சாகோஸ் கால்பந்து அணி: சொந்த நாட்டில் இதுவரை கால் வைக்காத வீரர்கள்

சாகோஸ் தீவுகள் கால்பந்து அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாகோஸ் தீவுகள் கால்பந்து அணி

'இந்திய கால்பந்து அணி வீரர்கள் இதுவரை இந்தியாவுக்கு வந்ததே இல்லை' என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அது எப்படி, ஒரு நாட்டுக்காக விளையாடும் அணி, அந்த நாட்டுக்கே செல்லாமல் இருந்திருக்க முடியும். ஆனால், சாகோஸ் தீவுகள் கால்பந்து அணியில் நிலைமை அப்படித்தான் இருக்கிறது.

ஆட்டம் நடைபெறுகிறதோ இல்லையோ, செட்ரிக் ஜோசப், தன் கால்பந்து அணி ஜெர்சியைத்தான் எப்போதும் அணிகிறார். பயிற்சிக்கு செல்லாத நேரங்களிலும் கூட.

"எனக்கு இதுதான் பெருமை. என் நாட்டை நான் அடையாளப்படுத்துகிறேன்" என்று இதற்கு அவர் விளக்கம் தருகிறார்.

"அது பூமியின் சொர்க்கம்" என்று அவர் பெருமிதம் கொள்வார். ஆனால், இதுநாள்வரை சாகோஸ் தீவு மண்ணில் ஒரு முறை கூட அவர் கால் வைத்ததில்லை என்பதுதான் இதில் கவனம் பெறும் முக்கிய அம்சம்.

சாகோஸ் தீவுகள்

இந்திய பெருங்கடலின் ஒரு தீவு கூட்டம்தான் சாகோஸ் தீவுகள். 1960களின் பிற்பகுதியில் தொடங்கி 1970களின் முற்பகுதி வரை, இந்த பகுதியில் இருந்த அனைத்து மக்களையும், அமெரிக்காவுடன் இணைந்து இயக்கிய ஒரு விமானப்படை தளத்தின் பாதை அமைவுக்காக பிரிட்டிஷ் அரசு வெளியேற்றியது.

அந்த மக்களில் பலர் மொரீஷியஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அங்குதான் ஜோசப் பிறந்தார். ஆனால், தன் பாட்டி சொன்ன கதைகளை வைத்தே தன் பூர்விக நாடான சாகோஸ் தீவு பற்றி அவர் அறிந்து வைத்திருந்தார்.

கதைகளில் மட்டும் அறிந்த தங்கள் முன்னோர்களின் நாட்டை, பெயரளவிலாவது உயிர்ப்புடன் வைத்திருக்க சுமார் 6,000 மைல் தாண்டி உருவாக்கப்பட்ட ஒரு கால்பந்து அணியின் கதைதான் இப்போது நாம் பார்க்கப்போவது.

சாகோஸ் தீவுகள் அணி

நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட மக்களில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் பகுதியான இங்கிலாந்து நகரமான க்ரோலேவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதுதான் இந்த கால்பந்து அணி.

பின்னர், நட்பு ரீதியாக ரேஷியா, சீலேண்ட் ஆகிய நாடுகளுடன் விளையாடியது இந்த அணி. ஆனால், பின் ஏற்பட்ட பொருளாதார சூழ்நிலைகளால் இந்த விளையாட்டுகள் நிறுத்தப்பட்டன.

சாகோஸ் கால்பந்து அணி

பட மூலாதாரம், CHAGOS REFUGEES GROUP

இந்த நிலையில்தான், 2013ஆம் ஆண்டு, சாகோஸ் கால்பந்து குழுமத்தை உருவாக்கினார் சப்ரினா ஜீன்.

சப்ரினாவின் தந்தை தன் 17 வயதில் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு மொரிஷியஸுக்கு புலம்பெயர்ந்தவர். எப்போதும் தன் நாட்டுக்கு திரும்பிவிட வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தார். ஆனால், அதற்கு வாய்ப்பு கிடைக்கவேயில்லை.

இங்கு பிறந்து வளர்ந்த சப்ரினா 2006ஆம் ஆண்டு க்ரோலிக்கு இடம்பெயர்ந்தார். அங்குதான் சாகோஸ் அகதிகள் கூட்டமைப்பின் பிரிட்டிஷ் கிளைக்கு தலைவி என்ற பொறுப்பு இவருக்கு வந்து சேர்ந்தது.

