மதுரை: 15 பேரை பலி கொண்ட வி.கே.குருசாமி - ராஜபாண்டி மோதல் தொடங்கியது எப்படி?

- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே. குருசாமியைக் கொலை செய்ய ஐந்து பேர் கொண்ட கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில் முகம், கை உள்பட பல இடங்களில் வெட்டுப்பட்டு படுகாயங்களுடன் அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாநில எல்லையைக் கடந்து சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பல், பெங்களூருவில் ஒரு ஹோட்டலில் இருந்தபோது குருசாமியை வெட்டியது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் ராஜபாண்டி என்பவர் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
வி.கே.குருசாமிக்கும், ராஜபாண்டிக்கும் இடையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. அதன் உச்சகட்டமாகவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. குருசாமிக்கும் ராஜபாண்டிக்கும் இடையில் தொடரும் பகைக்குக் காரணம் என்ன?
தி.மு.க - அ.தி.மு.க போஸ்டரில் தொடங்கிய மோதல்
மதுரையில் போஸ்டர் ஒட்டுவதில் தொடங்கிய சிறு மோதல்தான் இந்த அளவுக்கு வளர்ந்து பலர் பலியாவதற்குக் காரணமாக உள்ளது. இந்த மோதலின் தொடர்ச்சியாக பழிக்கு பழி வாங்க, அடிதடி, வெட்டு, குத்து என மாறி, குடும்பத்தைக் கருவறுப்பேன் என சபதம் எடுக்கும் அளவுக்கு வந்து நிற்கிறது.

உறவினர்களான வி.கே. குருசாமியும் ராஜபாண்டியனும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கருத்தரிவான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை ஏதும் கிடைக்காத நிலையில், இருவருமே மதுரைக்கு இடம் பெயர்ந்தனர்.
இதில் வி.கே. குருசாமி (55) தி.மு.க.விலும், ராஜபாண்டி அ.தி.மு.க.விலும் இணைந்து அரசியலிலும் ஈடுபாடு காட்டினர். இருவருக்குமே வீடு காமராஜர்புரத்தில்தான் இருக்கிறது.
கடந்த 2003ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற போது, அப்பகுதியில் போஸ்டர்களும், சுவரோவியங்களும் என வழக்கம்போல் தேர்தல் பணிகள் களைகட்டியிருந்தன. இந்தத் தருணத்தில் மதுரையின் முக்கியப் பகுதியில் போஸ்டர் ஒட்டுவதில் இருவருக்கும் இடையே முதன்முதலாக விரோதம் வேர்விட்டது.
இந்த விவகாரம் ஒரு கோவில் திருவிழாவில் பெரிதாக வெடிக்க, ராஜபாண்டி ஆதரவாளரும் உறவினருமான சின்ன முனுசு என்ற முனுசாமியை வி.கே.குருசாமியின் ஆட்கள் கொலை செய்தனர். இதில் சின்ன முனுசாமியின் தம்பி காளீஸ்வரன் என்ற வெள்ளைகாளி குருசாமியின் மீது ஆத்திரம் அடைந்தார்.
இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக வி.கே.குருசாமி தரப்பைச் சேர்ந்த மாரிமுத்து, மூர்த்தி, ரமேஷ் ஆகிய மூவரும் 2008இல் கொலை செய்யப்பட்டனர். 2013இல் வி.கே.குருசாமியுடைய தங்கையின் கணவர் பாம்பு பாண்டி கொல்லப்பட்டார்.
அதற்குப் பழி வாங்க ராஜபாண்டி தரப்பைச் சேர்ந்த மொட்டை மாரி என்பவரை 2015இல் வி.கே.குருசாமி தரப்பு கொலை செய்தது. பிறகு இதற்குப் பழிவாங்க அதே ஆண்டில் வி.கே.குருசாமி தரப்பைச் சேர்ந்த முனியசாமியை ராஜபாண்டி தரப்பு கொலை செய்தது.
வரிசையாக நடந்த பழிக்குப் பழி கொலைகள்

இதற்குப் பிறகு மேலும் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் 2016இல் கமுதியில் இருந்து மதுரைக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த வி.கே.குருசாமியின் மருமகன் காட்டுராஜா என்ற முத்துராமலிங்கம் சுற்றுச்சாலை பகுதியில் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு ராஜபாண்டியின் ஆட்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
அதன் பிறகு, குருசாமியின் வீட்டிற்குள் புகுந்த ராஜபாண்டியின் ஆட்கள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய முயன்றனர். ஆனால், அதற்குள் அங்கு வந்த காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி சிலரைக் கைது செய்தது.
ஆனால், மருமகனை இழந்திருந்த வி.கே குருசாமி கொதித்துப் போயிருந்தார். மருமகனின் இழப்புக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, குருசாமியன் ஆட்கள் 2017ஆம் ஆண்டு ஜூன் 13இல் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ராஜபாண்டியின் மகன் முனியசாமி என்ற தொப்புளியை பத்து கார்களில் வந்த குருசாமியின் ஆட்கள் கமுதிக்கு கடத்திச் சென்றனர். அங்கே அரியமங்களம் அருகே அவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்து, எரித்துவிட்டனர்.
அவரைக் காணாமல் தேடிவந்த அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடந்தபோது அந்தக் கூட்டத்திலேயே இதுகுறித்து அவரது மனைவி சத்தம்போட, காவல்துறை தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியது. இதற்குப் பிறகுதான் இந்தக் கொலை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கொலை தொடர்பாக, வி.கே.குருசாமி மகன் வி.கே.ஜி.மணி மற்றும் அவரது உறவினர் அரியமங்கலத்தைச் சேர்ந்த பழனிமுருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது வி கே குருசாமியின் மருமகன் எஸ்.எஸ். பாண்டியன் படுகொலை செய்யப்பட்டார்.
போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை
இந்தக் காலகட்டத்தில் அரசியலிலும் வி.கே. குருசாமிக்கு நல்ல வளர்ச்சி இருந்தது. ஒருகட்டத்தில் மதுரை மாநகராட்சியின் கிழக்கு மண்டல தலைவராக உயர்ந்தார் குருசாமி.
இருந்தாலும் தனது மகன் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ராஜபாண்டியின் மகன் முனுசாமியை கொன்றே ஆக வேண்டும் என ராஜபாண்டியும் வெள்ளை காளி கும்பலும் தீவிரமாக முயன்றுகொண்டிருந்தது.
மதுரை நகரக் காவல்துறைக்கு இந்த விவகாரம் பெரும் தலைவலியாக மாறிய நிலையில், இரு தரப்பையும் அழைத்து நன்னடத்தை பத்திரம் எழுதி வாங்கினர்.
குருசாமி மீது கொலை, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். முதலில் பாளையங்கோட்டை சிறையிலும் பிறகு வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்ட குருசாமி வெளியில் வந்தபோது, ராஜபாண்டியை எதிர்த்து நிற்க தன்னுடன் ஆட்கள் இல்லை என்பதால், மதுரையை விட்டு வெளியேறி பெங்களூரு, சென்னை என வெளியிடங்களில் வசிக்கத் தொடங்கினார்.
பெங்களூருவில் குருசாமியை கொல்ல முயன்ற கும்பல்

பட மூலாதாரம், Getty Images
குருசாமி மீது கொலை, கொலை முயற்சி, உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளில் மதுரை காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தன.
இந்த வழக்குகளில் ஆஜராவதற்காக மதுரை வந்த குருசாமி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி ஆஜரானார். பிறகு, செப்டம்பர் 3ஆம் தேதி மாலையில் மதுரையில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு சென்றார்.
அதற்கு அடுத்த நாள் பெங்களூரு கம்மன்னஹள்ளியில் உள்ள சுக்சாகர் ஹோட்டலில் தேநீர் குடிப்பதற்காக உட்கார்ந்திருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து இறங்கி, வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு அவரை சரமாரியாக வெட்டியது.
இதில் உடல் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் காயமடைந்த குருசாமி தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்று வருகிறார்.
தொடரும் இந்த மோதல் தொடர்பாக பிபிசியிடம் பேசிய காவல்துறையினர், அவர்கள் மீது தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.
தி.மு.க.வில் இருந்து விலகிய குருசாமி

பட மூலாதாரம், Getty Images
"கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இரு பிரிவுகளாக பிரிந்து இருவரும் மோதி வருகின்றனர். இதில் குருசாமி தரப்பில் 10 பேர், ராஜபாண்டி தரப்பில் 7 பேர் என 15க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வி.கே. குருசாமி, ராஜபாண்டி, வெள்ளைகாளி ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வெள்ளைக் காளி ஒரு வருடத்திற்கு முன்பாக கரிமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்.
வெள்ளை காளி தனது அண்ணனை குருசாமியின் ஆட்கள் கொலை செய்ததால் அவரது குடும்பம் முழுவதையும் அழிக்கப் போவதாக சபதம் செய்து, அதன் தொடர்ச்சியாக குருசாமி ஆட்களைக் கொலை செய்து வந்தார்.
வெள்ளை காளியைப் பொறுத்தவர் 40க்கும் மேற்பட்ட கூலிப்படையினரை வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் கொலை, கஞ்சா விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.
வி.கே. குருசாமி தற்போது தி.மு.க.வில் இருந்து விலகி தனியாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ராஜபாண்டி இறந்துவிட்டார். இதனால், குருசாமியை பழிவாங்கும் பணியை வெள்ளை காளி முன்னெடுத்து வருகிறார்," என்கின்றனர்.
குருசாமி மீதான கொலை முயற்சிக்குப் பின்பு கீரைத்துறையில் உள்ள குருசாமியின் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய குற்றவாளி யார்?

பட மூலாதாரம், COP
இந்த மோதல்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன், "இந்த கேங் வார் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது வி.கே. குருசாமி கொலை முயற்சிக்குப் பின்னர் இந்தச் சம்பவத்தில் யார் யார் இருக்கிறார்கள், அவர்களின் தற்போதைய செயல்பாடு என்ன, ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளனவா என்று ஆராயப்பட்டு வருகிறது," என்றார்.
"அப்படி வழக்குகள் நிலுவையில் இருந்தால், சம்பந்தப்பட்டவர்களை அந்த வழக்குகளின் கீழ் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சிறைக்குள், சிறைத்துறை அதிகாரிகள், இந்த குற்றவாளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருகின்றனர். இனி வரும் காலங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டிருக்கிறது."
வி.கே குருசாமி மீது பெங்களூருவில் நடந்த தாக்குதல் தொடர்பாக அந்நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பிரசாந்த், கார்த்திக், குரு ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.
ஏற்கெனவே விஜய் என்ற நபர் மதுரையில் வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருக்கிறார். அவரிடம் இந்த வழக்கு தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. இது தவிர முக்கிய குற்றவாளியான நவீன் என்பவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஒரு சிறு போஸ்டர் சண்டையில் தொடங்கிய மோதல் 15க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காவு வாங்கியுள்ளது. இதைத் தடுக்க காவல்துறை போராடினாலும் தனி நபர்களின் பழிவாங்கும் நோக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கும் என்பதை இந்த மதுரை கேங் வார் கோடிட்டுக் காட்டியிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












