'மே 18' முள்ளிவாய்க்கால் கஞ்சி: ஈழத்தமிழர் உயிரை காத்த இந்த உணவை தயாரிப்பது எப்படி?

- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை
உலக அளவில் பரவலாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்கள் மத்தியில் என்றுமே மறக்க முடியாத நாளாக மே 18ஆம் தேதி வரலாற்றில் பதிவாகியுள்ளது.
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி யுத்தம் முடிவடைந்த நிலையில், யுத்தத்தின் கடைசி நாட்களில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக ஆண்டுதோறும் மே 18 தினம் அனுசரிக்கப்படுகிறது.
குறிப்பாக 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் உக்கிரமடைந்த சந்தர்ப்பத்தில் அந்த யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலிருந்த மக்கள் பல வார காலமாக உணவிற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு கிடைத்த அரிசியை கொண்டு, கஞ்சி தயாரித்து தமது பசியை தமிழர்கள் போக்கிக் கொண்டனர்.
இறுதி யுத்தத்தில் சிக்குண்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் பசியை போக்கிய கஞ்சி உணவை, ஈழத் தமிழர்கள் இன்றும் மறக்கவில்லை.
அப்போது முதல் ஆண்டுதோறும் மே மாதம் 18ஆம் தேதிக்கு முதல் சுமார் ஒரு வார காலம் வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த கஞ்சி சமைக்கப்பட்டு, மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றது.
இவ்வாறு தயாரிக்கப்படும் 'முள்ளிவாய்க்கால் கஞ்சியை' எவ்வாறு சமைப்பது?
கஞ்சி செய்முறை

அடுப்பில் குறிப்பிட்ட அளவு தண்ணீரை வைத்து, அதை சற்று சூடாக்க வேண்டும்.
அதன்பின்னர், கழுவி எடுக்கப்பட்ட பச்சை அரிசியை அந்த தண்ணீரில் போடவேண்டும். பின்னர் தேவையான அளவு உப்பிட்டு கொதிக்க விட வேண்டும்.
கொதித்து, பதமானதுடன், கஞ்சி தயாராகுகின்றது.
இதுவே 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என அழைக்கப்படுகிறது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட கஞ்சானது, 2009ஆம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற தருணத்தில் மிகவும் சுவையாக இருந்தது என கஞ்சியை தயாரித்து வழங்கும் முல்லைத்தீவு - புதுகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அந்தோனிபிள்ளை மேரி ரெஜிந்தா கூறுகின்றார்.
எனினும், தற்போது முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு சற்று சுவை சேர்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
சுவையை கூட்ட இவை தேவை

தேவையான அளவு பச்சை அரிசி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், உப்பு, புளி போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பில் தண்ணீரை வைத்து, கழுவிய பச்சை அரிசியை அந்த தண்ணீருக்குள் இட்டு, அதனை கொதிக்கவிட வேண்டும்.
அதன்பின்னர் தேவையான அளவு உப்பை சேர்க்க வேண்டும்.
சற்று தண்ணீர் கொதித்து வரும் சந்தர்ப்பத்தில், சுத்தம் செய்யப்பட்ட பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயத்தை அதில் இட வேண்டும்.
தேவை ஏற்படும் பட்சத்தில், தேங்காய் பாலையும் சிலர் இடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
நன்றாக கஞ்சி கொதித்து வந்தவுடன், இறுதியாக கரைத்த புளி தண்ணீரை, கஞ்சியில் இட்டு, சற்று சூடாக்கி, அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.
முள்ளிவாய்க்கால் புதிய கஞ்சியை இவ்வாறே தயார் செய்கின்றனர்.
இவ்வாறு தயாரிக்கப்படும் கஞ்சி, தேங்காய் சிரட்டையிலேயே மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றது.
கஞ்சி குடித்து உயிரை தாங்கிப்பிடித்த மக்கள்

இறுதி யுத்தத்தில் கஞ்சியை குடித்து தனது உயிரை காப்பாற்றிக் கொண்ட முல்லைத்தீவு - புதுகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அந்தோனிபிள்ளை மேரி ரெஜிந்தா பிபிசி தமிழுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
''2009ஆம் ஆண்டு எங்களுடைய மக்கள் யுத்தத்திலே துன்பப்பட்டு, வறுமைப்பட்டு, உணவு இல்லாமல் தவித்தனர். எத்தனையோ சிறுவர்கள், பெரியவர்கள் சொல்ல முடியாத கொடுமைக்கு ஆளானார்கள். வலிகள் நிறைந்த அந்த நேரத்தில் இந்த கஞ்சி தான் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காத்தது.
தண்ணீரும், அரிசியும், உப்பும் மாத்திரமே அப்போது கைவசம் இருந்தன. கஞ்சி காய்ச்சி குடிப்பது மட்டும்தான் எங்களுக்கு இருந்த ஒரே வழி. அதனால்தான் இந்த கஞ்சியை ஒவ்வொரு வருடமும் மறக்க முடியாத ஒரு உணவு வகையாக கருதுகிறோம். சாகும் வரை வடுவாக அமைந்த '2009' துயர நிகழ்வில் உயிர் காக்க உதவிய கஞ்சியை ஒவ்வொரு வருடமும் காய்ச்சி மக்களுக்கு பகிர்ந்து பழைய சம்பவங்களை நினைவுகூர்கிறோம்.
எத்தனையோ மக்கள் அந்த இடத்தில் உயிர்நீத்தனர். பசியால் அவதிப்பட்டவர்கள் கொடூரமான தருணங்களை அந்த காலத்தில் எதிர்கொண்டனர். மக்கள் சொல்லெண்ணா துன்பங்களை அனுபவித்து, குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தவித்தனர். மஞ்சள் தண்ணீர் குடித்த நேரம் அது. தமிழீழத்தில் மறக்க முடியாத வரலாறாக அது பதிந்து விட்டது," என்கிறார் அந்தோனிபிள்ளை மேரி ரெஜிந்தா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












