You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் திறப்பு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இன்று (ஏப்ரல் 23) திறந்து வைக்கப்பட்டது.
இந்த நினைவுத்தூபி பல்கலைக்கழக மாணவ சமூகத்தினால் காலையில் திறந்து வைக்கப்பட்டது.
நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டதை அடுத்து, இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இறுதிக் யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி இரவு உடைக்கப்பட்டது.
பல்கலைக்கழக நிர்வாகம் இரவோடு இரவாக இந்த தூபியை தகர்த்திருந்த நிலையில், அன்றிரவு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் பெரிய போராட்டம் தொடங்கியது.
இந்த நிலையில், அன்று முதல் தமிழர் பகுதிகளில் போராட்டங்கள் வலுப் பெற்றன.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டமைக்கு உள்நாட்டில் மாத்திரமன்றி, வெளிநாடுகளிலும் எதிர்ப்புக்கள் தொடங்கின.
இவ்வாறான போராட்டங்கள் வலுப் பெற்ற நிலையில், மீண்டும் தூபியை நிர்மாணிக்க பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், ஜனவரி 11ம் தேதி, புதிதாக நினைவுத்தூபியை நிர்மாணிக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன் பின்னர், தூபியை நிர்மாணிக்கும் பணிகள் நடந்து முடிந்தன. இந்நிலையில், இந்த தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: