ஹஜ் யாத்திரையின் போது முஸ்லிம்கள் கடைபிடிக்கும் 8 சடங்குகளும் உணர்த்தும் உண்மைகள்

பட மூலாதாரம், Getty Images
ஹஜ் என்பது முஸ்லிம்களின் மிகப்பெரிய மத நிகழ்வு. இது இஸ்லாத்தின் ஐந்து முக்கிய கோட்பாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் திறன் கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் இந்த யாத்திரையை மேற்கொள்வது கடமை அல்லது கட்டாயம் என்று நம்பப்படுகிறது.
இந்த காரணத்திற்காக, இஸ்லாத்தை பின்பற்றும் உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் சவுதி அரேபியாவின் மெக்காவில் கூடுகிறார்கள்.
`ஹஜ்’ என்பது அரபு நாட்காட்டியின் இறுதி மாதமான சில்ஹஜ்ஜுக்கு வழங்கப்படும் பெயர். அந்த மாதத்தின் எட்டு முதல் பன்னிரண்டாம் தேதி வரை ஹஜ்ஜின் முதன்மையான சடங்குகள் மேற்கொள்ளப்படுவதே இதற்குக் காரணம்.
ஹஜ் புனித யாத்திரையை நிறைவேற்ற முஸ்லிம்கள் சில சடங்குகளை கடைபிடிக்க வேண்டும்.
ஹஜ்ஜுக்கான குறிப்பிட்ட ஆடைகளை அணிவது, சஃபா மற்றும் மர்வா மலைகளுக்கு இடையே நடப்பது, காபாவை சுற்றி வருவது, அராபத் சமவெளியில் தங்குவது, சாத்தான் மீது கற்களை எறிவது, பலி கொடுப்பது, மொட்டையடிப்பது மற்றும் மெக்காவை சுற்றி வருவது ஆகியவை இதில் அடங்கும்.
முஸ்லிம் அறிஞர்களின் கூற்றுப்படி, இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே, ஹஜ் பெருநாள் மெக்காவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இதே பாணியில் அனுசரிக்கப்பட்டது.
ஹஜ் யாத்திரையின் போது முஸ்லிம்கள் கடைபிடிக்கும் 8 சடங்குகளும் அவற்றின் பின்னணியும் இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இஹ்ராமில் வெண்ணிற ஆடைகளை அணிதல்
ஹஜ் யாத்திரையில் முதலில் கடைப்பிடிக்க வேண்டிய சடங்கு 'இஹ்ராம்' (Ihram) ஆகும். மெக்காவை விட்டு விலகி வசிப்பவர்கள் மெக்கா செல்லும் வழியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்த பின்னர் இஹ்ராமை கடைபிடிக்க வேண்டும்.
'இஹ்ராம்' என்ற அரபு சொல், ஒரு நபர் அனைத்து வகையான பாவங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட செயல்களில் இருந்து தன்னை விலக்கி வைத்திருக்கும் நிலையை விவரிக்கிறது.
"எளிமையாகச் சொல்வதென்றால், இஹ்ராம் என்பது ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கான நோக்கமும் அதற்கான ஆடைகளும் ஆகும்" என்று டாக்கா பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய வரலாறு மற்றும் கலாசாரத் துறையின் விரிவுரையாளரான டாக்டர் முகமது உமர் ஃபாரூக் பிபிசி பங்களாவிடம் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த தனித்துவமான கட்டத்தின் அடையாளமாக ஆண்கள் தைக்கப்படாத இரண்டு வெள்ளை ஆடைகளை அணிய வேண்டும்.
கனடாவின் இஸ்லாமிய தகவல் மற்றும் தாவா மையத்தின் முன்னாள் தலைவரான டாக்டர் சபீர் அலி ஒரு நேர்காணலில், "இந்த ஆடை ஒரு கவசம் போல் தெரிகிறது. இஹ்ராமின் போது அத்தகைய உடையை அணிவது நம்மை படைத்தவரை சந்திப்பதற்கு நாம் தயாராக இருப்பதை பிரதிபலிக்கிறது." என்றார்.
ஆண்களுக்கு வெள்ளை ஆடை அணிய வேண்டும் என்ற விதிமுறை இருப்பது போல பெண்களுக்கு அந்த நிர்ப்பந்தம் இல்லை. பெண்களின் விருப்பப்படி, எந்த நிறத்திலும் தளர்வான ஆடைகளை அணியலாம்.
அரேபியாவில் ஹஜ் செய்த முதல் நபர் இப்ராஹிம் நபி என்று முஸ்லிம் அறிஞர்கள் கூறுகிறார்கள். கிறித்துவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் ஆபிரகாம் என்ற பெயரில் அவரை அறிவார்கள்.
டாக்கா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஃபாரூக் பிபிசி பங்களாவிடம் கூறுகையில், "காபாவின் கட்டுமானத்திற்குப் பிறகு, ஹஸ்ரத் இப்ராஹிம் அல்லாவின் உத்தரவின் பேரில் ஹஜ் செய்யத் தொடங்கினார், அதே நேரத்தில் வெள்ளை ஆடை அணிவது உட்பட ஹஜ்ஜின் அனைத்து சடங்குகளும் தொடங்கப்பட்டன." என்றார்.
முடி மற்றும் நகங்களை வெட்டக்கூடாது

பட மூலாதாரம், Getty Images
ஹஜ்ஜை முடிப்பதற்கு முன், யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் இஹ்ராம் அணிந்த பிறகு சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
பிறருடன் சண்டையிடுவதையோ அல்லது தகராறு செய்வதை தவிர்ப்பது, பாலுறவில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது, தாடியை சவரம் செய்யாதது அல்லது விரல் நகங்களை வெட்டாமல் இருப்பது, கொலை செய்யாமல் இருப்பது அல்லது ரத்தம் சிந்தாமல் இருப்பது, பிறரைப் பற்றிய வதந்திகள் மற்றும் விமர்சனங்களைத் தவிர்ப்பது ஆகியவை இதில் அடங்கும்.
இப்ராஹிம் நபியின் காலத்திலிருந்தே வெள்ளை ஆடை அணிவது போன்ற இந்த விதிமுறைகள் பின்பற்றப்பட்டதாக முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.
கனடாவின் இஸ்லாமிய தகவல் மற்றும் தாவா மையத்தின் முன்னாள் தலைவர் சபீர் அலி கூறுகையில், "இந்த விதிகளை கடைபிடிப்பதன் மூலம், ஆடை அலங்காரங்களை செய்வது போன்ற உலக நடைமுறை விஷயங்களில் கவனம் செலுத்த விரும்பாத நிலையை நாம் அடைகிறோம். ஹஜ்ஜின் போது நம்மை படைத்தவருடன் நெருக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இவை பின்பற்றப்படுகிறது" என்றார்.
காபாவைச் சுற்றிவருதல்

பட மூலாதாரம், Getty Images
இஹ்ராமுக்குப் பிறகு, ஹஜ்ஜின் இரண்டாவது சடங்கு இஸ்லாத்தின் புனிதமான இடமான காபாவை ஏழு முறை வலம் வருதல் ஆகும். யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் பொதுவாக காபாவை எதிர் கடிகார திசையில் (counter-clockwise) சுற்றி நடந்து செல்வார்கள்.
இந்த வழக்கம் இப்ராஹிம் காலத்தில் தொடங்கியதாக முஸ்லிம் அறிஞர்கள் நம்புகின்றனர். ஆனால் இந்த சடங்கு ஏன் எதிர் கடிகார திசையில் செய்யப்படுகிறது, ஏன் ஏழு முறை மட்டுமே செய்யப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
முஸ்லிம் அறிஞர் டாக்டர் சபீர் அலி `Let the Corona Speak' நிகழ்ச்சியில் பேசுகையில் , "இதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணமும் ரகசியமும் படைத்தவருக்கு தெரியும்." என்றார்.
இருப்பினும், இஸ்லாத்தின் அறிஞர்கள் சிலர், தேவதூதர்கள் சுற்றி வரும் சொர்க்கத்தில் உள்ள 'பைத்துல் மமூர்' என்ற புனித இல்லத்துடன் காபாவின் தவாஃப் என்ற பகுதிக்கு நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக நம்புகிறார்கள்.
அலி கூறுகையில், "இதனால்தான் காபா (Kaaba) பைத்துல்லா (Baitullah) அல்லது அல்லாவின் வீடு என்று அழைக்கப்படுகிறது. யாத்திரை செய்பவர்கள் படைத்தவருக்காக காத்திருப்பதைக் காட்ட இந்த புனித ஸ்தலத்தை ஏழு முறை சுற்றி வருகிறார்கள்." என்று விளக்கினார்.
இந்த ஹஜ் வழக்கம் இஸ்லாத்திற்கு முந்தைய காலத்திலும் பின்பற்றப்பட்டதாக இஸ்லாமிய சிந்தனையாளர்கள் கூறுகின்றனர்.
டாக்கா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் முகமது உமர் ஃபாரூக் கூறுகையில், "இது ஹஸ்ரத் இப்ராஹிம் காலத்திலிருந்தே இருந்தது."
இஸ்லாத்தின் நபிகள் நாயகம் பிறப்பதற்கு முன்பு வரை காபா தவாஃப் (Kaaba Tawaf) சடங்கில் சிறிய மாற்றங்கள் இருந்ததாக இஸ்லாமிய சிந்தனையாளர்கள் கூறுகின்றனர்.
ஃபாரூக் பிபிசி பங்களாவிடம் கூறுகையில், "அந்த காலக்கட்டத்தில் அரேபியர்கள் காபாவை ஆடைகள் இன்றி சுற்றி வந்தனர். பின்னர் இஸ்லாம் இதை நிறுத்திவிட்டு இப்ராஹிம் தொடங்கிய அசல் வழக்கத்திற்கு திரும்பியது." என்றார்.
சஃபாவிற்கும் மர்வாவிற்கும் இடையிலான பயணம்

பட மூலாதாரம், Getty Images
சஃபா மற்றும் மர்வா குன்றுகளுக்கு இடையே ஏழு முறை ஓடுவது ஹஜ்ஜின் முக்கிய சடங்காகும்.
இப்ராஹிம் நபி தனது மனைவி ஹாகர் மற்றும் கைக்குழந்தை இஸ்மாயிலை அல்லாவின் கட்டளையின் பேரில் சஃபா மற்றும் மர்வா மலைகளுக்கு அருகில் உள்ள மெக்காவில் விட்டுச் சென்றார் என்று இஸ்லாம் கூறுகிறது. ஹாகர் சஃபா மற்றும் மர்வா மலைகளுக்கு இடையே தண்ணீரைத் தேடி ஓடினார்.
அதைத் தொடர்ந்து, அல்லா கட்டளைப்படி அங்கு ஒரு கிணறு தோண்டப்பட்டது, ஹாகரும் அவருடைய குழந்தையும் தாகம் தீர்க்க அதிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடித்தனர். அந்த கிணறு பின்னாளில் 'ஜம்ஜம் கிணறு' என்ற பெயரில் பிரபலமானது.
கனடாவின் இஸ்லாமிய தகவல் மையத்தின் முன்னாள் தலைவர் சபீர் அலியின் கூற்றுப்படி, ஹஜ் செய்யும் போது இஸ்மாயில் மற்றும் அவரது தாயார் ஹாஜிரா, சஃபா மற்றும் மர்வா மலைகளுக்கு இடையே ஏழு முறை ஓடிய நிகழ்வை நினைவுகூரவே யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் இரு மலைகளுக்கு இடையே நடைப்பயணம் செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
அராஃபத் சமவெளியில் வசிப்பது
மினாவில் இரவைக் கழித்த பின்னர், பக்தர்கள் மறுநாள் அராஃபத்தின் சமவெளிக்குப் புறப்படுவார்கள். அதன் பிறகு, ஒரு நாள் முழுவதும் அங்கேயே தங்கி பிரார்த்தனை செய்வது ஒரு முக்கியமான மதச் சடங்காகக் கருதப்படுகிறது. அதன் பிறகு, மாலையில் யாத்ரீகர்கள் முஸ்தலிஃபாவுக்குப் புறப்பட்டு, திறந்த வானத்தின் கீழ் இரவைக் கழிக்கிறார்கள்.
முஸ்லிம் அறிஞர்கள் மினா முதல் முஸ்தலிஃபா வரை பின்பற்றப்படும் அனைத்து சடங்குகளிலும் நபி இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி மற்றும் மகன்களின் வரலாறும் அடங்கும் என்று நம்புகிறார்கள். இது தவிர, கோடையில் அராஃபத் சமவெளியில் நாள் முழுவதும் கழித்த பிறகு முஸ்தலிஃபாவில் திறந்த வானத்தின் கீழ் இருப்பது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கருதுகின்றனர்.
டாக்கா பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய வரலாறு மற்றும் கலாச்சாரத் துறையின் பேராசிரியரான டாக்டர் முகமது உமர் ஃபாரூக் பிபிசி பங்களாவிடம் கூறுகையில், "அராஃபத் மற்றும் முஸ்தலிஃபாவில் தங்கியிருப்பதன் மூலம், நல்ல எண்ணத்துடன் நல்ல செயல்களை செய்யாமல், உலகப் பிரகாரமான செல்வம், புகழ் மற்றும் செல்வாக்கு ஆகியவை வாழ்வின் இறுதிக் கணக்கீட்டில் நமக்கு உதவாது என்பதை யாத்ரீகர்கள் உணர முடியும்." என்கிறார்.
அதே நேரத்தில், ஹஜ்ஜின் போது அராஃபத் மற்றும் முஸ்தலிஃபாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவது இஸ்லாமிய 'ஹஷர் களம்' (Field of Hashr) அல்லது தீர்ப்பு நாளை நினைவூட்டுவதாகவும் பலர் கூறுகிறார்கள்.
சாத்தான் மீது கல்லெறிதல்
ஹஜ்ஜின் மிக முக்கியமான சடங்குகளில் ஒன்று சாத்தான் மீது கற்களை எறிவது ஆகும். முஸ்தலிஃபாவிலிருந்து வரும் யாத்ரீகர்கள் மினாவிற்கு ஏழு கூழாங்கற்கள் அல்லது சிறிய கற்களைக் கொண்டு வருவார்கள். அங்கு சாத்தானின் பெயரில் 'படா ஜமாரத்' எனப்படும் அடையாளச் சுவர் கட்டப்பட்டுள்ளது. யாத்ரீகர்கள் தாங்கள் கொண்டு வந்த ஏழு கற்களை அந்த சுவரில் வீசுவார்கள்.
மினாவில் மேலும் இரண்டு சாத்தானின் சுவர்கள் உள்ளன. ஹஜ்ஜின் கடைசி இரண்டு நாட்களில் அதன் மீது தலா ஏழு கற்கள் வீசப்படுகின்றன.
முகமது உமர் ஃபாரூக் பிபிசி பங்களாவிடம் கூறுகையில், "சாத்தானின் தீய திட்டங்களில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, ஹஸ்ரத் இப்ராஹிம் அதன் மீது கற்களை எறிந்தார். சாத்தானின் சுவரில் குறியீடாக கற்களை வீசுவது அந்த நிகழ்வில் இருந்து தான் தொடங்கியது." என்றார்.
இஸ்லாத்தின் படி, அல்லா இப்ராஹிம் நபியை தனது விலைமதிப்பற்ற சொத்தை தியாகம் செய்யும்படி கேட்டார். அதன் பிறகு இப்ராஹிம் தனது அன்பு மகன் இஸ்மாயிலை பலி கொடுக்க முடிவு செய்தார். தந்தையின் முடிவை இஸ்மாயிலும் ஏற்றுக்கொண்டார். இதற்குப் பிறகு, இப்ராஹிம் தனது மகனுடன் அராஃபத்தின் திறந்தவெளி பாலைவனத்திற்குச் சென்றார்.
அங்கு இஸ்மாயிலைப் பலியிடச் செல்லும் போது, சாத்தான் இப்ராஹிம் நபியின் செயல்களுக்கு தவறான அறிவுரைகளைக் கூறி இடையூறு செய்ய முயன்றது. இந்நிலையில் இப்ராஹிம் சாத்தான் மீது மூன்று இடங்களில் கற்களை வீசினார்.
முஸ்லிம் அறிஞர்களின் கூற்றுப்படி, ஹஜ்ஜின் போது கல்லெறியும் வழக்கம் இந்த சம்பவத்தின் நினைவாக பின்னர் தொடங்கியது.
மிருகங்களை பலியிடுதல்

பட மூலாதாரம், Getty Images
மினாவில் சாத்தான் மீது கற்களை எறிந்து விலங்குகளை பலியிடும் வழக்கம் உள்ளது. இப்ராஹிம் நபியின் வரலாறும் இந்தப் பாரம்பரியத்துடன் தொடர்புடையது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.
அல்லாவின் அறிவுறுத்தலின் பேரில், நபி இப்ராஹிம் தனது பிறந்த மகன் இஸ்மாயிலை பலியிடுவதற்காக அராஃபத்தின் சமவெளிக்கு அழைத்துச் சென்றார் என்று மக்கள் நம்புகிறார்கள், ஆனால் இறுதியில் அப்படி எதுவும் நடக்கவில்லை, அதாவது அவர் தனது மகனைப் பலியிடவில்லை.
இப்ராஹிமின் நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதல் பண்புகளால் அல்லா மகிழ்ச்சியடைந்தார், இஸ்மாயிலுக்குப் பதிலாக ஒரு விலங்கு பலியிடப்பட்டது.
அந்தச் சம்பவத்தின் நினைவாக ஹஜ்ஜின் மூன்றாம் நாளில் பசு, ஆடு, எருமை அல்லது ஒட்டகம் பலியிடப்படுவதாக இஸ்லாமிய சிந்தனையாளர்கள் கூறுகின்றனர். இந்த தியாகம் முக்கியமாக அல்லாவுக்கு நன்றி செலுத்துவதற்காக செய்யப்படுகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள்.
ஈத்-உல்-அஜா அல்லது தியாகப் பெருநாள் (Eid-ul-Adha or the Eid of Sacrifice) அதே நாளில் அனுசரிக்கப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கு முந்தய காலகட்டத்திலும் இந்த மிருக பலி பழக்கம் இருந்தது.
டாக்கா பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய வரலாறு மற்றும் கலாச்சாரத் துறையின் பேராசிரியர் டாக்டர் முகமது உமர் ஃபாரூக் பிபிசி பெங்காலியிடம் கூறுகையில், "அந்த நேரத்தில் கடவுள் மற்றும் தெய்வங்களின் பெயரில் தியாகங்கள் செய்யப்பட்டன. பின்னர், மெக்காவில் இஸ்லாம் நிறுவப்பட்ட பிறகு, இப்ராஹிம் நபியின் சார்பாக, தொடங்கப்பட்ட தியாக பாரம்பரியம் மீண்டும் தொடங்கப்பட்டது. “ என்றார்.
மொட்டையடிக்கும் சடங்கு
யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் மொட்டையடித்து கொள்வதும் ஹஜ்ஜின் ஒரு முக்கிய அங்கமாகும். மிருக பலி சடங்கு நடக்கும் அதே நாளில் மொட்டையடிக்கும் சடங்கும் நடக்கிறது.
டாக்டர் முகமது உமர் ஃபாரூக் பிபிசி பங்களாவிடம் கூறுகையில், "முடியை நீக்கி மொட்டையடிப்பது என்பது ஹஜ்ஜின் தொடக்கத்தில் இஹ்ராமிலிருந்து விடுபடுவதற்கான அடையாளச் செயல்களில் ஒன்றாகும்" என்றார்.
ஆனால் பெண் யாத்ரீகர்கள் தலையை முழுமையாக மொட்டையடிக்க வேண்டியதில்லை. அவர்கள் தலையின் முன் முடியில் சிறியப் பகுதியை வெட்டி எறிந்தால் போதும்.
இஸ்லாமிய சிந்தனையாளர்களின் கூற்றுப்படி, இப்ராஹிம் நபி காலத்திலிருந்தே மொட்டையடிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. ஹஜ் செய்வதால் ஒருவரில் ஏற்படும் மாற்றத்தை முடி வெட்டுவதன் மூலம் அடையாளப்படுத்துவதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்.
முடி வெட்டுவது ஹஜ்ஜின் இஹ்ராமை உடைக்கிறது என்று முஸ்லிம் அறிஞர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக, யாத்திரைக்கு பிறகு கை, கால் நகங்களை வெட்டுவதற்கும் முகச்சவரம் செய்வதற்கும் எந்த தடையும் இல்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












