You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மைத்திரிபால சிறிசேன: இலங்கையில் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை ஏற்படாது
இலங்கையில் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை இனிவரும் காலங்களில் ஏற்படாது என தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (28.5.19) ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற போதே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் 99 சதவீத பாதுகாப்பு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதை தான் உறுதிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு பிரிவினருக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடனேயே அவசரகால சட்டத்தை தான் அமுல்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், பாதுகாப்பு பிரிவின் சுற்றி வளைப்புக்கள் மற்றும் சோதனை நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு துறையினருக்கு வெளிநாட்டு புலனாய்வுத்துறையிடமிருந்து கிடைத்த உதவிகள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களில் இந்த அனைத்து நாடுகளும் வழங்கிய ஒத்துழைப்புக்களையும், பொருளாதார அபிவிருத்திக்கான உதவிகளையும் தாம் தொடர்ந்து எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி வெளிநாட்டு தூதர்களிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விரைவில் நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வெளிநாட்டு தூதர்களிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் மேலும் இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படாதிருப்பதை உறுதி செய்வதற்கு பாதுகாப்பு துறையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்