குரு தேக் பகதூர் வரலாறு: ஒளரங்கசீப் முன் தலைவணங்காமல் உயிரை துறந்தவர்

- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி இந்தி
1664 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி, டெல்லியில் இருந்து ஒரு சீக்கியர்கள் குழு பஞ்சாபில் உள்ள பகாலா கிராமத்தை அடைந்தது. தான் இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு எட்டாவது குரு ஹர்கிஷன், தனது வாரிசு பகாலாவில் கண்டுபிடிக்கப்படுவார் என்று அறிவித்தார்.
பகாலாவில் சீக்கியர்களின் சிறப்புக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு அதில் தேக் பகதூருக்கு குருவின் சிம்மாசனம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஒரு பாரம்பரிய விழாவில், குருதித்தா ரந்தாவா குருவின் நெற்றியில் குங்குமத் திலகம் இட்டு, அவருக்கு ஒரு தேங்காய் மற்றும் ஐந்து பைசாவை பரிசளித்து, குருவின் சிம்மாசனத்தில் அமர வைத்தார்.
தொடக்கத்தில் குரு தேக் பகதூர் வெளிப்படையாக பேசுபவராக இருக்கவில்லை. பிரபல பத்திரிகையாளர் குஷ்வந்த் சிங் தனது 'எ ஹிஸ்டரி ஆஃப் தி சீக்ஸ்' என்ற புத்தகத்தில் "குரு தேக் பகதூர் சாமானியர்களிடையே பிரபலமடைந்ததற்கு பின்னணியில் இந்த இயல்புதான் இருந்தது. தீர்மல் அவரை படுகொலை செய்ய முயன்றார். ஆனால் படுகொலை செய்யும் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் வெற்றிபெறவில்லை,” என்று எழுதியுள்ளார்.
"தேக் பகதூர் பகாலாவை விட்டு அமிர்தசரஸ் சென்றார். அங்கு ஹர்மந்திர் சாஹிப்பின் கதவுகள் மூடப்பட்டன. அங்கிருந்து தனது தந்தையால் நிறுவப்பட்ட கீரத்பூர் நகருக்குச் சென்றார். அதன் பிறகு அவர் கீரத்பூரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஒரு புதிய கிராமத்தை நிறுவினார். அதற்கு அவர் ஆனந்த்பூர் என்று பெயரிட்டார்,” என்று அவர் மேலும் எழுதுகிறார்,

பட மூலாதாரம், Getty Images
இந்த இடம் இப்போது ஆனந்த்பூர் சாஹிப் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இங்கேயும் அவரது எதிரிகள் அவரை நிம்மதியாக வாழ விடவில்லை.
குரு தேக் பகதூரின் கைது
குரு தேக் பகதூர் 1621ஆம் ஆண்டு பிறந்தார். அவர் ஆறாவது சீக்கிய குரு ஹர்கோவிந்தின் இளைய மகன். ஆனந்த்பூரில் சில நாட்கள் தங்கியிருந்த குரு தேக் பகதூர் கிழக்கு இந்தியாவுக்கு பயணம்செய்ய முடிவு செய்தார். வழியில் ஆலம் கான் தலைமையிலான முகலாய வீரர்களால் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பது பற்றி வரலாற்றாசிரியர்களிடையே ஒத்த கருத்து இல்லை. "இது முகலாய அரசவையில் வாழ்ந்த ராம் ராயின் தூண்டுதலால் செய்யப்பட்டது. அமைதியைக் குலைப்பதாக குரு தேக் பகதூர் மீது குற்றம் சாட்டப்பட்டது," என்று குஷ்வந்த் சிங் எழுதுகிறார்.
