இலங்கை தங்கம்: 15% இறக்குமதி வரி ரத்துக்கு பிறகும் குறையாத விலை - வியாபாரிகள் விளக்கம்

இலங்கையில் தங்க இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 15 சதவீத வரி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் நன்மைகளை நுகர்வோருக்கு தற்போதைய சூழ்நிலையில் வழங்க இயலவில்லை என்று அகில இலங்கை தங்க நகை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில், அகில இலங்கை தங்க நகை வர்த்தக சங்கத்தின் பொருளாளர் இரா.பாலசுப்ரமணியம் இதனைக் குறிப்பிட்டார்.
உலக சந்தையில் தங்கத்தின் விலையேற்றம் மற்றும் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பிலான முறையான திட்டம் இல்லாதது உள்ளிட்ட சில காரணங்களால் தங்கத்தின் விலையை தற்போதைக்கு குறைக்க முடியாதுள்ளதாக அவர் கூறினார்.
எனினும், எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் ஓரளவேனும் தங்கத்தின் விலையை குறைப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதேவேளை, தெற்காசியாவிலேயே தங்கத்தின் விலை குறைவாக காணப்படுகிற நாடு இலங்கை என அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும்பட்சத்தில், தெற்காசியாவில் தங்கத்தின் விலை மிகவும் குறைந்த நாடாக இலங்கை காணப்படும் என இரா.பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
இலங்கை தங்க நகை செய்பவர்களால் தயாரிக்கப்படும் தங்க ஆபரணங்களுக்கு சர்வதேச சந்தையில் பாரிய கேள்வி காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

பொருளியல் நிபுணரின் கருத்து
அரசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ள 15 சதவீத தங்க இறக்குமதி வரியினால், தங்கத்தின் விலையை உடனடியாக குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.
பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் எதிர்வரும் மாதங்களில் படிப்படியாக குறைய வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
இலங்கை அரசாங்கம் வர்த்தகர்களை நோக்காக கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்ட போதிலும், நுகர்வோர் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால், தங்க வர்த்தகர்களின் விற்பனை பாதிக்கப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இவ்வாறு தங்க வர்த்தகர்களுக்கு ஏற்படும் விற்பனை பாதிப்பானது, தற்காலிகமான ஒன்று என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.
தொடர்புடைய காணொளி
பிற செய்திகள்:
- இந்தியாவில் ரூ. 7,000க்கு விற்கப்படுகிறதா கழுதை பால்? உண்மை என்ன? #BBCFactcheck
- கங்கனா ரனாவத்தை பகத் சிங்குடன் ஒப்பிடும் நடிகர் விஷால் - 1920இல் பகத் சிங் என்ன செய்தார் தெரியுமா?
- தென்னிந்திய திரைப்பட நடிகர்களுக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பா? - விரிவான தகவல்கள்
- ரஃபால் போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு ஏன் அவசியம்? - 10 முக்கிய தகவல்கள்
- கொரோனா வைரஸ்: பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பாதுகாப்பாக பயணிப்பது எப்படி?
- 2019 - விளிம்பு நிலை மக்கள் தற்கொலைகளின் ஆண்டு: என்ன காரணம்?
- நீட் தேர்வை ரத்து செய்ய சட்டத்தின் வாயிலாக நியாயம் கிடைக்கவில்லை - முதல்வர் பழனிசாமி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













