பாகிஸ்தான் தமிழர்கள்: பங்குனி உத்திரம் கொண்டாடும் சில நூறு குடும்பங்களின் கதை

- எழுதியவர், ஷுமைலா கான்
- பதவி, பிபிசி, பாகிஸ்தான்
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் வசிக்கும் ஒரு சிறிய தமிழ்ச் சமூகம் சமீபத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை உற்சாகத்துடன் கொண்டாடியது.
கராச்சியின் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள மதராசி பாராவில் சில நூறு தமிழ் குடும்பங்கள் வசிப்பதாக சமூக மதிப்பீடுகள் காட்டுகின்றன. இங்கு தென்னிந்தியாவில் உள்ள மதராஸிலிருந்து (இப்போது சென்னை) இடம்பெயர்ந்த இந்துக்களின் மக்கள்தொகை அதிகமாக உள்ளது.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கராச்சி பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தால் உருவாக்கப்பட்ட போது இவர்கள் இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து பாகிஸ்தானுக்கு வந்தனர்.
பிரிவினைக்குப் பிறகு, 50 முதல் 60 குடும்பங்கள் சிறந்த பொருளாதார வாய்ப்புகளை நம்பி இங்கு குடியேறின. இந்த குடும்பங்கள் நகரத்தில் உள்ள மூன்று முக்கிய குடியிருப்பு பகுதிகளான மதராசி பாரா, டிரி ரோடு மற்றும் கோரங்கி ஆகியவற்றில் பிணைப்புடன் வாழ்கின்றன.
இங்கு தமிழ் சமூகம் 1964இல் மாரியம்மன் கோவிலைக் கட்டியது. இது அவர்களின் முக்கிய மக்கள் கூடும் சபையாக விளங்குகிறது. ஹனுமன் கோவில் என்று அழைக்கப்படும் மற்றொரு பெரிய கோவிலும் இங்கு கட்டப்பட்டு வருகிறது.
55 வயதான தமிழரான மரியம் ஸ்வாமி, தமது சமூகத்திலும், அவரைச் சுற்றியுள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியிலும் தனது இறை பணிகளுக்காக நன்கு மதிக்கப்படுகிறார்.
இவரது வீட்டிற்கு எதிரே தான் ஹனுமன் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
எல்லா மத விழாக்களுக்கும் இங்கு வாழும் சமூகத்தினர் தங்களுக்குள்ளாகவே நிதி வசூலிப்பதாகவும், இந்தக் கோவிலைக் கட்டவும் மக்கள் நன்கொடை கொடுத்ததாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார்.
மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சமூகம்

கராச்சியில் உள்ள தமிழ் இந்துக்கள் தென்னிந்தியாவின் மத மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் புனிதமான பண்டிகைகளின் போது இறைச்சியைத் தவிர்த்து, நோன்பிருந்து வெறும் கால்களில் யாத்திரை செல்வது, பங்குனி உத்திரத்தின் போது அழகு செய்வது போன்ற சடங்குகளைச் செய்கிறார்கள்.
இந்த பண்டிகையை தவிர பொங்கல், தை போசம் மற்றும் மாரியம்மன் திருவிழா போன்ற பிற மத விழாக்களையும் பக்தி சிரத்தையுடன் கொண்டாடுகின்றனர்.

பங்குனி உத்திரம் அன்று விரதம் இருந்து வாழை இலையில் சாப்பாடு பரிமாறப்பட்டதாகவும் தன்னை போன்றோருக்கு புதிய அனுபவம் என்கிறார் இளம் பக்தையான ஈஷா ரமேஷ்.
"இந்த நிகழ்வுக்காக இரண்டு மாதங்களாக மீன், இறைச்சி சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்," என்கிறார் அவர்.

எண்பதுகளில் இருக்கும் சீதா என்ற மூதாட்டி, சமூகத்தில் உள்ள மற்ற பெண்களுக்கு சமைத்து உதவி செய்யும் போது, புழுங்கல் அரிசி, பருப்பு போன்றவற்றை கலவையின்றி சமைப்பதாக சீதா என்னிடம் கூறினார்.
மத நல்லிணக்கம் போற்றும் மதராஸி பாரா

மதராசி பாராவை சுற்றிலும் பல முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றன. நீங்கள் அந்த இடத்தை உன்னிப்பாகக் கவனித்தால், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் சமய நல்லிணக்கத்துடன் இருப்பதை காணலாம்.
அருகே உள்ள மசூதியில் தொழுகைக்கான நேரம் வந்தபோது, மாரியம்மன் கோவிலின் காளிதாஸ் அங்குள்ள பக்தர்களிடம் அம்மன் முழக்கத்தையும் கோவில் மணி அடிப்பதையும் நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து, பங்குனி உத்திரம் ஊர்வலம் நடந்து கொண்டிருந்தபோது, வழிநெடுகிலும் நின்று கொண்டிருந்த முஸ்லிம்கள், அவர்களைப் பிரமிப்புடன் பார்த்து மரியாதையுடன் வழிவிட்டனர்.

மதராசி பாராவில் வசிக்கும் வயதான பெண்மணியான காமாட்சி கந்தசாமி, "நாங்கள் ஒற்றுமையாக வாழ்கிறோம், முஸ்லிம் சமூகத்தால் எங்களுக்கு எந்த பிரச்னையும் வந்ததில்லை" என்றார்.
ஊர்வலத்திற்குப் பிறகு பல இந்து பக்தர்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர். ஆனாலும் மரியம் சுவாமி உண்ணாவிரத்தை முடிக்காமல் மற்றவர்களுக்கு சேவை செய்தார். அது பற்றி கேட்டபோது, மாலையில் முஸ்லிம்களுடன் சேர்ந்து நோன்பு துறப்பேன் என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.
"எனக்கு ஐம்பத்து ஐந்து வயது. ஒவ்வோர் வருடமும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பேன். மாதம் முழுவதும் விரதம் இருப்பேன். என் மகன், மருமகள் அனைவரும் நோன்பு துறந்தார்கள். அல்லாஹு அக்பர், இறைவன் அருளுடன் மாலையில் நோன்பு துறப்பேன். இது இங்குள்ள அனைவருக்கும் தெரியும்," என்கிறார் மரியம் சுவாமி.

2017ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையான 207.68 மில்லியனில் 1.73 சதவீதம் பேர் இந்துக்கள்.
கராச்சியில் தமிழ் இந்துக்கள், ஒரு மத சிறுபான்மையினரின் துணைக்குழுவாக இருப்பதால், தங்கள் சொந்த வளமான கலாசார பாரம்பரியத்தின் மீது ஒரு பிடியை வைத்திருக்கிறார்கள். அத்துடன் பிரதான பாகிஸ்தானிய கலாசாரத்துடனும் அவர்கள் கலந்திருக்கிறார்கள்.
கராச்சியின் இந்த பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். ஆனால் பலர் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் உருது மொழி பேசும் புலம்பெயர்ந்த சமூகங்களுடன் ஒருங்கிணைந்துள்ளனர்.
இங்குள்ள சமூகத்தில் உள்ள பெரியவர்களுக்கு தமிழ் மொழி மீது பிடிப்பு உள்ளது. ஆனால் இளைய தலைமுறையினர் தங்கள் தாய்மொழியில் சில வாக்கியங்களை பேச முடியாமல் வார்த்தைகளை தேடுகிறார்கள். இவர்களில் பலரால் தமிழில் அனைத்து பாடல்களையும் பாட முடிகிறது. ஆனால், அவர்களில் பெரும்பாலானோரால் தமிழ் மொழியை எழுத்துக் கூட்டிப் படிக்க முடியவில்லை.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












