தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்வு - நீங்கள் எவ்வளவு கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும்?

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வகை மின்சார பயன்பாட்டிற்கும் 4.83 சதவீதம் அதிகரிக்கிறது. இந்த மின் கட்டண உயர்வு ஜூலை ஒன்றாம் தேதி முதலே அமலுக்கு வருகிறது.
மின்சார கட்டண உயர்வு குறித்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பூஜ்யம் முதல் ஒவ்வொரு படிநிலை வரையிலும் மின்சார பயன்பாட்டிற்கான கட்டணம் எந்த அளவுக்கு உயர்த்தப்படுகிறது என்ற விவரம் தரப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் 20 காசு முதல் அதிகபட்சம் 55 காசுகள் வரை உயர்த்தப்படுகிறது.
- 0 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60-ஆக இருந்த கட்டணம், 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.80-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 401 யூனிட் முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15-ஆக இருந்த மின்சாரக் கட்டணம், 30 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 6.45-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை, ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15-ஆக இருந்த மின்சாரக் கட்டணம், 40 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.8.55-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 601 யூனிட் முதல் 800 யூனிட் வரை, ஒரு யூனிட்டுக்கு ரூ.9.20-ஆக இருந்த மின்சாரக் கட்டணம், 40 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.9.65-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 801 யூனிட் முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.10.20-ஆக இருந்த மின்சாரக் கட்டணம், 50 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.10.70-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 1000 யூனிட்டுகளுக்கு மேல், ஒரு யூனிட் ரூ.11.25-ஆக இருந்த மின்சாரக்கட்டணம், 55 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.11.80-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்சார பயன்பாடு குறித்த கணக்கீடு மேற்கொள்ளப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
வழிபாட்டுத் தலங்களுக்கு மின் கட்டண உயர்வு எவ்வளவு?
இதேபோல், வழிபாட்டுத் தலங்கள், தொழில் துறையினருக்கான மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டின் வழிபாட்டு தலங்களுக்கான 0 முதல் 120 யூனிட்டுகளுக்கு ரூ.5.90-ஆக இருந்த மின்கட்டணம், 30 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.6.20-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- காட்டேஜ் மற்றும் மைக்ரோ இண்டஸ்ட்ரீஸ்-க்கு , 0 முதல் 500 யூனிட்களுக்கு, ரூ.4.60-ஆக இருந்த மின்கட்டணம் 20 காசுகள் அதிகரித்து, ரூ.4.80-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தப்படும் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.65-ஆக இருந்த மின்கட்டணம் 30 காசுகள் அதிகரித்து, ரூ.6.95-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வின் தாக்கம்
வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டண உயர்வின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்தும் தமிழ்நாடு மின்சார வாரியம் மதிப்பீடு ஒன்றை அளித்துள்ளது. அதன்படி,
- 100 யூனிட் வரையே மின்சாரம் பயன்படுத்துவோருக்கு கட்டணம் கிடையாது அவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது. இந்த வகையில் சுமார் ஒரு கோடி மின் நுகர்வோர் இருக்கிறார்கள்.
- 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் சுமார் 63 லட்சம் பேர் கூடுதலாக மாதம் 5 ரூபாய் வீதம் மின்சார கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
- 300 யூனிட் வரை பயன்படுத்தும் சுமார் 35 லட்சம் நுகர்வோருக்கு மாதம் 15 ரூபாய் வீதம் மின்சார கட்டணம் உயரும்.
- 400 யூனிட் வரை பயன்படுத்தும் சுமார் 25 லட்சம் நுகர்வோருக்கு மா தம் 25 ரூபாய் வீதம் மின் கட்டணம் அதிகமாக இருக்கும்.
- 500 யூனிட் வரை பயன்படுத்தும் சுமார் 13 லட்சம் நுகர்வோருக்கு மாதத்திற்கு 40 ரூபாய் மின்சார கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

பட மூலாதாரம், TANGEDCO
'விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரிசு' - எதிர்க்கட்சிகள் கண்டனம்
தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகளுக்கான மக்களின் பரிசு என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை, சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள். உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்” என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டித்துள்ளார். மின்சாரத்தை தடையின்றி வழங்கும் அடிப்படை திறனின்றி மின் கட்டணத்தை மீண்டும் மீண்டும் உயர்த்துகிறது என்றும் திமுக அரசை சாடியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காரணமாகவே மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை அரசு நிறுத்தி வைத்திருந்தது என்று பாமக குற்றம் சாட்டியுள்ளது. அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூலை ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும் மின்கட்டண உயர்வு விக்கிரவாண்டி தேர்தல் முடிவடைந்த பிறகு ஜூலை 15-ஆம் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையம் அரசின் கண்ணசைவுக்கு செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டிய அவர், “கடந்த 2022-ஆம் ஆண்டில் சுமார் ரூ.31,500 கோடிக்கு உயர்த்தப்பட்டன. ஆனாலும், மின்சார வாரியத்தின் இழப்பு குறைவதற்கு பதிலாக அதிகரித்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையும் மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 2023 – 2024 ஒரு நிதி ஆண்டில் மட்டுமே, ரூ.65,000 கோடிக்கு, மின்சாரம் வாங்கியிருக்கிறது. நாடு முழுவதும், சூரிய ஒளி மின்சார உற்பத்தியைப் பெருக்கப் பல மாநிலங்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கையில், மாதம் சுமார் ரூ.5,400 கோடி நிதியை, மின்சாரம் வாங்கச் செலவு செய்திருக்கிறது திமுக” என்று விமர்சித்துள்ளார்.
மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கம்
மின் கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்ற நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கம் ஒன்றை வழங்கியுள்ளது.
எக்ஸ் பக்கத்தில் (டிவிட்டரில்), "மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டண திருத்த ஆணை எண் 6-ன் படி, 2024ம் ஆண்டுக்கான மின்சார கட்டண திருத்தம் அமலுக்கு வந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் "அதிகரித்து வரும் நிதி இழப்பை ஈடு செய்ய அப்போதைய (2020-21) மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதன் பின்னர், அதிகமான மின்கட்டண உயர்வினால் மின் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய சுமையினை கருத்தில் கொண்டு, இந்த அரசானது நுகர்வோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆண்டு தோறும் சிறிய அளவில் மின்கட்டண உயர்வை அமுல்படுத்தி வருகிறது," என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்.












