மொராக்கோவால் அரையிறுதியில் பிரான்சை வீழ்த்தி கோப்பையை நெருங்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
கத்தாரில் நடைபெற்று வரும் 2022ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலக கோப்பையின் முதல் அரையிறுதி முடிந்து அர்ஜென்டினா இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டது. அடுத்த அரையிறுதி ஆட்டம் நள்ளிரவு 12:30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் மோதப்போகும் பிரான்ஸ், மொராக்கோ ஆகிய இரண்டு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள்?
பிரான்ஸ், மொராக்கோவுக்கு இடையிலான ஆட்டம், இரண்டு சிறந்த தற்காப்பு அணிகளுக்கு இடையிலான போராட்டமாக இருக்கக்கூடும்.
நாக் அவுட் ஆட்டங்களில் ஒரு கோலைக்கூட விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற நோக்கில் பிரான்ஸ் ஆடியது. போலந்து, இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளுக்கும் பெனால்டி ஷாட் கோல்களை மட்டுமே கொடுத்தது.
இந்த உலக கோப்பையின் மொத்த போட்டிகளிலும் மொராக்கோ அணிக்கு எதிராக கனடாவுக்கு கிடைத்த ஒரு கோலை தவிர வேறு எந்த அணியாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
அந்த ஒரு கோலும் கூட, மொராக்கோ அணியைச் சேர்ந்த நயெஃப் அகேர்ட் தவறுதலாக அடித்ததால் கனடாவுக்குக் கிடைத்தது.
கத்தாரில் அதிக கோல் அடித்த கிலியன் எம்பாப்பே (5 கோல்கள்) மற்றும் ஒலிவியே கிரூட்(4 கோல்கள்) ஆகிய இருவரும் பிரெஞ்சு அணியில் உள்ளனர்.
கிலியன் எம்பாப்பே, தனக்குப் பழக்கமான அஷ்ரஃப் ஹக்கிமியுடன் மோதவிருக்கிறார். இருவரும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியில் ஒன்றாக விளையாடுபவர்கள். ஹக்கிமியும் இந்த உலகக் கோப்பையின் சிறந்த தற்காப்பு ஆட்டக்காரராக தனிக்கவனம் பெற்று நிற்கிறார்.
இவர்களின் வேகத்தைக் குறைப்பது, மொராக்கோவின் டிஃபண்டர்களுக்கு பெரிய பிரச்னையாக இருக்கும். மொராக்கோ அணியின் ஸ்டிரைக்கர்களில் ஒருவரான வலீத் செத்தீரா, போர்ச்சுகலுடனான காலிறுதி ஆட்டத்தில் ரெட் கார்ட் வாங்கியதால், அவர் அரையிறுதியில் ஆட முடியாது.
பிரான்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்களில் சிலருக்கு ஏற்பட்ட காயங்களால், இளம் வீரர்கள் அவர்களுடைய இடத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
குறிப்பாக, ஊஹெலியான் சூவெய்மென்னி. அவர் சென்ட்ரல் மிட்ஃபீல்டரான என்கோலோ கான்டேவுடைய இடத்தில் பங்கெடுத்து, ஒரு தற்காப்பு மிட்ஃபீல்டராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் அவர் அருமையான ஒரு கோலை அடித்தார்.
பிரான்ஸிலுள்ள மற்றொரு முக்கிய வீரர் அன்டோய்ன் க்ரீஸ்மேன். இந்த உலகக் கோப்பையில் பிரான்சின் சிறந்த வீரராக, ஐந்து கோல்களை அடிப்பதற்கான வாய்ப்புகளை ஒரு ரைட் மிட்ஃபீல்டராக ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
அதை ரசிகர்களும் கவனித்து வருகின்றனர். காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், பிரெஞ்சு அணியின் ரசிகர்கள் அவரைப் பற்றி சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க வகையில் பாராட்டி வருகின்றனர்.
இதுவரையிலான ஆட்டங்களில் செய்ததைப் போலவே, மொராக்கோ பொறுத்திருந்து ஆடி, எதிர்த்தாக்குதலைப் பயன்படுத்தி வாய்ப்புகளை உருவாக்க முயலக்கூடும்.
ஆனால், அவர்கள் இதுவரை செய்ததைப் போல், பிரெஞ்சு அணியின் தாக்குதல் ஆட்டம் அவ்வளவு எளிதில் உடைக்கக்கூடியதாகவோ எதிர்த்தாக்குதல் நடத்த ஏற்புடையதாகவோ இல்லாமல் போகும் வாய்ப்பும் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், மொராக்கோவின் தற்காப்பு ஆட்டம் இதுவரை இந்த உலகக் கோப்பையில் சிறந்த தற்காப்பு ஆட்டமாக இருந்து வருகிறது.
அட்லஸ் லயன்ஸ் எனப் பெயர் பெற்ற அவர்களுடைய அந்தத் தற்காப்பு ஆட்டமே, குரோஷியா, ஸ்பெயின், பெல்ஜியம், போர்ச்சுகல் என்று எந்த அணியையும் கோல் அடிக்க விடாமல் தடுத்துள்ளது.
ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஸ்பெயினுக்கு எதிராக மொராக்கோ பெனால்டி ஷூட் அவுட்டுக்கு சென்றபோது, அதன் கோல் கீப்பர் யசின் பூனோ இரண்டு ஸ்பாட் கிக்குகளை தடுத்துக் காப்பாற்றினார்.
அவர்களுடைய தற்காப்பு யுக்தியையும் மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் பேக் ஃபோரில் ஆடிய நயெஃப் அகேர்டும் நுசேர் மஸ்ரவி இருவரும் போர்ச்சுகலுடனான போட்டியில் காயம் காரணமாக பங்கு பெறவில்லை.
சென்டர்-பேக் ரொமைன் சைஸ், அந்தப் போட்டியின்போது காயமடைந்தார். இவர்கள் பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் பங்கெடுப்பார் என்பது உறுதியாகியுள்ளது.
அதேவேளையில், மொராக்கோவை பொறுத்தவரை, வீரர்கள் மாறினாலும் ஆட்டம் மாறுவதில்லை. அவர்களுடைய தற்காப்பு ஆட்டத்தை உடைப்பது மிகவும் கடினமானது என்ற பெயரைத் தொடர்ந்து தக்க வைத்துள்ளார்கள்.

பட மூலாதாரம், Getty Images
1958, 1962 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இரண்டு உலகக்கோப்பைகளை பிரேசில் வென்றது. அதைப் போன்ற சாதனையை நடப்பு சாம்பியனான பிரான்ஸ் செய்ய வேண்டுமென்ற இலக்கோடு ஆடி வருகிறது.
கால்பந்து உலக கோப்பையில் ஏழாவது முறையாக பிரான்ஸ் முதல் நான்கு இடங்களுக்குள் வந்துள்ளது.
2018ஆம் ஆண்டு குரோஷியாவை இறுதிச்சுற்றில் எதிர்கொண்டது. அரையிறுதியில் வென்றால், இந்த முறை அர்ஜென்டினாவை எதிர்கொள்ளும்.
ஃபிஃபா 2022 தொடங்கிய நேரத்தில், தரவரிசைக்கு வெளியே மொராக்கோ இருந்தது. இப்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ள முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
பிரான்சும் மொராக்கோவும் இதுவரை, உலகக் கோப்பை போட்டிகளில் மோதியதில்லை. இதற்கு முன்பு 1963ஆம் ஆண்டில் மட்டுமே மொராக்கோ பிரான்ஸை தோற்கடித்துள்ளது.
பிரான்ஸ் அணி, எதிரணியிடம் அதிமான நேரம் பந்து இருக்க விட்டாலும்கூட, எதிரணியைத் தாக்குவதற்கான தருணத்திற்குக் காத்திருப்பதே அதன் யுக்தியாக இதுவரை இருந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இது இங்கிலாந்துக்கு எதிராக பயனுள்ள உத்தியாக இருந்தது. இதே அணுகுமுறை கடந்த உலக கோப்பையிலும் அவர்களுக்குப் பலனளித்தது.
ஆனால் மொராக்கோவிற்கு எதிரான ஆட்டத்தில், பந்தை தன் வசம் அதிகமாக வைத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். அதுகூட, பிரான்ஸில் உள்ள அட்டாக்கிங் வீரர்களுக்குக் கடினமாக இருக்காது.
ஆனால், மொராக்கோவின் யுக்தியாக இன்னமும் கடுமையான தற்காப்பு ஆட்டமே உள்ளது. அது கடந்த ஐந்து போட்டிகளிலும் சராசரியாக 32 சதவீதமே பந்தை தன் வசம் வைத்திருந்தது.
இது எந்த அணியிடமும் இல்லாத அளவுக்குக் குறைவான நேரம். அதிலும் காலிறுதியில் போர்ச்சுகலை வெளியேற்றிய ஆட்டத்தில், வெறும் 26 சதவீதமே பந்தை தன் வசம் வைத்திருந்தது.
இதில் மொராக்கோ வீரர்களின் ஊடுருவ முடியாத தற்காப்பு ஆட்டமும் சோஃபியான் பூஃபால் போன்றோரின் வேகமான எதிர்த்தாக்குதல் திறனைச் சார்ந்திருக்கும் யுக்தி வேலை செய்ததே வெற்றி பெறக் காரணம்.
இரண்டு அணிகளுமே சிறப்பான எதிர்த்தாக்குதலையும் தற்காப்பையும் கொண்டிருக்கும் சூழலில், இந்த அரையிறுதிப் போட்டி ஒருவேளை அர்ஜென்டினா-குரோஷியா போட்டியை விடவும் சுவாரஸ்யமானதாக இருக்கக்கூடும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












