இந்தியாவில் சிவிங்கிப் புலிகளை உயிர்ப்பிக்கும் திட்டம் தோல்வியா? எங்கே தவறு நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி இந்தியா செய்தியாளர்
இந்திய நிலப்பரப்பில் முற்றிலும் அழிந்துவிட்ட உயிரினமான சிவிங்கிப் புலிகள் 70 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன.
இந்திய மண்ணில் சிவிங்கிப் புலிகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் இந்தத் திட்டத்தின்கீழ் தென்னாப்பிரிக்கா, நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்டன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய பிரதேசத்தில் இருக்கும் 74,200 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள குனோ தேசிய பூங்காவில் இந்த சிவிங்கிப் புலிகள் விடப்பட்டன.
ஆனால், அங்கு விடப்பட்ட 20 சிவிங்கிப் புலிகளில் தற்போது வரை 9 சிவிங்கிப் புலிகள் இறந்துவிட்டன.
இதற்கு என்ன காரணம்? பிரதமர் மோதியின் 'பெருமைமிகு திட்டமாக' கருதப்பட்ட சிவிங்கிப் புலிகளை மறுஅறிமுகப்படுத்தும் திட்டம் தோல்வியடைந்துவிட்டதா?

பட மூலாதாரம், Getty Images
கடந்த மார்ச் மாதம் முதலே, ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டவற்றில் ஆறு சிவிங்கிப் புலிகளும் குனோ வந்த பிறகு ஒரு சிவிங்கிப் புலிக்கு பிறந்த மூன்று குட்டிகளும் உயிரிழந்துவிட்டன. இவற்றில் ஒன்பதாவது சிவிங்கிப் புலி கடந்த புதன்கிழமையன்று மரணம் அடைந்தது.
சிவிங்கிப் புலிகள் குறித்து ஆய்வு செய்து வரும் வல்லுநர்கள், வேலிகள் இல்லாத காட்டுயிர் பூங்காக்களுக்கு முதல்கட்டமாக இடம் மாற்றப்படும் சிவிங்கிப் புலிகளில் பாதி உயிரிழப்பது எதிர்பார்க்கக்கூடிய நிகழ்வுதான் என்று கூறுகிறார்கள். மேலும் அடுத்த ஆண்டு இன்னும் அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
‘கண்காணிப்பு, பராமரிப்பு மூலம் இறப்புகளைத் தடுத்திருக்கலாம்’
ஆப்பிரிக்காவில் இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட சிவிங்கிப் புலிகள் மறு அறிமுக திட்ட அனுபவங்களின் அடிப்படையில், இந்தியாவில் மறு அறிமுகம் செய்யப்பட்ட 20 சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை ஐந்து அல்லது ஏழாக குறையலாம்.
அந்த இழப்புகளுக்குப் பிறகுதான் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்தியாவுக்கு சிவிங்கிப் புலிகளை மறு அறிமுகம் செய்யும் திட்டத்தின் தலைவரான வின்சென்ட் வான் டெர் என்பவர்தான் இந்த அறிக்கையைச் சமர்ப்பித்த ஆய்வுக்குழுவின் தலைவர்.
இந்திய நிலப்பரப்பில் நீடித்து வாழக்கூடிய சிவிங்கிப் புலிகள் 2024இல் பிறக்கக்கூடும் என்று இந்த வல்லுநர் குழு எதிர்பார்க்கிறது. அவற்றை மிகச் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கும் பெண் சிவிங்கிப் புலிகள் பெற்றெடுக்கும்.

பட மூலாதாரம், VINCENT VAN DER MERWE
இவை ‘சூப்பர் மாம்’ (‘Super Mom’) என்றழைக்கப்படுகின்றன. இந்தியாவில் இருக்கும் பெண் சிவிங்கிப் புலிகளில் ஒன்று மட்டுமே ‘சூப்பர் மாம்’ ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இன்னொரு புறம் இந்தியாவில் விஷயங்கள் சரியாக நடப்பதாகத் தெரியவில்லை. இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள தென்னாப்பிரிக்க மற்றும் நமீபிய வல்லுநர்கள் இது நிர்வகிக்கப்படும் விதம் பற்றிக் கவலை தெரிவித்திருக்கின்றனர்.
இந்தத் திட்டத்தைக் கண்காணித்து வரும் இந்திய உச்சநீதிமன்றத்திற்கு எழுதிய கடிதங்களில், ‘இந்த விலங்குகளை சிறப்பாகக் கண்காணித்தல் மூலமும் பொருத்தமான மற்றும் சரியான நேரத்தில் வழங்கப்படும் கால்நடை பராமரிப்பு மூலமும்’ அவற்றின் உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
பெண் சிவிங்கிப் புலி தாக்கியதால் ஆண் புலி இறந்ததா?
கடந்த ஜூலை மாதம், இந்திய உச்சநீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில், நமீபியாவில் இயங்கி வரும் சீட்டா கன்சர்வேஷன் ஃபண்ட் (Cheetah Conservation Fund - CCF), முதல் எட்டு சிவிங்கிப் புலிகள் இறந்தது (ஒன்பதாவது புலியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை) – ‘போதுமான கண்காணிப்பு மற்றும் கால்நடை மருத்துவத் தலையீடு இருந்திருந்தால் தவிர்க்கப்பட்டிருக்கலாம்’, என்று கூறியிருந்தது.
இந்த அமைப்பு இந்தியாவுக்கு சிவிங்கிப் புலிகள் கொண்டு வரும் திட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஈடுபட்டு வருகிறது.
இறந்துபோன சிவிங்கிப் புலிகளில் ஒன்று ‘நீண்ட நாட்கள் உணவு இல்லாததால்’ பட்டினியால் இறந்திருக்கலாம் என்று CCF அறிக்கை கூறுகிறது.

பட மூலாதாரம், ADRIAN TORDIFFE
தென்னாப்பிரிக்க நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிட்டோரியா பல்கலைக்கழகம் நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதம், மற்றோர் உயிரிழப்பு பற்றிப் பேசுகிறது.
இதுவொரு ஆண் சிவிங்கிப் புலியின் இறப்பு. இதுவொரு பெண் சிவிங்கிப் புலி தாக்கியதால் இறந்ததாக பூங்கா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பெண் புலியின் உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவுமில்லை.
"ஆண் சிவிங்கிப் புலிகள் பெண்களை அடிக்கடி காயப்படுத்துவது வழக்கம். ஆனால், ஒரு பெண் புலி ஆணின் மீது குறிப்பிடத்தக்க காயங்களை ஏற்படுத்தியதை நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லை," என்று அந்த நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தியாவிற்கு வந்த சிவிங்கிப் புலிகள் ஏன் தொடர்ந்து இறக்கின்றன?
மறுநாள் நிபுணர்களுக்கு அனுப்பப்பட்ட பிரேத பரிசோதனையின் படங்கள், ‘புலியின் கழுத்து மற்றும் பின்புற தோல் வீங்கியிருந்ததையும் அதில் புழுக்கள் இருந்ததையும் தெளிவாகக் காட்டின’.
மூன்று நாட்களுக்குப் பிறகு, மற்றொரு ஆண் சிவிங்கிப் புலி இறந்து கிடந்தது. அதன் கழுத்து மற்றும் முதுகைக் காட்டும் ஒரு காணொளி, அதன் கண்காணிப்பு காலரை சுற்றிலும் கடுமையான தொற்று ஏற்பட்டிருந்ததைக் காட்டியது.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் குனோ பூங்காவில் வழக்கத்திற்கு மாறாக கனமழை பெய்தது; சராசரியாக 160மி.மீ இருந்திருக்க வேண்டிய மழை 321மி.மீ வரை பெய்தது. இதற்குக் கடுமையான ஈரப்பதம் காரணமாக இருக்கலாம் என்று தென்னாப்பிரிக்க வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், VINCENT VAN DER MERWE
அவற்றின் கழுத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு காலர்கள் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடியது, என்று அவர்கள் கூறுகின்றனர். முதலில் இறந்த ஆண் சிவிங்கிப் புலியின் படங்கள் அல்லது விவரணைகள் அவர்களுக்கு முன்பே அளிக்கப்பட்டிருந்தால், அது ஆரம்பகால நோயறிதலை எளிதாக்கியிருக்கும். மேலும் அவர்கள் பூங்கா அதிகாரிகளை முன்னதாகவே எச்சரித்திருப்பார்கள் என்று தங்கள் கடிதத்தில் தெரிவித்திருந்தனர்.
"இந்த நோயறிதல் தெளிவாகக் காட்டியது என்னவெனில், குனோவில் உள்ள மற்ற சிவிங்கிப் புலிகள் அனைத்தும் அதே ஆபத்தைச் சந்திக்கக்கூடும்," என்று நிபுணர்கள் எச்சரித்தனர்.
மேலும், கூட்டைவிட்டு வெளியேறிய 10 நாட்களில் மூன்று குட்டிகள் இறந்தன. அவற்றின் இறப்புக்கு வெப்பம் காரணமாகக் கூறப்படுகிறது. வெப்பநிலை 47 டிகிரி செல்ஷியஸை எட்டிய ஒரு நாளில் அவை இறந்தன. ‘கண்காணிப்பு மற்றும் தகவல் பகிர்வு’ இந்த இறப்புகளைத் தடுத்திருக்கலாம் என்று CCF சொல்கிறது.
இந்த நிபுணர்கள் குனோ பூங்காவில் போதுமான பதிவுகள் வைத்திருக்காதது குறித்தும் பேசுகின்றனர். CCF, ‘குனோவில் சிவிங்கிப் புலிகளின் இருப்பிடம், நடத்தை, உடல் நிலை மற்றும் உணவுமுறை மாற்றங்கள் பற்றிய தினசரி பதிவுகள் எதையும் பார்க்கவில்லை,’ என்று கூறுகிறது.
நிபுணர்கள், பூங்கா நிர்வாகத்திற்கு ‘சிறிய அளவில்கூட அறிவியல் சார்ந்த பயிற்சி இல்லை’ என்றும், அங்கிருக்கும் கால்நடை மருத்துவர்கள் ‘இவ்வளவு பெரிய திட்டத்தை நிர்வகிக்கும் அனுபவம் இல்லாதவர்கள்’ என்றும் கூறுகிறார்கள்.
இந்திய அதிகாரிகளின் பதில் என்ன?

பட மூலாதாரம், INDIAN PRESS INFORMATION BUREAU / HANDOUT
திட்டத்திற்கு தலைமை தாங்கும் இந்தியாவின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) மூத்த அதிகாரிகளை பிபிசி அணுகியது.
ஜூலை 16ஆம் தேதி, முதல் ஐந்து இறப்புகள் பதிவாகிய பிறகு, தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு ஓர் அறிக்கையில், பூங்காவில் சிவிங்கிப் புலிகள் இறப்பது அனைத்தும் ‘இயற்கையான காரணங்களால்’ என்று கூறியது.
ஊடகங்கள் சிவிங்கிப் புலிகள் ரேடியோ காலர் உட்பட பிற காரணங்களால் இறப்பதாகக் கூறியது. ஆனால், அவை ‘அறிவியல் ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட செய்திகள் இல்லை’ என்றும் கூறியது.
குனோ தேசிய பூங்காவில் அதிகாரிகள் குழு ‘நெருங்கிய ஒருங்கிணைப்பில்’ பணியாற்றி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் சிவிங்கிப் புலிகளுக்கான ‘உடல்நலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தலையீடுகள்’ குறித்து முடிவு செய்ய ‘நேரடி களத் தரவுகளை’ கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் கூறப்பட்டிருந்தது.
