சாம்பியன்ஸ் டிராஃபி 2025: பாகிஸ்தான் சொந்த மண்ணிலேயே தோல்வியை தழுவ என்ன காரணம்?

சாம்பியன்ஸ் டிராபி 2025, Nz Vs Pak,

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க. போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

பாகிஸ்தானில் 29 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி சார்பில் முதல் கிரிக்கெட் தொடரை காண ரசிகர்கள் நேற்று (பிப். 19) ஆவலுடன் காத்திருந்த நிலையில் அது சோகத்தில் முடிந்தது.

கராச்சியில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராஃபியின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூசிலாந்து அணி. ஏற்கெனவே முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய நிலையில் சாம்பியன்ஸ் டிராஃபியிலும் சாய்த்துள்ளது.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் குவித்தது. 321 ரன்கள் எனும் கடின இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி, 47.2 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆட்டமிழந்து 60 ரன்களில் தோல்வி அடைந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சவாலான ஆட்டங்கள்

இதன் மூலம் குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து அணி 2 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு நகர்ந்தது. அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு வங்கதேசத்துடனும், இந்திய அணியுடனும் லீக் ஆட்டம் இருக்கிறது. இதில் வங்கதேச அணி நியூசிலாந்து அணிக்கு பெரும் சவாலாக இருக்காது என கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவுடனான ஆட்டம் சவாலாகவே அமையும்.

இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்களில் பாகிஸ்தானுடன் ஆடிய 4 ஆட்டங்களிலும் ஒன்றில்கூட தோல்வி அடையாத அணி என்ற பெருமையை தக்கவைத்துள்ளது.

அதேபோல, பாகிஸ்தான் அணிக்கு அடுத்துவரும் இரு ஆட்டங்களுமே சவாலாக மாறும். இந்திய அணியுடனான ஆட்டம் எப்போதுமே பாகிஸ்தான் வீரர்களுக்கு சவாலாக இருந்துள்ளது. அடுத்ததாக, வங்கதேசமும் வெற்றியை பாகிஸ்தானுக்கு எளிதாக விட்டுக்கொடுக்காது. போராடித்தான் பாகிஸ்தான் வெல்ல வேண்டியதிருக்கும்.

ஆதலால், பாகிஸ்தான் அணிக்கு அடுத்த 2 ஆட்டங்களிலும் வெற்றி என்பது எளிதாகக் கிடைக்கும் அம்சமாக இருக்காது. கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில்தான் விளையாட வேண்டியதிருக்கும். பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறுவது கூட பெரும் சவாலாகவே இருக்கும்.

ICC Champions Trophy cricket, சாம்பியன்ஸ் டிராபி 2025, Nz Vs Pak,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் அணிக்கு அடுத்த 2 ஆட்டங்களிலும் வெற்றி என்பது எளிதாகக் கிடைக்கும் அம்சமாக இருக்காது

நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் கருத்து

போட்டியின் வெற்றிக்குப்பின் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் பேசுகையில் " பாகிஸ்தான் அணி நடுப்பகுதியில் நன்றாகப் பந்துவீசினர்கள் என்று நினைக்கிறேன். ஆனால், வில் யங், லேதம் இருவரும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ரன்களை சேர்த்தனர். 280 ரன்கள்தான் சேர்ப்போம் என நினைத்தேன், ஆனால் 320 ரன்களை எட்டிவிட்டோம். விக்கெட்டுகள் கைவசம் அதிகம் இருந்தது ஒரு காரணம்.

முதல் 10 ஓவர்களிலும் நாங்கள் சிறப்பாகப் பந்துவீசி பாகிஸ்தானை கட்டுப்படுத்தினோம். ரன்ரேட்டில் அழுத்தத்தை, நெருக்கடியை ஏற்படுத்தி விக்கெட்டை வீழ்த்தினோம். கிளென் பிலிப்ஸிடம் இருந்து இப்படி ஒரு அற்புதமான கேட்சை நான் எதிர்பார்க்கவில்லை. ரிஸ்வானை ஆட்டமிழக்கச் செய்து திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

பனிப்பொழிவுக்குப் பதிலாக காற்று இருந்தது. இந்த காற்றைப் பயன்படுத்தி பந்துவீசினோம். ஃபீல்டிங் அற்புதமக இருந்தது. இதனால் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடவில்லை" எனத் தெரிவித்தார்.

நியூசிலாந்து வெற்றிக்குக் காரணம் என்ன?

நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் வில் யங், டாம் லேதம் அடித்த சதம், கிளென் பிலிப்ஸ் கேமியோ ஆடி அரைசதம் அடித்தது மிகப்பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது.

அதேசமயம், பந்துவீச்சில் ரூர்க், கேப்டன் சான்ட்னர் எடுத்த தலா 3 விக்கெட்டுகள், ஹென்றி வீழ்த்திய 2 விக்கெட்டுகள் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.

அது மட்டுமல்லாமல் ரூர்க், ஹென்றி இருவரும் தொடக்கத்திலிருந்தே கட்டுக்கோப்பாகவும், துல்லியமான பந்துவீச்சை லைன் லென்த்தில் வீசியும் பாகிஸ்தான் பேட்டர்களை நிலைகுலையச் செய்தனர். இவர்கள் இருவரின் ஓவர்களில் பாகிஸ்தான் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க சிரமப்பட்டனர்.

இதனால் பவர்ப்ளே முடிவதற்குள் தொடக்க ஆட்டக்காரர் சகீலையும், கேப்டன் ரிஸ்வான் விக்கெட்டையும் வீழ்த்தி பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளித்தனர் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள். நியூசிலாந்து அணியின் நன்கு திட்டமிட்ட வியூகத்தை களத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தியதை பாகிஸ்தான் அணியினரால் எதிர்கொள்ள முடியவில்லை.

நியூசிலாந்து பந்துவீச்சின் வியூகத்தை உடைக்கும் விதத்தில் ஒரு ஓவரில்கூட பேட் செய்ய முடியாதது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்தது. குறிப்பாக, நியூசிலாந்து அணி தங்கள் வியூகத்தை உடைக்கும் வகையில் பாகிஸ்தான் பேட்டர்களை களத்தில் யாரையும் நிலைக்கவிடவில்லை என்பதுதான் அவர்கள் வெற்றிக்கான முக்கியக் காரணமாகும்.

நடுப்பகுதி ஓவர்களில் பிரேஸ்வெல், சான்ட்னர், கிளென் பிலிப்ஸ் ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து பாகிஸ்தான் பேட்டர்களின் கரங்களுக்கு விலங்கிட்டதுபோல் பந்துவீசினர்.

நடுப்பகுதி ஓவர்களில் ரன்களை சேர்க்கவிடாமல் நெருக்கடி தரும் வகையில் மும்முனைத் தாக்குதல் தொடுத்து பாகிஸ்தானை பெரிய நெருக்கடிக்குள் தள்ளினர். பாகிஸ்தான் அணி 28-வது ஓவரில் தான் 100 ரன்களையே எட்டியது.

அந்த அளவு பாகிஸ்தான் ரன்ரேட்டை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் இழுத்துப்பிடித்தனர். ஆனால், அடுத்த 13 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 200-வது ரன்களையே எட்டியது. தொடக்கத்திலேயே பாகிஸ்தான் பேட்டர்களை திக்குமுக்காடச் செய்து பந்துவீசி, நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.

ICC Champions Trophy cricket, சாம்பியன்ஸ் டிராபி 2025, Nz Vs Pak,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரூர்க், கேப்டன் சான்ட்னர் எடுத்த தலா 3 விக்கெட்டுகள், ஹென்றி வீழ்த்திய 2 விக்கெட்டுகள் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன

திருப்புமுனை தந்த வீரர்

இந்த ஆட்டத்தில் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங் ஆகிய 3 பிரிவுகளிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் கிளென் பிலிப்ஸ்தான். இந்த ஆட்டத்தில் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 34 பந்துகளில் அரைசதம் அடித்து நியூசிலாந்து ஸ்கோர் உயர்வுக்கும் பிலிப்ஸ் முக்கியக் காரணமாகினார்.

ஃபீல்டிங்கில் ரிஸ்வான் ஆஃப்சைடில் விலக்கி அடித்த ஷாட்டில் தாவிச்சென்று பிலிப்ஸ் பிடித்த கேட்ச் ஆட்டத்தின் போக்கையே மாற்றி, நியூசிலாந்து கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ஃபிலிப்ஸ் பிடித்த கேட்சால் கேப்டன் ரிஸ்வான் எனும் மிகப்பெரிய விக்கெட் இழப்பிலிருந்து பாகிஸ்தான் மீளமுடியவில்லை. இந்த கேட்சை பிலிப்ஸ் பிடிப்பார் என ரிஸ்வானும் நினைக்கவில்லை, களத்திலிருந்து ஏமாற்றத்துடன் சென்றார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

அற்புதமான சதங்கள்

நியூசிலாந்து அணியைப் பொருத்தவரை தொடக்க வீரர் வில் யங் அடித்த 107 ரன்கள், டாம் லாதம் அடித்த 118 ரன்கள், பிலிப்ஸ் சேர்த்த 61 ரன்கள்தான் ஸ்கோரை உச்சத்துக்குக் கொண்டு சென்றன. தொடக்க வீரராக ரச்சின் ரவீந்திரா களமிறங்க வேண்டிய நிலையில் அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் வில் யங் அந்த வாய்ப்பைப் பெற்றார்.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வில்லியம்ஸனுக்குப் பதிலாக இடம்பெற்ற வில் யங், தொடர் நாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து 3-0 என்று டெஸ்ட் தொடரை வெல்லவும் வில் யங் காரணமாக அமைந்திருந்தார்.

சாம்பியன்ஸ் டிராஃபி அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த 8-வது வீரர் என்ற சாதனையை பதிவு செய்தார் வில் யங். இதற்கு முன் சாம்பியன்ஸ் டிராஃபியின் அறிமுகப் போட்டியில் நியூசிலாந்து தரப்பில் எந்த வீரரும் சதம் அடித்ததில்லை. அதை வில் யங், டாம் லேதம் செய்துள்ளார்.

டாம் லேதம் நடுவரிசையில் களமிறங்கி நிதானமாக ஆடி சதம் அடித்தார். முத்தரப்பு தொடரில் 3 டக்அவுட்களைச் சந்தித்து டாம் லேதம் கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட நிலையில் அவர் அடித்த இந்த சதம் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளது.

பிலிப்ஸுடன் இணைந்து 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டாம் லேதம் ஆட்டம் ஸ்கோர் உயர்வுக்கும் காரணமாக அமைந்தது. அதேநேரம், 18 பந்துகளில் 10 ரன்கள் என்றிருந்த பிலிப்ஸ் ,அடுத்த 16 பந்துகளில் அரைசதத்தை எட்டி, கேமியோ ஆடியது ஸ்கோரை உச்சத்துக்குக் கொண்டு சென்றது.

ICC Champions Trophy cricket, சாம்பியன்ஸ் டிராபி 2025, Nz Vs Pak,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நியூசிலாந்து 8-வது வீரர் வரை வகைவகையான பேட்டர்களை வைத்திருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலம்

6 ஆண்டுகளில் முதல்முறை

நியூசிலாந்து 8-வது வீரர் வரை வகைவகையான பேட்டர்களை வைத்திருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். இந்த ஆட்டத்தில் கேன் வில்லியம்ஸ் (1) ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஒற்றை இலக்க ரன்னில் கேன் வில்லியம்ஸன் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குப்பின் நேற்றுதான் ஆட்டமிழந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் 35 இன்னிங்ஸ்களில் ஆடிய வில்லியம்ஸன் 34 இன்னிங்ஸ்களிலும் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்துதான் ஆட்டமிழந்துள்ளார்.

பாகிஸ்தான் தோல்விக்குக் காரணம் என்ன?

ICC Champions Trophy cricket, சாம்பியன்ஸ் டிராபி 2025, Nz Vs Pak,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பக்கர் ஜமான், பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் தங்களின் இயல்பான ஆட்டத்தை ஆடியிருந்தால், பாகிஸ்தான் வெற்றி சாத்தியமானது என நம்பியிருக்கலாம்

பாகிஸ்தான் தோல்விக்கு பல காரணங்களைக் கூறலாம். 30 ஆண்டுகளுக்குப்பின் சொந்த மைதானத்தில் வரலாற்றுசிறப்பு மிக்க ஐசிசி தொடர் நடக்கும்போது, ரசிகர்களை கவர்ந்திழுக்கம் வகையில் ஆட்டத்தை ஆடாமல் பல தவறுகளை பாகிஸ்தான் அணி செய்தது.

பாகிஸ்தான் அணியோடு ஒப்பிடுகையில் குறைந்த தவறுகளையே நியூசிலாந்து செய்தது. ஆனால், பாகிஸ்தான அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும், ஃபீல்டிங்கிலும் பல தவறுகளைச் செய்தது.

குறிப்பாக பந்துவீச்சில் பாகிஸ்தான் வீரர்களிடம் கட்டுக்கோப்பு, துல்லியம் என எதுவுமே இல்லை. உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களான ஹாரிஸ் ராப், ஷாகித் அஃப்ரிடி இருந்தும், பந்துவீச்சு படுமோசமாக இருந்ததாக பார்க்கப்படுகிறது.

ஹாரிஸ் 83 ரன்களையும், அப்ரிடி 68 ரன்களையும் வாரி வழங்கினர். பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது மட்டுமே 4 ரன்ரேட்டில் நேற்று பந்துவீசி விக்கெட் வீழ்த்தினார். மற்ற அனைத்துப் பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 6 ரன்கள் வீதம் வாரி வழங்கியதுதான் தோல்விக்கு முதல் காரணம்.

இரண்டாவதாக பாகிஸ்தான் சந்தித்த டாட் பந்துகள். இந்த ஆட்டத்தில் மட்டும் பாகிஸ்தான் அணி, 162 டாட் பந்துகளை சந்தித்தது, அதாவது ஏறக்குறைய 27 ஓவர்களில் ரன்கள் ஏதும் அடிக்கவில்லை என்பது இதன் அர்த்தம். இலக்கு பெரிதாக இருக்கிறது, ஓவருக்கு 6 ரன்களுக்குமேல் வெற்றிக்கு தேவைப்பட்டபோது, 27 ஓவர்களை டாட் பந்துகளாக விட்டது பாகிஸ்தான் தோல்விக்கு 2வது காரணம்.

3வது காரணம் பாபர் ஆஸம். பாகிஸ்தான் வெற்றிக்கு பல போட்டிகளில் காரணமாக இருந்தவர், பல போட்டிகளில் ஒற்றை மனிதராக இருந்து வெற்றிக்கு அழைத்துச் சென்ற பாபர் ஆஸம் ஏன் இப்படி பேட் செய்தார் என்று கேட்கும் அளவு மோசமாக இருந்தது. 90 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து பாபர் ஆஸம் ஆட்டமிழந்தார். 81 பந்துகளில்தான் பாபர் ஆஸம் அரைசதத்தையே நிறைவு செய்தார். பாபர் ஆஸம் மிகவும் மெதுவாக ஆடியது, ரன் சேர்க்க வேகம் காட்டாதது தோல்விக்கு இட்டுச் சென்றது.

நியூசிலாந்து அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு பாகிஸ்தான் பேட்டர்களை நிலைகுலைய வைத்து. பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 22 ரன்களும், 17-வது ஓவர்வரை 73 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது.

2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப்பின் நடந்த ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி முதல் 10 ஓவர்களில் சேர்த்த குறைந்த பட்ச ஸ்கோர் நேற்று சேர்த்ததாகும், சாம்பியன்ஸ் டிராஃபியில் 3வது குறைந்தபட்ச ஸ்கோராக அமைந்தது. அணியின் மெதுவான ரன் சேர்ப்பு தோல்வியை உறுதி செய்தது.

நியூசிலாந்து அணியின் நேற்றைய உலகத்தரமான ஃபீல்டிங்கோடு ஒப்பிடுகையில் பாகிஸ்தான் சற்று குறைவாகவே விளையாடியது. நியூசிலாந்து அணி ஃபீல்டர்கள் மட்டும் நேற்று 20 ரன்களையாவது சேமித்திருப்பார்கள். நியூசிலாந்து அணியின் ராணுவ ஒழுக்க ஃபீல்டிங் பாகிஸ்தான் அணியை நிலைகுலைய வைத்தது, எதிர்பார்த்த எந்த ஷாட்டிலிருந்தும் பாகிஸ்தான் பேட்டர்களுக்கு பவுண்டரி கிடைக்காமல் பார்த்துக்கொண்டனர்.

பக்கர் ஜமானைப் போல் பாகிஸ்தான் அணியில் பல பேட்டர்கள் தொடக்கத்திலேயே தடுமாறி, ரன் சேர்க்க முடியாமல் சிரமப்பட்டனர். பக்கர் ஜமானும் ஃபீல்டிங் செய்யும்போது கையில் காயம் ஏற்பட்டு, நீண்டநேர ஓய்வுக்குப்பின் விளையாட வந்தார்.

மற்ற வகையில் பாகிஸ்தான் அணியில் பக்கர் ஜமான்(24), சல்மான்(42), குஷ்தில் ஷா(69) ஆகியோரைத் தவிர மற்ற பேட்டர்கள் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. அதிலும், குஷ்தில் ஷா கடைசி நேரத்தில் அதிரடியாக பேட் செய்து ரன் சேர்க்காமல் இருந்தால், பாகிஸ்தான் அணி 200 ரன்களில் சுருண்டிருக்கும்.

குறிப்பாக பக்கர் ஜமான், பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் தங்களின் இயல்பான ஆட்டத்தை ஆடியிருந்தால், பாகிஸ்தான் வெற்றி சாத்தியமானது என நம்பியிருக்கலாம். ஆனால், இவர்கள் 3 பேருமே தோல்வி அடைந்து, அணியையும் தோல்விக் குழியில் தள்ளிவிட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)