Gabriela Andersen Schiess: ஒலிம்பிக் மாரத்தானில் 37ஆவது இடம் பிடித்தவருக்கு ஏன் அப்படி ஒரு ராஜ மரியாதை?

கேப்ரியலா ஆண்டெர்சன் ஸ்கீஸ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கெளதமன் முராரி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

42.2 கிலோமீட்டர் தூரம். சுமார் இரண்டு மணி நேரம் ஓடுவதால் உடலில் ஏற்படும் உஷ்ணம், நீரிழப்பு, கை கால் தசைகள் இறுக்கம், கொளுத்தும் வெப்பம் என பல பிரச்சனைகளை மாரத்தான் வீரர்கள் சந்திக்க வேண்டி இருக்கும்.

1984ஆம் ஆண்டு, லாஸ் ஏஞ்சலஸ்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்த பிரச்சனைகளை சந்தித்து 37ஆவது இடம் பிடித்த ஒரு பெண்மணியை, ஒரு கம்பீரமான ராஜ மரியாதை கொடுக்கப்பட்டதைக் குறித்து தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

அச்சாதனைப் பெண்மணியின் பெயர் கேப்ரியலா ஆண்டெர்சன் ஸ்கீஸ் (Gabriela Andersen Schiess). இவர் சுவிட்சர்லந்து நாட்டைச் சேர்ந்தவர்.

பொதுவாக ஒலிம்பிக் மாரத்தானில் பெரும்பாலான தூரத்தை சாலைகளில் கடந்தாலும், கடைசி 400 மீட்டர் தூரத்தை, ஒலிம்பிக்கின் மற்ற தடகள போட்டிகள் நடக்கும் தடகள ஓடுதளத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் தான் ஓடி எல்லைக் கோட்டைத் தொட வேண்டி இருக்கும்.

தடகள அரங்கில் நுழையும் வீரர்களை, பார்வையாளர்கள் ஆராவாரத்தோடு வரவேற்பர். மற்றவர்களோடு போட்டியிட்டு மாரத்தான் எல்லைக் கோட்டைக் கடந்து பதக்கம் வெல்லும் வீரர்கள் வழக்கம் போல கெளரவிக்கப்படுவார்கள்.

தன்னோடும், தன் முந்தைய ஆகச்சிறந்த சாதனைக நேரத்தோடும் போட்டி போடும் வீரர்கள், மாரத்தான் எல்லைக் கோட்டைக் கடக்கும் போது நிச்சயம் தங்களை தாங்களே பாராட்டிக் கொள்வார்கள்.

இப்படி மாரத்தானில் பதக்கத்துக்காகவோ அல்லது தன்னை நிரூபித்துக் கொள்வதற்கோ பெண்களுக்கு 1984 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் தான் முதல்முறையாக வாய்ப்பு கிடைத்தது என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கேப்ரியலா ஆண்டெர்சன் ஸ்கீஸ்

பட மூலாதாரம், Getty Images

அதற்கு முந்தைய ஒலிம்பிக் போட்டிகள் வரை "பெண்களால் அவ்வளவு தூரத்தை எல்லாம் ஓடிக் கடக்க முடியுமா என்ன?" "மாரத்தான் ஓடும் அளவுக்கு பெண்களுக்கு உடல் வலிமையோ, மனவலிமையோ போதாது" என பலரும் ஆரூடம் கூறி வந்தனர்.

பெண்களுக்காக சிந்திக்கிறேன் என்கிற பெயரில், பெண்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்பதை கவனிக்காமல் இருந்தது ஒரு பெரிய கூட்டம்.

வாய்ப்புக்காக காத்திருந்த பெண்களுக்கு 1984 ஒலிம்பிக்ஸ் ஓர் அற்புத தொடக்கமாக அமைந்தது.

அதோ அமெரிக்காவின் ஜோன் பெனாய்ட் ஒலிம்பிக் பெண்கள் மாரத்தானில் 2 மணி 24 நிமிடம் 52 நொடிகளில் முதலிடத்தைப் பிடித்துவிட்டார். அடுத்தடுத்து ஒவ்வொருவராக எல்லைக் கோட்டைக் கடந்தனர்.

கேப்ரியலா ஆண்டெர்சன் ஸ்கீஸ் (Gabriela Andersen Schiess) ஒலிம்பிக் தடகள மைதானத்தில் நுழைந்தார். ஆனால் அவர் ஓடிவருவதைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது.

நிலை குலைந்து விழுவது போல் தள்ளாடிக் கொண்டு வருகிறார். ஓட்டம் நடையாக மாறியது. பார்வையாளர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களுக்கு என்ன நடக்கிறது என சில நொடிகளில் உணர்ந்து கொண்டனர்.

கேப்ரியலா ஆண்டெர்சன் ஸ்கீஸ்

பட மூலாதாரம், Getty Images

ஆம், அந்த 39 வயது பெண்மணியால் ஓட முடியவில்லை. அவர் உடலில் நீர் அளவு குறைந்து இருக்கலாம், உடலின் தசைகள் இறுகி இருக்கலாம் என உணர்ந்து கொள்கிறார்கள்.

அவரைத் தாங்கிப் பிடிக்க ஒரு ஒலிம்பிக் அதிகாரி ஓடி வருகிறார், அவர் தன்னைத் தொடாத படிக்கு விலகுகிறார் கேப்ரியலா.

ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் ஒரு போட்டியாளர் யாருடைய துணையுமின்றி பந்தய தூரத்தைக் கடந்தால் தான், அவருடைய நேரம் கணக்கில் வரும், இல்லை எனில், அவர் போட்டியை நிறைவு செய்யவில்லை என குறிப்பிடப்படுவார்.

கேப்ரியலா அதற்கு எல்லாம் இடம் கொடுக்கவில்லை. கால்கள் பின்னிக் கொள்கின்றன. அவரது உடல் இடது புறமாக சாய்கிறது, ஓடுதளம் வளைந்து இருக்கும் இடத்தில் கூட அவரால் சரியாக வளைந்து நடக்க முடியாமல், நேராக நடக்கிறார்.

அவரது விடாமுயற்சியைக் கண்டு பார்வையாளர்களும், அதிகாரிகளும், உதவியாளர்களும் எழுந்து நின்று கரஒலி எழுப்பி ஊக்கப்படுத்தத் தொடங்கினர்.

ஒட்டுமொத்த உடலும் தள்ளாடுகிறது, சர்வ சத்தியமாக அவரிடம் மன வலைமை தவிர வேறொன்ரும் இல்லை. தன்னம்பிக்கை, அவரது சரீரத்தை எல்லைக் கோட்டை நோக்கி உந்திக் கொண்டிருந்ததை பார்த்து அனைவரும் வியந்தனர்.

எல்லைக் கோட்டை நெருங்க நெருங்க கேப்ரியலாவின் வேகம் குறைந்து கொண்டே வந்தது. எல்லைக் கோட்டை கடந்த உடனேயே அவருக்கு சிகிச்சையளிக்க மருத்துவக் குழுவினர் தயாராக இருந்தனர். சுமார் 5.44 நிமிட போராட்டத்துக்குப் பிறகு, எல்லைக் கோட்டை தன்னிசையாக நிறைவு செய்தார் கேப்ரியலா. 2 மணி 48 நிமிடம் 44 நொடியில் தன் மொத்த பந்தய தூரத்தைக் கடந்தார் என்கிறது ஒலிம்பிக்ஸ்.காம் வலைதளம்.

44 பேர் கலந்து கொண்ட போட்டியில் அவருக்கு 37ஆவது இடம் தான் கிடைத்தது. ஆனால் மனித மனத்தின் வலிமைக்கான போட்டியிலும், மிளிரும் தன்னம்பிக்கைப் போட்டியிலும் அவர் வைரப் பதக்கத்தை வென்றார் எனலாம்.

பெண்களால் 42.2 கிலோமீட்டர் எல்லாம் ஓட முடியுமா? அவர்களது உடல் ஒத்துழைக்குமா, அத்தனை மன வலிமை எல்லாம் உண்டா? என பெண்களின் திறன் மீது வைக்கப்பட்ட சந்தேகக் கேள்விகளுக்கு எல்லாம் அவரது 5.44 நிமிட நடை ஒற்றை பதிலாக உரக்க ஒலித்தது.

கேப்ரியலா ஆண்டெர்சன் ஸ்கீஸ்

பட மூலாதாரம், Getty Images

சரி, அவருக்கு ஏன் இப்படி ஆனது? மாரத்தான் போட்டிகளில், வீரர்கள் ஓடும் போதே நீர் குடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். கேப்ரியலாவோ அப்போட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கடைசி நீர்பந்தலில் தண்ணீர் குடிக்கவில்லை. போட்டி நாள் வரை கேப்ரியலாவுக்கு அமெரிக்காவின் தட்ப வெப்ப நிலை முழுமையாக ஒத்துவரவில்லை. அது தான் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம்.

கேப்ரியலாவின் உடல், அவர் மீது தொடுத்த தாக்குதலை, தன் மனம் மற்றும் எண்ணத்தால் ஜெயித்தார். உடல், மனம், எண்ணம் ஆகியவைகளின் சரிவிகித கலப்புகள் தானே சாதனைகளாகின்றன. அதை கேப்ரியலா செய்தார்.

கேப்ரியலாவை மருத்துவ வாகனத்தில் படுக்க வைத்து, உடல் முழுக்க தண்ணீர் ஊற்றிய படி, அவரை தடகள ஓடுதளத்திலிருந்து அழைத்துச் சென்ற போது மொத்த கூட்டமும், பதக்கம் வென்ற வீராங்கணைக்கு நிகராக ராஜ மரியாதை கொடுத்து, சகல கெளரவமாக வழியனுப்பி வைத்தனர்.

1984 லாஸ் ஏஞ்சலஸ் பெண்கள் ஒலிம்பிக் மாரத்தானில் தங்கம் வென்ற ஜோன் பெனாய்ட் கூட மாரத்தான் ரசிகர்களால் நாளடைவில் மறக்கப்படலாம். ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் ஒரு புதிய தங்கப் பதக்க வீராங்கனை உருவாகிவிடுகிறார்.

ஆனால் கேப்ரியலாவை அவர்களால் மறக்கவே முடியாது. காரணம் அவரது 5.44 நிமிட நிலை குலைந்த தடுமாற்றத்துடனான நடை... அத்துணை கனமானது.

ஒலிம்பிக் அட்டவணை:

Please wait..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :