லெபனான் ராணுவத்தை விடவும் ஹெஸ்பொலாவை வலுவான சக்தியாக உருவாக்கிய 'ஹஸன் நஸ்ரல்லா' யார்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டேவிட் கிரிட்டன்
- பதவி, பிபிசி நியூஸ்
லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் நேற்று (செப்டம்பர் 27) நடத்தப்பட்ட தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
வரலாற்றில் லெபனான் இதுவரை எதிர்கொண்ட தாக்குதல்களில் இது மிகவும் சக்தி வாய்ந்தது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யார் இந்த ஷேக் ஹசன் நஸ்ரல்லா?
லெபனானின் ஷியா இஸ்லாமிய இயக்கமான ஹெஸ்பொலாவின் தலைவரான ஷேக் ஹசன் நஸ்ரல்லா, மத்திய கிழக்கில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவர். இஸ்ரேலால் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக நஸ்ரல்லா பல ஆண்டுகளாக பொது வெளியில் காணப்படவில்லை.

‘ஹெஸ்பொலாவை சக்தி வாய்ந்த இயக்கமாக மாற்றியவர்’

பட மூலாதாரம், Getty Images
நஸ்ரல்லா, இரானுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்ட ஒரு நபர். அதுமட்டுமல்லாது ஹெஸ்பொலாவை ஒரு அரசியல் மற்றும் ராணுவ சக்தியாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தவர், குழுவின் ஆதரவாளர்களால் மதிக்கப்படுபவர்.
ஹெஸ்பொலா இயக்கம் நஸ்ரல்லா தலைமையின் கீழ், பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் மற்றும் இராக், ஏமனில் உள்ள போராளிகளுக்குப் பயிற்சி அளித்தது. இஸ்ரேலுக்கு எதிராகப் பயன்படுத்த, இரானிடம் இருந்து ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளையும் பெற்றது.
லெபனானை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேலிய துருப்புகளை எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்ட ஹெஸ்பொலா இயக்கத்தை, லெபனான் ராணுவத்தை விட வலிமையான ஒரு படையாக மாற்றியவர் நஸ்ரல்லா. லெபனான் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் ஹெஸ்பொலா இயக்கம் சுகாதாரம், கல்வி மற்றும் சமூக சேவைகளை வழங்குவதிலும், அதன் ஆதரவாளரான இரானின் பிராந்திய மேலாதிக்கத்திற்கான நடவடிக்கைகளை ஆதரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
லெபனான் நாட்டில் 1960இல் பிறந்த நஸ்ரல்லா பெய்ரூட்டின் கிழக்கு போர்ஜ் ஹம்மூத் பகுதியில் வளர்ந்தார். அங்கு அவரது தந்தை அப்துல் கரீம் ஒரு சிறிய காய்கறி கடை நடத்தி வந்தார். குடும்பத்தின் ஒன்பது குழந்தைகளில் நஸ்ரல்லா மூத்தவர்.
லெபனானின் உள்நாட்டுப் போர் தொடங்கிய பிறகு, 1975 ஆம் ஆண்டில் ஷியா போராளிகளின் ‘அமல் இயக்கத்தில்’ இணைந்தார். இராக்கில் உள்ள புனித நகரமான நஜாஃப்பில் பயிற்சிப் பள்ளி ஒன்றில் இணைந்திருந்த சிறிய கால இடைவெளிக்குப் பிறகு நஸ்ரல்லா மீண்டும் ‘அமல் இயக்கத்தில்’ சேர்ந்தார்.
ஆனால் 1982இல், பாலத்தீனிய போராளிகளின் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்த சிறிது காலத்திலேயே, அவரும் மற்றவர்களும் அமல் குழுவிலிருந்து வெளியேறினர்.
பிறகு உருவான புதிய குழு ‘இஸ்லாமிய அமல்’, இது லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கை தளமாகக் கொண்டு இயங்கியது. இரானின் புரட்சிகர காவலர்களிடமிருந்து கணிசமான ராணுவ ஆதரவையும் இக்குழு பெற்றது. பிற்காலத்தில் ஹெஸ்பொலா என்ற அமைப்பு உருவாக முக்கிய காரணமாக இருந்த ஷியா போராளிகளின் குழு இதுதான்.
ஹெஸ்பொலா இயக்கம் 1985 ஆம் ஆண்டில், தனது இருப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அமெரிக்காவையும் சோவியத் யூனியனையும் இஸ்லாத்தின் பிரதான எதிரிகளாக அடையாளப்படுத்தி, முஸ்லீம் நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதாகவும் எனவே அந்நாட்டை அழிக்க வேண்டும் என்றும் பகிரங்க அறிவிப்பை வெளியிட்டது.
ஹெஸ்பொலா அமைப்பின் வளர்ச்சியில் பங்காற்றியதோடு, அந்த அமைப்பின் அதிகாரப் படிநிலையில் தொடர்ந்து முன்னேறினார் நஸ்ரல்லா. குழுவில் ஒரு போராளியாகப் பணியாற்றிய பிறகு, பால்பெக் நகரத்தில் அவர் ஹெஸ்பொலாவின் தலைவரானார். பின்னர் முழு பெக்கா பகுதிக்கும், அதைத் தொடர்ந்து பெய்ரூட்டிற்கும் அவர் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பட மூலாதாரம், Getty Images
‘முசாவியின் கொலைக்கு பதிலடி’
இஸ்ரேலிய ஹெலிகாப்டர் தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் அப்பாஸ் அல்-முசாவி படுகொலை செய்யப்பட்ட பின்னர், நஸ்ரல்லா 1992ஆம் ஆண்டு தனது 32வது வயதில் ஹெஸ்பொலாவின் புதிய தலைவரானார்.
முசாவியின் கொலைக்கு பதிலடி கொடுப்பது தான் அவரது முதல் கட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது. அவர் வடக்கு இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார், அதில் ஒரு சிறுமி கொல்லப்பட்டார்.
துருக்கியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் ஒரு இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி கார் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார் மற்றும் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் நடந்த ஒரு தற்கொலை குண்டு தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர்.
தனது மூத்த மகன் ஹாடி இஸ்ரேலிய துருப்புகளுடனான துப்பாக்கிச் சண்டையில் (2000ஆம் ஆண்டில்) கொல்லப்பட்ட போதும் கூட தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகளுடனான போரை நஸ்ரல்லா தொடர்ந்து முன்னின்று நடத்தினார்.
அங்கிருந்து இஸ்ரேலிய ராணுவம் பின்வாங்கியதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு எதிரான முதல் அரபு வெற்றியை ஹெஸ்பொலா அடைந்து விட்டதாக நஸ்ரல்லா அறிவித்தார்.
ஷெபா ஃபார்ம்ஸ் பகுதி உட்பட ‘எல்லா லெபனான் பிரதேசங்களும் மீட்டெடுக்கப்பட வேண்டும்’ என்று தான் கருதுவதாகக் கூறிய அவர், அதுவரை ஹெஸ்பொலா தனது ஆயுதங்களை கீழே வைக்காது என்றும் சபதம் செய்தார்.
பிராந்தியத்தில் 2006ஆம் ஆண்டு வரை ஓரளவு அமைதி நிலவியது. பின்னர் ஹெஸ்பொலா போராளிகள் எல்லை தாண்டிய தாக்குதலைத் தொடங்கினர். அதில் எட்டு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் கடத்தப்பட்டனர், இதற்கு பதிலடியாக ஒரு மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்தது.
இஸ்ரேலிய போர் விமானங்கள், லெபனானின் தெற்கிலும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள ஹெஸ்பொலாவின் தளங்களை குறிவைத்து குண்டுவீசின. அதே நேரத்தில் ஹெஸ்பொலா இஸ்ரேல் மீது சுமார் 4,000 ராக்கெட்டுகளை வீசியது. 34 நாட்கள் நடந்த இந்தச் சண்டையில் 1,125க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் இறந்தனர்.
அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். அதுமட்டுமல்லாது 119 இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் 45 இஸ்ரேலியப் பொதுமக்களும் உயிரிழந்தனர்.
நஸ்ரல்லாவின் வீடு மற்றும் அலுவலகங்கள் இஸ்ரேல் போர் விமானங்களால் குறிவைக்கப்பட்டன. ஆனால் அவர் எந்தக் காயமும் இன்றி உயிர் தப்பினார்.

பட மூலாதாரம், Getty Images
ஹெஸ்பொலாவின் அரசியல் பார்வை
நஸ்ரல்லா 2009இல், புதிய அரசியல் கொள்கைகளை வெளியிட்டார். அது ஹெஸ்பொலாவின் "அரசியல் பார்வையை" முன்னிலைப்படுத்த முயன்றது. 1985 ஆவணத்தில் இருந்த இஸ்லாமிய குடியரசு பற்றிய குறிப்பை அது கைவிட்டது, ஆனால் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிராக கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடித்தது மற்றும் ஐ.நா தீர்மானம் தடை செய்த போதிலும் தெற்கு லெபனானில் ஹெஸ்பொலா தனது ஆயுதங்களை கைவிடக் கூடாது என்று மீண்டும் வலியுறுத்தியது.
"மாற்றம் என்பது பொதுவானது. கடந்த 24 ஆண்டுகளில் உலகம் முழுவதும் மாறியுள்ளது. லெபனானும் தான், அதுபோல உலக நடைமுறைகளும் மாறியுள்ளன," என்று நஸ்ரல்லா கூறினார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஹெஸ்பொலா ஒரு "முழுமையான புதிய கட்டத்தை" தொடங்குவதாக நஸ்ரல்லா அறிவித்தார். சிரியாவில் ஒரு கிளர்ச்சியை அடக்குவதற்கு இரானால் ஆதரிக்கப்படும் சிரியாவின் அதிபர் பஷர் அல்-ஆசாத்திற்கு உதவ ஹெஸ்பொலா போராளிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
"இது எங்கள் போர், நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம்," என்று நஸ்ரல்லா கூறினார்.
சிரியாவின் போருக்குள் லெபனானையும் ஹெஸ்பொலா இழுத்துச் சென்றுவிட்டது என்று லெபனான் சன்னி பிரிவு தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். இதனால், லெபனான் உள்நாட்டு அரசியலில் பதற்றங்கள் அதிகரித்தன.
லெபனானில் 2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி பெரும் போராட்டங்களைத் தூண்டியது. ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியம் போன்ற அரசின் மீதான நீண்டகால குற்றச்சாட்டுகளால் அப்போராட்டங்கள் தீவிரம் பெற்றன.
சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்த இந்த போராட்டங்களுக்கு நஸ்ரல்லா ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்தார். ஆனால் எதிர்ப்பாளர்கள் அரசியல் அமைப்பை முழுமையாக மாற்றியமைக்கக் கோரத் தொடங்கியதால் அவரது அணுகுமுறை மாறியது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதியன்று, திடீர் தாக்குதலை தொடுத்ததால் காஸாவில் போர் வெடித்தது. இதன் எதிரொலியாக ஹெஸ்பொலாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சண்டைகள் அதிகரித்தன.
பாலத்தீனர்களுக்கு ஆதரவாக, இஸ்ரேலிய ராணுவ நிலைகளை நோக்கி ஹெஸ்பொலா அமைப்பு துப்பாக்கிச் சூடு நடத்தியது.

பட மூலாதாரம், Getty Images
நஸ்ரல்லா கடந்த வருடம் நவம்பரில் ஆற்றிய ஒரு உரையில், “ஹமாஸ் தாக்குதல் 100 சதவீதம் பாலத்தீனத்திற்கானது, ஆனால் எங்களது குழுவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான சண்டை என்பது மிகவும் முக்கியமானது மற்றும் குறிப்பிடத்தக்கது" என்று கூறினார்.
ஹெஸ்பொலா குழு 8,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வடக்கு இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகள் மீது ஏவியது. பீரங்கிகளைத் தாக்கும் சிறப்பு ஏவுகணைகளை இஸ்ரேலிய கவச வாகனங்கள் மீது வீசியது மற்றும் டிரோன்கள் மூலம் இஸ்ரேலிய ராணுவ இலக்குகளைத் தாக்கியது.
லெபனானில் உள்ள ஹெஸ்பொலா நிலைகளை இஸ்ரேல் ராணுவம் விமானத் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்தன.
நஸ்ரல்லா தனது சமீபத்திய உரையில், ஹெஸ்பொலா உறுப்பினர்கள் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர்கள் மற்றும் ரேடியோ வாக்கி-டாக்கிகளை வெடிக்கச் செய்ததாக இஸ்ரேலை குற்றம் சாட்டினார். இந்த சம்பவங்களில் 39 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
“இஸ்ரேல் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டது, இனி பொறுக்க முடியாது” என்று நஸ்ரல்லா கூறினார். ஹெஸ்பொலா குழு ‘ஒரு மோசமான எதிர்பாராத’ தாக்குதலை எதிர்கொண்டதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
சமீப காலமாக இஸ்ரேல், ஹெஸ்பொலா மீதான தாக்குதல்களை அதிகரித்துள்ளது. தொடர் தாக்குதல்களின் காரணமாக சுமார் 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












