இரானை தொடர்ந்து மேலும் ஒரு நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Reuters
இரானைத் தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா இலக்குகளைத் தாக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலை நோக்கிய ஹெஸ்பொலாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதன் ஒரு அறிக்கை கூறுகிறது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக நேரில் கண்ட சாட்கிளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெய்ரூட் மீது தாக்குதல்
பெய்ரூட்டில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 03:00 மணிக்கு சற்று முன்பு தொடர் வெடிப்புச் சத்தங்களால் மக்கள் விழித்துக் கொண்டனர். இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலா ஆயுதக்குழு வடக்கு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக அதன் இலக்குகளை இஸ்ரேலிய இராணுவம் தாக்கத் தொடங்கியது.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் புகை மூட்டங்கள் எழுவதை சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ காட்டுகிறது.
விமான நிலைய சாலையிலும் வடக்கு நோக்கிச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதையும், இரவு வரை நீண்ட வரிசைகள் உருவாகி இருப்பதையும் வீடியோக்கள் காட்டுகின்றன. பெய்ரூட்டில் அது இன்னும் நீண்ட இரவாக இருக்கும்.
விமான நிலையத்திற்குச் செல்லும் பிரதான சாலையில் தாக்கத்தை ஆன்லைனில் உள்ள பிற படங்கள் காட்டுகின்றன. சேதமடைந்த கார்கள் மற்றும் உடைந்த கண்ணாடிகள் தெருவில் உள்ளன, ஆனால் சேதத்தின் அளவு தெளிவாகத் தெரியவில்லை.
ஹெஸ்பொல்லா இரானுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் இஸ்ரேலிய பொதுமக்களை குறிவைப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் ஒரு அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தது.
"அந்த குழுவின் முடிவுக்கு" எதிராக செயல்படுவோம் என்றும், ஹெஸ்பொலா வடக்கு இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.
ஹெஸ்பொலாவின் நடவடிக்கைகள் லெபனானுக்கு மேலும் அழிவை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு வலுவாக பதிலடி கொடுத்து வருவதாகவும் இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

பட மூலாதாரம், Houssam Shbaro/Anadolu via Getty Images
இஸ்ரேலை தாக்கியதை உறுதிப்படுத்தியது ஹெஸ்பொலா
லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியதாக ஹெஸ்பொலா உறுதிப்படுத்தியுள்ளது.
இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அந்த குழு கூறியுள்ளது. இது "சட்டபூர்வமான தற்காப்பு நடவடிக்கை" என்றும் வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரு ஏவுகணை தளத்தில் "துல்லியமாக இலக்கைத் தாக்கும் ராக்கெட்டுகள் மற்றும் டிரோன்களின் கூட்டத்தை" ஏவியதாக ஹெஸ்பொலா கூறியது.
ஆனால் இஸ்ரேலிய இராணுவத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலிய பிரதேசத்தில் திறந்தவெளியில் அந்த ஏவுகணைகள் விழுந்தன.
ஷியா முஸ்லிம் அரசியல் மற்றும் இராணுவக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு இரானின் வலுவான ஆதரவு உள்ளது. இந்த குழு இஸ்ரேலின் இருப்பையே எதிர்க்கிறது.

பட மூலாதாரம், Anwar AMRO / AFP via Getty Images
லெபனான் பிரதமர் எச்சரிக்கை
தெற்கு லெபனானில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுவதற்கு எதிராக எச்சரிக்கும் வகையில் லெபனான் பிரதமர் நவாஃப் சலாம் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
"தெற்கு லெபனானில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுவது ஒரு பொறுப்பற்ற மற்றும் சந்தேகத்திற்கிடமான செயலாகும், இது லெபனானின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துகிறது. இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல்களைத் தொடர சாக்குப்போக்குகளை வழங்குகிறது," என்று அவர் கூறுகிறார்.
இஸ்ரேலும் லெபனானும் 2024 இல் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் பேரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டன, இது இஸ்ரேல் - ஹெஸ்பொலா இடையே ஓராண்டுக்கும் மேலாக நீடித்த சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனாலும் அப்போதிருந்தே இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை மீறியதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
13 மாத மோதலைத் தொடர்ந்து வந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், லெபனானில் ஹெஸ்பொலாவுடன் தொடர்புடைய இலக்குகள் என்று கூறி இஸ்ரேல் கிட்டத்தட்ட தினசரி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












