற விவரங்களை தொழிற்சாலைகள் பதிவு செய்து பராமரிப்பது கட்டாயம். இத்தனை கட்டுப்பாடுகள், விதிமுறைகளை மீறியே பணம் சம்பாதிக்கும் ஆசையில் மெத்தனாலை கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு தொழிற்சாலை உரிமையாளர்கள் விற்பனை செய்கிறார்கள்" என்று அவர் விளக்கம் அளித்தார்.

மெத்தனால் விற்பனை - ஆலை உரிமையாளர் கைது

மரக்காணம் கள்ளச்சாராய வழக்கிலும் காவல்துறை நடவடிக்கை அதனை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது. விழுப்புரத்தைச் சேர்ந்த இளையநம்பி என்பவருக்குச் சொந்தமான சென்னை மதுரவாயலை அடுத்துள்ள வானகரத்தில் உள்ள ரசாயன ஆலையில் இருந்து 1,000 லிட்டர் மெத்தனால் சட்டவிரோதமாக கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மரக்காணம் ‌மற்றும் செங்கல்பட்டில் இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான விஷ சாராயத்தை தயாரிக்க இந்த மெத்தனாலே பயன்படுத்தப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஆலை உரிமையாளர் இளையநம்பி மற்றும் அங்கு பணிபுரிந்த சதீஸ் (27), மணிமாறன் (27), கதிர் (27), உத்தமன் (31), ஆகிய 5 பேரை செங்கல்பட்டு காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். அந்த நிறுவனத்தில் இருந்த சிறிதளவு மெத்தனால் வேதிபொருளை பறிமுதல் செய்து சோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: