சானியா மிர்சா: இந்திய டென்னிஸ் துறையில் இருந்து 2022க்கு பிறகு விலகுகிறேன் - திடீர் முடிவு ஏன்?

இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான முன்னாள் விம்பிள்டன் இரட்டையர் சாம்பியனான சானியா மிர்சா 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு டென்னிஸில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபனில் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் தோல்வியடைந்த பிறகு மிர்சாவின் கருத்துக்கள் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"இது எனது கடைசி சீசன் என்று நான் முடிவு செய்துள்ளேன். வாரந்தோறும் அந்த முடிவை நோக்கிச் செல்கிறேன். இந்த சீசனில் கூட நீடிக்க முடியுமா என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் இதை நான் விரும்புகிறேன்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடைசியாக செப்டம்பரில் ஆஸ்ட்ராவா ஓபனில் சீனாவின் ஜாங் ஷுவாயுடன் இணைந்து மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்றார்.காயங்கள் மற்றும் ஒரு இளம் குடும்பம் தனது தொழில்முறை வாழ்க்கைக்கு திரையாக மாறி வருகிறது என்று அவர் ஒப்புக்கொள்கிறார்."எனது காயம் குணமடைய அதிக நேரம் எடுத்துக்கொள்வதாக உணர்கிறேன், எனது மூன்று வயது மகனுடன் பயணம் செய்து விளையாட வருவதன் மூலம் அவனையும் சேர்த்தே நான் ஆபத்தில் ஆழ்த்துகிறேன். இதை நான் கவனத்தில் கொள்ள வேண்டும். என் உடல் சோர்வடைகிறது என்று நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.

35 வயதான மிர்சா, 2005ல் WTA ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆனார்.

ஆனால் காயம் காரணமாக விரைவில் இரட்டையர் ஆட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தும் கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டார். 2015இல் அவர் சுவிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸுடன் விம்பிள்டனில் வென்றார், பின்னர் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் ஆட்டங்களில் வென்றார்.

2016 ரியோ ஒலிம்பிக்கில், அவரும் ரோஹன் போபண்ணாவும் வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் ராஜீவ் ராம் ஆகியோருக்கு எதிராக அரையிறுதியில் விளையாடியபோது, அவர் ஒலிம்பிக் பதக்கத்தைப் பெறுவதற்கு வெகு அருகே சென்று இறுதியில் தோல்வியடைந்தார்.

2009இல் 'ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர்' பட்டம் மற்றும் 'பிரெஞ்ச் ஓபன் 2012 கலப்பு இரட்டையர்' என மகேஷ் பூபதியுடன் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளார் சானியா.

கோடை விடுமுறையில் சானியா மிர்சா பதின்ம வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கினார். ஆனால் போட்டிகளில் வெற்றி என்பது அவர் மகளிர் போட்டிகளில் பங்கு பெறத் தொடங்கிய பிறகே சாத்தியமானது - 2002இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 15 வயதில் தனது முதல் பட்டத்தை அவர் வென்றார்.

2003இல் மகளிர் டென்னிஸ் சுற்றுப்பயணத்தில் நுழைந்த அவர், பின்னர் உலகின் ஒற்றையர் தரவரிசையில் 27ஆவது இடத்தை அடைந்தார், இந்திய வீராங்கனை ஒருவர் இந்த தரவரிசையில் இருப்பது இதுவே அதிகபட்ச நிலையாக இருக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்குடனான திருமணம் உட்பட டென்னிஸுக்கு வெளியே தனது வாழ்க்கைக்காக மிர்சா அதிகமான கவனத்தை பெற்றார். இந்த தம்பதிக்கு மூன்று வயதில் மகன் உள்ளார்.

2019இல், இவர் இரண்டு வருட மகப்பேறு இடைவேளைக்குப் பிறகு டென்னிஸ் விளையாடத் திரும்பினார். அவரது பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் கிட்டத்தட்ட 25 மில்லியன் பின்தொடருபவர்களுடன், மிர்சா இந்தியாவின் சிறந்த விளையாட்டுப் பெண்களில் ஒருவராக தமது பெயரை தக்க வைத்து வருகிறார்.

கிரிக்கெட் ஆர்வமுள்ள நாட்டில் இளம் பெண்களை டென்னிஸ் விளையாட ஊக்குவித்த பெருமைக்குரியவர் சானியா. அவர் அணிய தேர்வு செய்யும் ஆடைகள் முதல் தமது துணையைத் தேர்வு செய்வது வரை பல விவகாரங்களில் அவரை சிலர் சமூக ஊடகங்கள் வாயிலாக ட்ரோல் செய்வதுண்டு. ஆனாலும், அவர்களுக்கு தமது கடுமையான பதில்கள் மூலம் சானியா எதிர்வினையாற்றும்போது அவரது துணிச்சலான செயல்பாடு தலைப்புச் செய்திகளாயின.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: