அமெரிக்கா - இரானின் ஆயுத கையிருப்பு குறைந்தால் போர் எப்படி மாறும்?

பட மூலாதாரம், US Navy via Getty Images
- எழுதியவர், ஜோனாதன் பீல்
- பதவி, பாதுகாப்பு செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நாட்டிடம் முக்கியமான ஆயுதங்கள் 'கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில் உள்ளன' என்று கூறியுள்ளார்.
மறுபுறம், அமெரிக்கா திட்டமிட்டதை விட நீண்ட காலம் 'எதிரியை எதிர்த்து நிற்கும் திறன்' எங்களிடம் உள்ளது என்று இரானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆயுத கையிருப்பு மற்றும் விநியோகம் மட்டும் இந்த மோதலின் முடிவை தீர்மானிக்காது. யுக்ரேன் நீண்ட காலமாக ரஷ்யாவைவிட குறைந்த வீரர்கள் மற்றும் குறைந்த ஆயுதங்களுடனும் போராடி வருகிறது. இருப்பினும் ஆயுதங்கள் ஒரு முக்கிய அம்சமாகும்.
தொடக்கத்திலிருந்தே இந்த ராணுவ நடவடிக்கைகளின் வேகம் மிக அதிகமாக உள்ளது. உற்பத்தி செய்யப்படுவதை விட வேகமான விகிதத்தில் இரு தரப்பினரும் ஏற்கனவே தங்களது ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
டெல் அவீவை சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் மதிப்பீட்டுப்படி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்கனவே 2,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஒவ்வொரு தாக்குதலிலும் பல்வேறு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இரான் ஏற்கனவே 571 ஏவுகணைகளையும் 1,391 டிரோன்களையும் ஏவியுள்ளதாக அந்த நிறுவனம் கூறியது. அவற்றில் பல இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கலாம்.
போர் நீண்ட காலம் நீடிக்கும் பட்சத்தில், இரு தரப்பிற்கும் இந்த அளவிலான மோதலை தொடர்ந்து பராமரிப்பது கடினமான ஒன்றாக மாறும்.

பட மூலாதாரம், Getty Images
இரான் நிலை என்ன?
இரான் ஏவும் ஏவுகணைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதை ஏற்கனவே கவனித்துள்ளதாக மேற்கத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.
போரின் முதல் நாளில் நூற்றுக்கணக்கில் இருந்த ஏவுகணைகள் தற்போது டஜன் கணக்காக குறைந்துள்ளன.
போருக்கு முன்னதாக, இரானிடம் 2,000-க்கும் மேற்பட்ட குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் கையிருப்பில் இருந்ததாக மதிப்பிடப்பட்டது.
எதிரிகளை குழப்பத்தில் வைத்திருப்பதற்காக இத்தகைய புள்ளிவிவரங்கள் ரகசியமாக வைக்கப்படுவதால், எந்தவொரு ராணுவமும் தங்களிடம் உள்ள ஆயுதங்களின் துல்லியமான எண்ணிக்கையை வெளியிடுவதில்லை.
இந்த போர் தொடங்கிய முதல் நாளான பிப்ரவரி 28 முதல் இரானின் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதல்கள் 86% குறைந்துள்ளதாக அமெரிக்க மூத்த தளபதி ஜெனரல் டான் கெய்ன் புதன்கிழமையன்று கூறினார்.
போருக்கு முன்னதாக பல்லாயிரக்கணக்கான 'ஷாஹெத்' டிரோன்களை இரான் தயாரித்ததாகக் கருதப்படுகிறது.
இந்த வடிவமைப்பு ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது
ரஷ்யா தனது சொந்த ஷாஹெத் பதிப்பை பயன்படுத்தி யுக்ரேனில் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா கூட இந்த வடிவமைப்பை நகலெடுத்துள்ளது.
ஆனால் மோதல் தொடங்கிய முதல் நாளில் இருந்து இரானின் டிரோன் ஏவுதல்கள் 73% குறைந்துள்ளதாக கெய்ன் கடந்த வாரம் கூறினார். இரான் தனது செயல்பாடுகளின் வேகத்தை தக்கவைக்க போராடி வருவதாகத் தெரிகிறது.
இந்த வியத்தகு சரிவு, கையிருப்புகளை பாதுகாக்கும் ஒரு முயற்சியாகவும் இருக்கலாம். ஆனால் உற்பத்தியைத் தொடர்வது இனி கடினமாகவே இருக்கும்.

பட மூலாதாரம், Anadolu via Getty Images
வான்வழி தாக்குதல் வரம்புகள்
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விமானங்கள் இப்போது இரான் மீது வான்வழி ஆதிக்கத்தை பெற்றுள்ளன. இரானின் பெரும்பாலான வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன. இப்போது இரான் விமானப்படையும் வலிமையாக இல்லை.
போரின் அடுத்த கட்டம் இரானின் ஏவுகணை மற்றும் டிரோன் ஏவுதளங்களை அழிப்பது மற்றும் ஆயுதக் கிடங்குகள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அழிப்பதில் கவனம் செலுத்துவதாக அமெரிக்கா கூறுகிறது.
இரானின் போர் புரியும் திறனைக் குறைப்பது இப்போது அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எளிதாக இருக்கலாம். ஆனால் அதன் அனைத்து ஆயுதக் கிடங்குகளையும் அழிப்பது கடினமாக இருக்கும்.
இரான் ஒரு பெரிய நாடு. ஆயுதங்களை மறைக்க இன்னும் வாய்ப்புகள் உள்ளன. சமீபத்திய வரலாறு வான்வழியாக நடத்தப்படும் போர்களின் வரம்புகளையும் காட்டுகிறது.
இராண்டு ஆண்டுகள் நடத்திய தீவிர குண்டுவீச்சுக்கு பிறகும் காஸாவில் ஹமாஸை இஸ்ரேல் ராணுவம் இன்னும் அழிக்கவில்லை.
ஏமனில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஒரு வருட கால அமெரிக்க குண்டுவீச்சு தாக்குதலில் இருந்து தப்பிப்பிழைத்தனர். அவர்களின் சில ஆயுதங்களும் அவ்வாறே தப்பின.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா
அமெரிக்கா உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவமாகத் தொடர்கிறது. அதன் ஆயுத கையிருப்பு மற்ற எந்த நாட்டையும் விட அதிகமானதாக இருக்கும்.
ஆனால் அமெரிக்க ராணுவம் பெரும்பாலும் விலையுயர்ந்த நவீன ஆயுதங்களையே நம்பியுள்ளது. அவை குறைந்த அளவில் தயாரிக்கப்படுகின்றன.
உற்பத்தியை விரைவுபடுத்துமாறு வலியுறுத்துவதற்காக பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களை டிரம்ப் சந்தித்தார். இந்த போர் அமெரிக்க ஆயுத வளங்களில் அழுத்தத்தை உண்டாக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும்.
அமெரிக்காவிற்கு இப்போது நெருக்கமான தூரத்தில் இருந்து தாக்குதல்களை நடத்துவதற்கு சுதந்திரம் கிடைத்துள்ளதால், அந்த அழுத்தம் ஓரளவு குறைந்திருக்கலாம்.
டோமாஹாக் குரூஸ் ஏவுகணைகள் போன்ற அதிக விலை கொண்ட மற்றும் அதிநவீன நீண்ட தூரம் செல்லும் ஆயுதங்களான "ஸ்டாண்ட்-ஆஃப் ஆயுதங்களை" பயன்படுத்துவதை அமெரிக்கா ஏற்கனவே நிறுத்திவிட்டதாக கெய்ன் கூறினார்.
அமெரிக்க விமானப்படை இப்போது குறைந்த விலையிலான "ஸ்டாண்ட்-இன்" ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது. அதாவது, இவை இலக்கின் மீது நேரடியாக வீசக்கூடிய ஜே.டி.ஏ.எம் குண்டுகள் போன்றவை.
மார்க் கான்சியன் என்ற முன்னாள் அமெரிக்க கடற்படை கர்னல், உத்தி மற்றும் சர்வதேச ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார்.
''ஆரம்பத்தில் தொலைதூரத்திலிருந்து தாக்குதல் நடத்திய பிறகு, இப்போது அமெரிக்க ராணுவம் அதிக விலை உள்ள நீண்ட தூர ஆயுதங்களுக்கு பதிலாக குறைந்த செலவான ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை பயன்படுத்த முடியும்.'' என்றார் மார்க் கான்சியன்
அமெரிக்காவால் இந்த அளவிலான போரை "கிட்டத்தட்ட காலவரையின்றி" தொடர முடியும் என்று அவர் தெரிவித்தார்.
போர் நீண்ட காலம் நீடிக்கும் போது, இலக்குகளின் பட்டியலும் சிறியதாகிறது. அதாவது செயல்பாடுகளின் வேகம் படிப்படியாகக் குறையும்.

பட மூலாதாரம், Getty Images
வான் பாதுகாப்பு
அமெரிக்காவிடம் பல்லாயிரக்கணக்கான ஜே.டி.ஏ.எம் குண்டுகள் இருப்பதாகவும், ஆனால் விலையுயர்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளின் இருப்பு குறைவாக இருப்பதாகவும் கான்சியன் கூறுகிறார்.
மோதலின் ஆரம்ப கட்டங்களில், இரானின் பதிலடி தாக்குதல்களின் அச்சுறுத்தலை முறியடிக்க அவை அவசியமாக இருந்தன.
பேட்ரியாட் ஏவுகணைகளுக்கு அதிக தேவை உள்ளது. அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, அதன் அரபு நட்பு நாடுகளுக்கும் யுக்ரேனுக்கும் கூட அதிகமான தேவை உள்ளது.
ஒவ்வொரு இடைமறிப்பு ஏவுகணையும் 4 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக செலவாகும்.
மேலும் அமெரிக்கா தற்போது ஆண்டுக்கு சுமார் 700 ஏவுகணைகளை உற்பத்தி செய்வதாக நம்பப்படுகிறது.
இரானால் இன்னும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவ முடிந்தால், அது இந்த வரையறுக்கப்பட்ட கையிருப்புகளை குறைக்கும்.

அமெரிக்காவிடம் சுமார் 1,600 பேட்ரியாட் ஏவுகணைகள் கையிருப்பில் இருக்கலாம் என்று கான்சியன் மதிப்பிடுகிறார்.
ஆனால் சமீப நாட்களில் அவை பயன்படுத்தப்பட்டதால் குறைந்து இருக்கலாம்.
வானிலிருந்து தரையை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலை அமெரிக்கா "நீண்ட காலம்" தொடர்ந்து நடத்த முடியும் என அவர் கூறுகிறார்.
ஆனால் எதிரியின் தாக்குதலில் இருந்து காக்கும் வான்வழி பாதுகாப்பு என்பது "சற்றே உறுதியற்றதாக" உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"அதிபர் டிரம்ப் பேட்ரியாட் ஏவுகணைகளை அதிகளவில் பயன்படுத்த முடிவெடுத்தால், இரானியர்களை விட அமெரிக்காவால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். இதனைச் செய்வதில் ஒர் அபாயம் உள்ளது. அப்படி செய்தால், பசிபிக் பகுதியில் ஏற்படக்கூடிய மற்றொரு சாத்தியமான மோதலை சமாளிக்க அமெரிக்காவிடம் குறைவான பேட்ரியாட் ஏவுகணைகளே இருக்கலாம்''
ஆனால்,"இரானால் எங்களை விட நீண்ட காலம் நீடிக்க முடியாது" என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உறுதிபடக் கூறுகிறார். இதுகுறித்து அவர் சொல்வது ஒருவேளை சரியாக இருக்கலாம்.
தமிழ்நாடு தேர்தல் 2026 - உங்கள் பகுதியில் உள்ள சாதிய பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள்
தமிழ்நாடு தேர்தலை எதிர்கொள்ளும் இந்த தருணத்தில், உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகளை வெளிக்கொண்டு வருவதற்கான தளத்தை பிபிசி தமிழ் வழங்குகிறது.
உங்கள் பகுதியில் சாதிய பாகுபாடா? தீண்டாமை பிரச்னை குறித்து குரல் எழுப்பியும் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்கவில்லையா?
உங்கள் பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள். அவற்றை செய்தியாக்கி அரசிடம் கொண்டு சேர்க்கலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்த தகவல்களை உள்ளீடு செய்யுங்கள்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