வரலாற்றாசிரியர் ஃபோஜா சிங் இதை ஏற்கவில்லை. ராம் ராய், தேக் பகதூரை தனது குருவாகக் கருதத் தொடங்கிவிட்டதாகவும், அவரிடம் எந்த தீய எண்ணமும் இருக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

ஒளவுரங்கசீப்பின் முன்னால் நிறுத்தப்பட்டார்
சரப் ப்ரீத் சிங் தனது 'ஸ்டோரி ஆஃப் தி சீக்ஸ்’ என்ற புத்தகத்தில், "குரு தேக் பகதூர் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், 1665ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி குரு தேக் பகதூர் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் ஔரங்கசீப் முன் ஆஜர்படுத்தப்பட்டார்,” என்று எழுதுகிறார்.
குரு தேக் பகதூர் பேரரசர் ஔரங்கசீப்பிடம், "எனது மதம் இந்துவாக இல்லாமல் இருக்கலாம், வேதங்களின் மேலாதிக்கம், சிலை வழிபாடு மற்றும் பிற பழக்கவழக்கங்களை நான் நம்பாமல் இருக்கலாம், ஆனால் நான் இந்துக்கள் கெளரவமாக வாழவும், அவர்களின் மத நம்பிக்கைகளை பாதுகாக்கவும் தொடர்ந்து போராடுவேன்,” என்றார்.
ஆனால் குரு தேக் பகதூரின் இந்த வார்த்தைகள் ஔரங்கசீப் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஔரங்கசீப்பின் அரசவையில் இருந்த பல முஸ்லிம் அறிஞர்கள், குருவின் செல்வாக்கு அதிகரித்து வருவது இஸ்லாத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று அவரிடம் கூறினார்கள்.

பட மூலாதாரம், PENGUIN VIKING
ஔரங்கசீப் குருவுக்கு மரண தண்டனை வழங்க முடிவு செய்தார், ஆனால் அவரது ராஜபுத்திர மந்திரிகளில் ஒருவரான ராஜா ராம் சிங் அவரை உயிருடன் விட்டுவிடுமாறு கோரினார். அந்தக் கோரிக்கையை ஒளரங்கசீப் ஏற்றுக்கொண்டார்.
ஒரு மாதம் கழித்து டிசம்பரில், குரு தேக் பகதூர் மீதான எல்லா குற்றச்சாட்டுகளும் திரும்ப பெறப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார். விடுதலை செய்யப்பட்டவுடன் குரு கிழக்கு நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தார். அவர் மதுரா, ஆக்ரா, கான்பூர், அலகாபாத், வாரணாசி, போத்கயா வழியாக பட்னாவை அடைந்தார்.
குரு தேக் பகதூரின் மனைவி மாதா குஜ்ரி அங்கு தங்க முடிவு செய்தார். ஆனால் குரு தேக் பகதூர் தனது தொண்டர்களை சந்திக்க டாக்கா நோக்கிச் சென்றார். டாக்காவில் வசிக்கும் போது அவருக்கு ஒரு மகன் பிறந்திருப்பதாக செய்தி கிடைத்தது. குழந்தைக்கு கோபிந்த் ராய் என்று பெயரிடப்பட்டது. பின்னர் அவர் குரு கோபிந்த் சிங் என்று அறியப்பட்டார்.

அசாமில் மூன்று ஆண்டுகள் வாழ்ந்தார்
இதற்கிடையில் காம்ரூப் மன்னரின் கிளர்ச்சியை அடக்கும் பொறுப்பை ஒளரங்கசீப் ராஜா ராம் சிங்கிடம் ஒப்படைத்தார். அந்த நேரத்தில் காம்ரூப் ஓர் ஆபத்தான இடமாக கருதப்பட்டது. துணிச்சலான போர் வீரர்கள் மற்றும் 'மந்திர தந்திரம்' ஆகியவற்றிற்கு அது பிரபலமாக இருந்தது. ராஜா ராம் சிங், குரு தேக் பகதூரின் ஆன்மிக சக்தியில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.
காம்ரூப் மீதான நடவடிக்கையில் தன்னுடன் இணையுமாறு ராஜா ராம் சிங், குரு தேக் பகதூரை கேட்டுக் கொண்டார். குருவால் அவரது கோரிக்கையை மறுக்க முடியவில்லை.
"சண்டையின் போது குரு அசாமில் சுமார் மூன்று ஆண்டுகள் கழித்தார். இதற்கிடையில் அவர் அவ்வப்போது மத்தியஸ்தராகவும் செயல்பட்டார். அங்கிருந்து திரும்பியதும் பட்னாவில் வசிக்கும் தனது மனைவியை அவரால் சந்திக்கமுடியவில்லை. ஏனென்றால் பஞ்சாபில் அவரது இருப்பு அவசியம் என்று அவருக்கு தொடர்ந்து செய்திகள் வந்தன. 1672 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சக் நான்கியில் தனது அரியணைக்கு அவர் திரும்பினார். குருநானக்கைத் தவிர வேறு எந்த சீக்கிய குருவும் செல்லாத இடங்களுக்கு அவரது பயணங்கள் அவரை அழைத்துச் சென்றன,”என்று சர்ப் ப்ரீத் சிங் எழுதியுள்ளார்.

காஷ்மீர் பண்டிதர்களின் கோரிக்கை
1675 மே 25ஆம் தேதி குரு தேக் பகதூர் ஆனந்த்பூர் சாஹிப்பில் ஒரு கூட்டத்தில் அமர்ந்திருந்தபோது, காஷ்மீரில் இருந்து ஒரு குழு அவரைச் சந்திக்க வந்தது. பண்டிட் கிர்பா ராம் குழுவுக்கு தலைமை வகித்தார். பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் தன் முன்னோர்களின் மதம் ஆபத்தில் இருப்பதாக கைகூப்பி அவர் குருவிடம் தெரிவித்தார். ஒளரங்கசீப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காஷ்மீர் ஆளுநர் இஃப்தேகர் கான், கிர்பா ராம் இஸ்லாத்தை ஏற்க வேண்டும், இல்லையெனில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தார்.
குரு தேக் பகதூர் கிர்பா ராமின் வேண்டுகோளுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் அவரது வேதனையைக் கேட்டு, குருவின் மனம் உருகியது. "குரு தேக் பகதூர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், தாங்களும் மதம் மாறுவதாக பேரரசரின் பிரதிநிதியிடம் கூறுமாறு காஷ்மீரில் இருந்து வந்த பிராமணர்களின் குழுவிடம் குரு சொன்னார்," என்று குரு தேக் பகதூரின் வாழ்க்கை வரலாற்றில் ஹரி ராம் குப்தா எழுதியுளார்.
'எல்லா சீக்கியர்களும் குருவை 'உண்மையான அரசர்' என்று அழைப்பதை ஒளரங்கசீப் எதிர்த்தார். தான்தான் உண்மையான பேரரசர் என்றும், இந்தியாவின் ஆட்சியாளர் ஒரு போலிச் சக்கரவர்த்தி என்றும் குரு பிரசாரம் செய்கிறார் என்று ஔரங்கசீப் கருதினார். முகலாய அரசவையில் இருக்கும் பிரமுகர்களுக்கு ’ பகதூர்’ என்று பட்டப்பெயர் அளிக்கப்படுவதால், குரு தனது பெயரில்’பகதூர்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதை ஔரங்கசீப் விரும்பவில்லை,” என்று ஹரி ராம் குப்தா குறிப்பிடுகிறார்.
குரு தேக் பகதூரை டெல்லியில் தன் முன் ஆஜர்படுத்தி, இஸ்லாத்தை ஏற்க கட்டாயப்படுத்த வேண்டும், இல்லையெனில் அவர் உயிரை இழக்க நேரிடும் என்று ஔரங்கசீப் உத்தரவிட்டார்.
குரு தேக் பகதூரிடம் கேள்வி பதில்
குரு தேக் பகதூர் தனது குடும்பத்தினர் மற்றும் தோழர்களிடம் விடைபெற்றுக்கொண்டார். தனக்குப்பிறகு அடுத்த குருவாக தனது மகன் கோபிந்த் ராய் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தார். 1675 ஜூலை 11ஆம் தேதி குரு தேக் பகதூர் தனது ஐந்து சீடர்களான பாய் மதி தாஸ், அவரது இளைய சகோதரர் சதி தாஸ், பாய் தயாலா, பாய் ஜைதா மற்றும் பாய் உதய் ஆகியோருடன் டெல்லிக்கு புறப்பட்டார். சிறிது தூரம் சென்றதும், மேலதிக செய்திகளைப் பெற பாய் உதய் மற்றும் பாய் ஜைதாவை டெல்லிக்கு அனுப்பினார்.
ஒரு நாள் கழித்து மல்லிக்பூரின் ரங்காரன் கிராமத்தில், ரோபர் காவல் நிலையத்தின் ஹக்கீம் மிர்சா நூர் முகமது கான், குருவை கைது செய்தார். ரோபரில் இருந்து, குருவும் அவரது மூன்று தோழர்களும் பலத்த பாதுகாப்புடன் சிர்ஹிந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பிறகு அவர் டெல்லியில் உள்ள சாந்தினி செளக் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். இந்த நான்கு மாத சிறைவாசத்தில் குருவும் அவரது மூன்று தோழர்களும் பல சித்திரவதைகளுக்கு ஆளானார்கள்.

பட மூலாதாரம், Getty Images
குரு தேக் பகதூரின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஹர்பன்ஸ் சிங் விர்தி தனது 'Guru Tegh Bahadur Savior of Hindus and Hindustan' என்ற புத்தகத்தில், "குரு தனது மூன்று தோழர்களுடன் டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு குருவிடம் இந்து மதம் மற்றும் சீக்கிய மதம் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன. பூணூல் அணிபவர்களுக்காகவும், நெற்றியில் திலகம் வைத்துக்கொள்பவர்களுக்காகவும் ஏன் உயிர் தியாகம் செய்கிறீர்கள் என்று அவரிடம் வினவப்பட்டது.
இந்துக்கள் பலவீனமாகி விட்டதால் நானக்கின் காலடியில் தஞ்சம் அடைந்தனர் என்பதே குருவின் பதில். முஸ்லிம்களும் தன்னிடம் இதுபோன்ற உதவியை கேட்டிருந்தால், அவர்களுக்காகவும் உயிரை தியாகம் செய்திருப்பேன் என்றும் குரு பதில் சொன்னார்," என்று எழுதியுள்ளார்.
ஒளரங்கசீப்பின் எச்சரிக்கை
டாக்டர் திரிலோச்சன் சிங் தனது 'Guru Tegh Bahadur Prophet and Martyr’ என்ற புத்தகத்தில், ”ஒளவுரங்கசீப் காலை 9 மணிக்கு திவான்-இ-ஆமில் நுழைந்து அதன் பால்கனியை அடைந்தார். அவர் வெள்ளை பட்டு ஆடை அணிந்திருந்தார். பட்டால் ஆன இடுப்புப் பட்டை அணிந்திருந்தார். அதில் ரத்தினங்கள் பதித்த குத்துவாள் தொங்கிக் கொண்டிருந்தது. அவர் தலையில் வெண்ணிற தலையலங்காரம் இருந்தது. சக்கரவர்த்தியின் இருபுறமும் நின்றிருந்த நங்கைகள் மயில் இறகுகளால் ஆன விசிறியால் காற்று வீசினர்.
சீக்கிய மதத்தைப் பற்றி பேரரசருக்கு ஏற்கனவே ஞானம் இருந்தது. முஸ்லிம்களைப் போலவே சீக்கியர்களும் சிலை வழிபாட்டுக்கு எதிரானவர்கள் என்பதும் அவருக்குத் தெரியும். இருவருக்குள்ளும் கருத்தியல் ரீதியாக நெருக்கம் அதிகம் இருந்ததால், குருவை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது,” என்று எழுதியுள்ளார்.
ஔரங்கசீப் குரு தேக் பகதூரிடம், உங்களுக்கு சிலை வழிபாட்டில் நம்பிக்கை இல்லை, இந்த பிராமணர்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை. பிறகு ஏன் அவர்கள் விவகாரத்தை எடுத்துக்கொண்டு என் முன் வந்தீர்கள்?" என்று வினவினார்.
குரு தேக் பகதூர் ஔரங்கசீப்பிற்கு புரியவைப்பதில் தோல்வி அடைந்தார். இறுதியில், அவர் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் அல்லது இறக்கத் தயாராக வேண்டும் என்று அரசவை தரப்பில் இருந்து அவரிடம் தெளிவாகச் சொல்லப்பட்டது. குரு தேக் பகதூர் இரும்புக் கூண்டில் அடைக்கப்பட்டு சங்கிலியால் கட்டப்பட்டார்.

பட மூலாதாரம், PENGUIN BOOKS
ஔரங்கசீப் குருவிடம் பல தூதர்களை அனுப்பினார். ஆனால் குரு தனது கருத்தில் உறுதியாக இருந்தார். ஒரு நாள் சிறைத் தலைவர் குருவிடம், “நீங்கள் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று பேரரசர் விரும்புகிறார். உங்களால் இதைச் செய்ய முடியாவிட்டால், நீங்கள் புனித புருஷர் என்று அவர் நம்பும் வகையில் ஓர் அதிசயத்தை நடத்திக்காட்டுங்கள்,” என்றார்.
"நண்பரே, அதிசயம் என்பது கடவுளின் கருணை மற்றும் தயவு. உலகத்திற்கு முன்பு மாயாஜாலம் காட்ட அவர் அனுமதிக்கவில்லை. அவரது அருளை தவறாகப் பயன்படுத்தினால் அவர் கோபம் கொள்வார். நான் அதிசயத்தை காட்ட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், ஒவ்வொரு நாளும் நம் கண் முன்னால் அற்புதங்கள் நடக்கின்றன. பேரரசர் மற்றவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கிறார், ஆனால் ஒரு நாள் தானும் இறக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியாமல் இருப்பதும் ஓர் அதிசயம்தானே என்று குரு பதிலளித்தார்,” என்று ஹர்பன்ஸ் சிங் விர்தி எழுதுகிறார்.
மூன்று கூட்டாளிகளின் கொலை
குரு தேக் பகதூர் மனம் மாற மாட்டார் என்று தெரிந்ததும் அவரது தோழர்கள் அவருடைய கண்முன்னே சித்திரவதை செய்யப்பட்டனர். "இன்று சாந்தினி சௌக்கில் காவல் நிலையம் இருக்கும் இடத்தில் இருந்த நீரூற்றுக்கு அருகில், பாய் மதி தாஸ் அவர் எதிரில் ரம்பத்தால் வெட்டப்பட்டார். அவர் இந்த சித்திரவதையை அமைதியுடனும் தைரியத்துடனும் எதிர்கொண்டார். சீக்கியர்களால் தினசரி அர்தாஸில் இது குறிப்பிடப்படுகிறது.
இந்தக் காட்சியை பார்த்துக்கொண்டிருந்த குருவிடம் கூப்பிய கரங்களுடன் பாய் மதி தாஸ் ஆசிர்வாதத்தைப் பெற்றார். சதி தாஸ் கொதிக்கும் எண்ணெயில் உயிருடன் தூக்கி எறியப்பட்டார். பின்னர் அவரது உடலில் பருத்தி துணியை சுற்றி ஒரு கம்பத்தில் கட்டி தீ வைக்கப்பட்டது.
இதையெல்லாம் ஒரு பெருங்கூட்டம் பார்த்துக் கொண்டிருந்தது. குரு தேக் பகதூரின் கண் முன்னே இவையெல்லாம் நடந்து கொண்டிருந்தன. அவர் தொடர்ந்து வாஹே குரு என்று உச்சரித்துக் கொண்டிருந்தார்.
அங்கு இருந்த குருவின் மற்றொரு சீடர் ஜெய்தா தாஸ், இரவில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை அருகில் ஓடும் ஜமுனா ஆற்றில் விட்டார்,” என்று குரு தேக் பகதூரின் வாழ்க்கை வரலாற்றில் ஹரி ராம் குப்தா எழுதுகிறார்,.
தேக் பகதூரின் கடைசி நாள்
மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நாளில் குரு தேக் பகதூர் அதிகாலையில் எழுந்தார். காவல் நிலையத்திற்கு அருகே உள்ள கிணற்றில் குளித்துவிட்டு பிரார்த்தனை செய்தார்.
11 மணியளவில் மரண தண்டனை வழங்கப்படும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, காஸி அப்துல் வஹாப் போரா அவருக்கு ஃபட்வா (சட்ட உத்தரவு) வாசித்தார். மரண தண்டனை நிறைவேற்றுபவரான ஜலாலுதீன் வாளுடன் அவருக்கு முன்னால் நின்றார். அப்போது வானத்தில் மேகங்கள் சூழ்ந்தன. அங்கிருந்தவர்கள் கதறி அழ ஆரம்பித்தனர்.

பட மூலாதாரம், DSGMC
குரு தேக் பகதூர் இரு கைகளையும் உயர்த்தி ஆசிர்வதித்தார். குரு தேக் பகதூரின் தலையை ஜலாலுதீன் துண்டித்தவுடன் கூட்டத்தில் பேரமைதி நிலவியது. குரு தேக் பகதூர் உயிர்தியாகம் செய்த அதே இடத்தில் பின்னர், சீஸ்கஞ்ச் குருத்வாரா கட்டப்பட்டது.
குருவின் சீடர் ஜெய்தா தாஸ், துண்டிக்கப்பட்ட தலையை டெல்லியில் இருந்து 340 கிமீ தொலைவில் உள்ள ஆனந்த்பூருக்கு எடுத்துச் சென்று அவரது ஒன்பது வயது மகன் கோபிந்த் ராயிடம் கொடுத்தார். ஆனந்த்பூர் சாஹிப்பில் குரு தேக் பகதூரின் துண்டிக்கப்பட்ட தலை முழு மரியாதையுடன் புதைக்கப்பட்ட இடத்தில் சீஸ்கஞ்ச் குருத்வாரா கட்டப்பட்டது.
லக்கி ஷா என்ற மற்றொரு நபர், கோட்வாலியில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரகாப் கஞ்சில் குரு தேக் பகதூரின் உடலை தகனம் செய்தார். அவரது நினைவாக அதே இடத்தில் குருத்வாரா ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
முகலாயர்களின் வீழ்ச்சியின் ஆரம்பம்
குரு தேக் பகதூரின் உயிர் தியாகத்திற்குப் பிறகு பல காஷ்மீரி பண்டிதர்கள் சீக்கிய மதத்தைத் தழுவினர். காஷ்மீரி பிராமணர்களுக்கு தலைமை தாங்கிய கிர்பா ராம் சீக்கியராக மாறினார்.
"குரு தேக் பகதூரின் இந்த தியாகம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இது இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை மாற்றியது. மனிதகுல வரலாற்றில், மனித உரிமைகளுக்காக அளிக்கப்பட்ட உயிர்தியாகத்தின் மிகப்பெரிய உதாரணமாக இது ஆனது. இந்தியாவின் வலிமைமிக்க முகலாயப் பேரரசின் வீழ்ச்சி இங்கிருந்து தொடங்கியது,"என்று சீக்கிய அறிஞர் குர்முக் சிங் தனது 'குரு தேக் பகதூர் தி ட்ரூ ஸ்டோரி' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.