தென்னாப்பிரிக்க நிபுணர்களது அறிக்கையின்படி, சிவிங்கிப் புலிகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக கிட்டத்தட்ட 100 உறுப்பினர்கள் மற்றும் மூன்று கால்நடை மருத்துவர்களை உள்ளடக்கிய 30க்கும் மேற்பட்ட கண்காணிப்பு குழுக்கள் நிரந்தரமாக தளத்தில் உள்ளன.
இந்தியாவின் சிவிங்கிப் புலி திட்டம் தோல்வியா?

பட மூலாதாரம், VINCENT VAN DER MERWE
குனோவில் உள்ள சிவிங்கிப் புலிகள் விஷயத்தில் தென்னாப்பிரிக்க வல்லுநர்கள் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். அவை,
- கால்நடை மருத்துவர்களால் சிவிங்கிப் புலிகள் உடனடியாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும்
- அவற்றின் காலர்களை சரிபார்க்க வேண்டும்
- அவற்றில் கண்டறியப்படுர தரவுகள் பகிரப்பட வேண்டும்
- தகவல் தொடர்பு இருக்கவேண்டும்
மேலும், அதிக இரை உயிரினங்கள் குனோவுக்கு இடம் மாற்றப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
ஏனெனில், 'குனோவில் உள்ள இரை உயிரினங்களின் எண்ணிக்கை, அந்த முதலில் இந்தத் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் இருந்ததைவிடக் கணிசமாகக் குறைந்துள்ளது," என்று சிவிங்கிப் புலிகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
"விரிவான மற்றும் நெருக்கமான கண்காணிப்புதான் இந்தத் திட்டம் வெற்றியடைய வழிவகுக்கும். சிவிங்குப் புலிகளின் அறிமுகத்தின் போது எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் சமாளிப்பதற்கு மிக நெருக்கமான தகவல்தொடர்புகள் தேவை," என்று சிவிங்கிப் புலிகள் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாக இயக்குநர் லாரி மார்க்கர் பிபிசியிடம் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
"நெருக்கமான மற்றும் வேகமான தகவல்தொடர்பு நிச்சயமாக திட்டத்தின் வெற்றிக்கு உதவக்கூடும்," என்றும் என்றும் அவர் கூறினார்.
ஆனால் இத்திட்டம் முற்றிலுமாக தவறாக இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தென்னாப்பிரிக்காவின் அறிக்கை, சிவிங்கிப் புலிகள் இந்திய இரை உயிரினங்களான புள்ளி மான், நீல்காய், கடமான், கால்நடைகள் மற்றும் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுகின்றன என்று கூறுகிறது.
குனோ பூங்காவிற்கு வெளியே சிவிங்கிப் புலிகள் இருப்பதற்கு அண்டை விவசாய சமூகங்கள் நன்கு ஒத்துழைத்ததாக அவர்கள் நம்புகிறார்கள்.
பூங்காவில் கிட்டத்தட்ட 90 சிவிங்கிப் புலிகள் இருப்பது இத்திட்டத்தை பாதிக்கவில்லை. சிவிங்கிப் புலிகளுக்கு மற்ற உயிரினங்களிடம் இருந்து அதிக ஆபத்தும் இருக்கிறது. இவை பெரும்பாலும் ஹைனாக்கள், சிறுத்தைகள் மற்றும் சிங்கங்களால் வேட்டையாடப்படுகின்றன.
சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது மிகவும் கடினமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தென்னாப்பிரிக்காவில் சிறுத்தையை அறிமுகப்படுத்துவதற்கான முதல் 10 முயற்சிகளில் ஒன்பது தோல்வியடைந்தன. ஆனால், சிறப்பாகச் செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