சரி சாகோஸ் தீவுகளுக்கு நடந்தது என்ன?

அதிமுக பொதுக்குழு

1968ஆம் ஆண்டு மொரீஷியஸுக்கு சுதந்திரம் வழங்கியபோது சாகோஸ் தீவுகளின் மீதான இறையாண்மை உரிமையை தன்னகத்தே வைத்துக் கொண்டது பிரிட்டிஷ் அரசு. அந்த சமயத்தில் அங்கிருந்த மக்கள் தொகை (தோராயமாக 1,600 - 2,000) மொத்தமாக வெளியேற்றப்பட்டு செஷல்ஸ், மொரீஷஸ் அல்லது பிரிட்டிஷ் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு அவர்களுக்கு, வறுமையும் புறக்கணிப்பும்தான் நடந்தன.

சுதந்திரத்துக்காக சாகோஸ் தீவுகளை வேறு வழியின்றி நாங்கள் விட்டுக்கொடுக்க வேண்டிய அழுத்தம் இருந்தது என்று மொரீஷியஸ் தெரிவிக்கிறது. ஆனாலும், சாகோஸ் தீவுகளை இன்றளவும் தங்கள் பகுதி என்றே மொரீஷஸ் உரிமை கொண்டாடி வருகிறது.

பிரிட்டிஷ் இந்த தீவின் மீது உரிமை கொண்டாடுவது சட்டவிரோதமானது என்று ஐ.நா சபையின் உச்ச நீதிமன்றம், தீர்ப்பளித்த பின்பும் கூட மொரிஷஸிடம் பிரிட்டிஷ் திரும்பத்தரவில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக சாகோஸ் தீவுகள் எப்போது தேவைப்படவில்லையோ அப்போது திரும்பக் கொடுப்போம் என்கிறது பிரிட்டிஷ் அரசு.

சரி இப்போது கால்பந்து அணியின் கதைக்கு திரும்பி வருவோம். சாகோஸ் கால்பந்து குழுமத்தை உருவாக்கிய சப்ரினா க்ரோலே பகுதிக்கு வந்ததாக பார்த்தோம் அல்லவா! அவர், 2011ஆம் ஆண்டு சாகோஸ் தீவுகளுக்கு சென்றார். அதுவும் கூட பிரிட்டிஷ் அரசால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு சுற்றுலாவின் ஒரு பகுதியாக. ஆனால், அது ஒரு கசப்பான அனுபவம் என்கிறார் சப்ரினா.

முதல் முறையாக என் சொந்த நிலத்தில் கால் வைத்தேன். நீங்கள் அங்கு பிறக்காதபோதும், அந்த உணர்வு அலாதியானது. "உங்களுக்குள் இருக்கும் சோகத்தை நீங்கள் உணரும் தருணம் அது" என்கிறார் சப்ரினா.

என் தந்தை பிறந்த இடத்தை பார்க்கும்போது மனமுடைந்து போனேன். எல்லாம் சிதிலமடைந்துள்ளன. ஏதும் மிச்சமில்லை.

அதேவேளை நீங்கள் டியாகோ கார்சியா தீவுக்குள் வேறொன்றைப் பார்க்க முடியும். அங்கே, அமெரிக்க கடற்படை வீரர்களின் நாய்களுக்காக எழுப்பப்பட்ட கல்லறைகள் அவற்றின் பெயருடன் பொறிக்கப்பட்டுள்ளன.

இதற்குப்பிறகுதான் முடிவெடுத்தார் சப்ரினா. கால்பந்து மூலமாக தங்கள் சமூகத்தை அடையாளப்படுத்த வேண்டும் என்று. ஆனால், தொடக்கத்தில் போதுமான அளவுக்கு வீரர்கள் கிடைக்கவில்லை. மெல்ல மெல்ல இந்த செய்தி பரவியதன் பின்பே அணி உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக விளையாடத்தொடங்கியுள்ளனர்.

சட்ட சிக்கல்களும்

கதைகளில் மட்டும் தாங்கள் கேட்டறிந்த தமது தாயகத்தை, கால்பந்து வடிவில் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது இந்த அணி. ஆனால், சட்ட சிக்கல்களும் சமயத்தில் எழுகின்றன.

சாகோஸ் கால்பந்து அணி

பட மூலாதாரம், CHAGOS REFUGEES GROUP

சில வீரர்கள் அவ்வப்போது தூதரக நடவடிக்கை விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டு விடுவர். இவர்களுக்காக பணம் ஏற்பாடு செய்து ஒரு வக்கீலை வைத்து மீட்பது எங்கள் வழக்கமாக உள்ளது.

இது ஒரு ஓயாத போராட்டமாகவே உள்ளது என்கிறார் இந்த அணியின் பயிற்சியாளரான ஃபெர்ரர்.

2002 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி 1969 க்கும் 1982க்கும் இடையில் பிறந்த, சாகோஸ் மக்களுக்கு பிரிட்டிஷ் குடியுரிமை வழங்குவதற்கான வழிவகை செய்யபட்டது. மொரீஷஸில் இருந்த மோசமான வாழ்க்கையிலிருந்து மாற வேண்டி, ஏராளமானோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இங்கிலாந்து குடிமக்களாக மாறினர்.

டேமியன் ராம்சாமி 2006ஆம் ஆண்டு தன் 13 வயதில் மொரீஷஸுக்கு வந்தார். சாகோஸிலிருந்து அவரது தாத்தா வெளியேற்றப்பட்டா. சொல்லப்போனால், தன் பதின்பருவம் வரை தான் ஒரு சாகோஸ் குடிமகன் என்ற உண்மை கூட டேமியனுக்கு தெரியாது. சில ஆண்டுகாலம் லண்டனின் பல்வேறு அணிகளில் விளையாடிய டேமியன், பின்னர் சாகோஸ் தீவுகள் கால்பந்து குழுவில் சேர்ந்தார்.

என் மகனுக்கு சாகோஸ் பற்றி ஏதுமே தெரியாது

பிரிட்டிஷால் எப்படி வீழ்ந்தது என்றும் சாகோஸ் மக்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் அவர் தீவிரமாக பேசக்கூடியவர். அதுபோக, அந்த மக்களுக்கு பிரிட்டிஷ் அரசே பொறுப்பேற்று இழப்பீடும் விடுகளும் வழங்க வேண்டும் என்பதிலும் அவருக்கு நம்பிக்கை உண்டு.

டேமியனின் இந்த நம்பிக்கையை விட கவனிக்கத்தக்கது அவரது இந்த வார்த்தைகள்தான், "என் தாத்தாவுக்கு வயது இப்போது 82. அவர் இறக்கப்போகிறார். என் மகனுக்கு வயது 2. அவனது பதின்பருவத்தில் சாகோஸ் என்ற இடம் பற்றி அவர்களுக்கு ஏதுமே தெரியாது. அடுத்தடுத்த தலைமுறை வளர வளர, சாகோஸ் தீவுகள் மெல்ல மெல்ல மறைந்துவருகிறது"

"அது மறையாமல் இருக்க, இந்த உற்சாகத்தை தக்க வைக்க , இந்த கால்பந்து அணி மிக மிக முக்கியமானது"

ஏராளமான சாகோஸ் மக்களுக்கு தங்கள் தாயகத்துக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் உண்டு. கால்பந்து அணியின் வீரரான செட்ரிக் ஜோசப் கூட தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் தான் சென்று விடுவேன் என்றே சொல்கிறார்.

அப்படி ஒரு வாய்ப்பு வரும்வரை, மைதானத்தில் தன் தாயகத்தை அடையாளப்படுத்துவதை, தொடர்ந்து பெருமையுடன் செய்வார் ஜோசப்.

"இதோ இந்தக் கையுறைகளில் எங்கள் கொடி பொறிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் அணிந்து விளையாடும்போது நான் பெருமிதத்தை உணர்கிறேன்" என்கிறார் ஜோசப்.

இப்போது யோசித்துப் பாருங்கள். பயிற்சி இல்லாத நாட்களிலும் கூட ஏன் இவர் கால்பந்து ஜெர்சியை அணிந்திருக்கிறார் என்று.

காணொளிக் குறிப்பு, "தோனி அண்ணனை உலகளவு பிடிக்கும்" - ஒரு தோனி ரசிகரின் கதை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: