You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஈஷா சிங்: தடைகளை சுட்டுத்தள்ளும் இந்திய இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை
இந்தியாவின் இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான ஈஷா சிங்கை பொருத்தவரையில், விளையாட்டு என்பது அவரின் குடும்பத்தின் பாரம்பரியமாக உள்ளது. அவரின் தந்தை மோட்டார் விளையாட்டுகளில் ராலி என்று குறிப்பிடப்படும் ஆட்டங்களில் தேசிய வீரராக இருந்துள்ளார்.
இளம் வயது முதலே துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் கொண்டிருந்த ஈஷா, தனது ஒன்பதாவது வயதிலேயே பயிற்சியை தொடங்கிவிட்டார். துப்பாக்கி சுடும் சத்தம், தனது காதுகளுக்கு இசையைப் போல கேட்பதாக கூறும் இந்த வீராங்கனை, இந்த விளையாட்டிற்கு அடிப்படையில் ஒரு துணிச்சல் தேவை என்பதே தன்னை இதன் பக்கம் ஈர்த்தது என்கிறார்.
2014ஆம் ஆண்டில் கையில் துப்பாக்கி ஏந்திய ஈஷா, 2018ஆம் ஆண்டு தேசிய துப்பாக்கி சுடுதல் விளையாட்டின் சாம்பியன் ஆகினார். வெறும் 13 வயதில், சர்வதேச பதக்கங்களை வென்ற வீரர்களான மனு பாக்கேர், ஹீனா சித்து ஆகியோரை வீழ்த்திய ஈஷா, யூத், ஜூனியர் மற்றும் சீனியர் என மூன்று பிரிவுகளிலும் மூன்று தங்கப்பதக்கங்களை தட்டிச்சென்றார்.
தனது திறனை நிரூபித்த ஈஷா, சர்வதேச போட்டிகளில் விளையாட தொடங்கினார். ஜூனியர் உலகக்கோப்பையில் வெள்ளிப்பதக்கமும், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கத்தை தட்டிச்சென்றார்.
விளையாட்டின் மீது உள்ள ஆர்வம் மட்டுமே ஒருவருக்கு வெற்றியைத் தருவதில்லை. தனக்கு வருகின்ற தடைகளையும் தாண்டத் தெரிந்தவரே வெல்கிறார். ஈஷா சிங்கிற்கு பயிற்சி எடுக்க வசதியாக ஒரு துப்பாக்கி சுடுதல் தளம் அருகில் இல்லை
.
போட்டிகள் நெருங்கும் சமயங்களில் வீட்டிலிருந்து ஒரு மணிநேரம் பயணித்து கச்சிபோளி செல்லும் இவர், தானியங்கி வசதி இல்லாத ஒரு தளத்திலேயே பயிற்சிகள் மேற்கொண்டார்.
தனது விளையாட்டு, அதற்கான பயிற்சி மற்றும் கல்வி ஆகிய அனைத்தையும் சமாளிக்க மிகவும் போராடினார் ஈஷா.
வெறும் ஒன்பது வயதாகும் ஒரு சிறுமிக்கு, பொதுவாக கேளிக்கைகள் மீது வரும் ஆர்வம், இயல்பாக ஈஷாவிற்கும் இருந்தது. அவர் வயதில் உள்ள குழந்தைகளுக்கு பிடித்த இதர விளையாட்டுகளை பார்த்து அவரும் ஈர்க்கப்பட்டார். அதனால் அவற்றிலிருந்து விலகி, துப்பாக்கி சுடுதலை கவனத்துடன் கற்பது அவருக்கு அந்த வயதில் அவ்வளவு சுலபமாக இல்லை.
இருப்பினும், தனக்கென ஒரு இலக்கை வைத்துக்கொண்ட ஈஷா, துப்பாக்கி சுடுதல் விளையாட்டின் மீது இருந்த ஆர்வம் மற்றும் குறிக்கோள்களை மட்டுமே மனதில் கொண்டு அந்த தடைகளை கடந்தார்.
சுட்டுத்தள்ளிய சவால்கள்
ஈஷாவின் விளையாட்டுப் பயணம், சில தியாகங்களுடனேயே தொடர்ந்தது. மகளின் துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் கவனம் செலுத்துவதற்காக தனது ராலி விளையாட்டுகளிலிருந்து விலகினார் அவரின் தந்தை.
ஈஷாவின் பெற்றோர் இருவருமே, அவர் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக மிகவும் கவனத்துடன் செயல்பட்டனர். மிக இளம் வயது வீராங்கனை என்பதால், ஈஷாவிற்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்க வேண்டிய தேவை இருந்தது. அவருக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து, பயிற்சியில் ஈடுபடச்செய்ய அவரின் தந்தை உடன் இருந்தார்.
அவர்களின் முயற்சியும், தியாகமும் வீண் போகவில்லை. இந்த விளையாட்டில் பயிற்சி எடுக்க ஆரம்பித்த வெறும் நான்கே ஆண்டுகளில், ஈஷா தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றார். இன்னும் அதிகம் முயன்று, முனைப்போடு பயிற்சி எடுத்தால், சர்வதேச விளையாட்டுகளும், விருதுகளும் வெகு தொலைவில் இல்லை என்பதை இவை ஈஷாவிற்கு விளக்கின. அதற்கான அடித்தளமாக இந்த சாம்பியன்ஷிப் விருதுகள் அமைந்தன.
வெற்றிப்படிகள்
அவரின் தன்னம்பிக்கை வீண் போகவில்லை. தேசிய சாம்பியன்ஷிப் வென்ற அடுத்த ஆண்டே, ஜெர்மனியில் நடந்த ஜூனியர் உலக கோப்பையில் வெள்ளிப்பதக்கம் வென்று திரும்பினார் ஈஷா சிங்.
அதே ஆண்டு, ரியோ டி ஜெனிரோவில் நடந்த சீனியர் உலகக்கோப்பையில் அவருக்கு பதக்கங்கள் கிடைக்காதபோதிலும், இத்தகைய இளம் வயதில், சீனியர்களுடன் இணைந்து, இந்த துறைக்கான மிகப்பெரிய போட்டியில் கலந்துகொண்டது தனக்கு பெரிய தன்னம்பிக்கை அளித்ததாக அவர் கூறுகிறார்.
அடுத்த ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் ஈஷா.
2024ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே தனது அடுத்த இலக்கு என்கிறார் ஈஷா. கோவிட்-19 காரணமாக தடைபட்ட பயிற்சிக் காலங்களை நினைத்து வருந்தினாலும், 2022ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுகள் போட்டியில், தன்னால் இயன்ற அளவு சிறப்பாக விளையாட உள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சிறந்து விளையாடி வரும் இந்த இளம் வீராங்கனைக்கு 2020 ஆம் ஆண்டில், பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை மத்திய அரசு வழங்கியது.
இந்த விருது பெற்றது மிகவும் பெருமைக்குரிய தருணமாக இருந்தாலும், அனைத்து விளையாட்டுகளிலும், வீராங்கனைகள் விளையாடுவதை உறுதி செய்வதோடு, நன்கு விளையாடும் வீராங்கனைகளை கண்டறிந்து அவர்களுக்கான ஊக்கத்தை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ஈஷா.
(பிபிசி அனுப்பிய கேள்விகளுக்கு, ஈஷா சிங் அளித்த பதில்களின் அடிப்படையில் இந்த கட்டுரை தயாரிக்கப்பட்டுள்ளது.)
பிற செய்திகள்:
- விவசாயிகள் போராட்டம்: டெல்லி எல்லையில் தடுக்கப்பட்ட தமிழக எம்.பி.க்கள் - காவல்துறையுடன் வாக்குவாதம்
- விவசாயிகள் போராட்டம்: இந்தியாவிற்கு ஆதரவாக விராட், சச்சின் ட்விட்டரில் பதிவு – டிரண்டாகும் ஹாஷ்டேக்
- தேர்தல் 2021: `கருப்பு' எம்.ஜி.ஆர் முதல் `பெரியப்பா' எம்.ஜி.ஆர் வரை - காரணம் சொல்லும் திமுக; கடுகடுக்கும் அதிமுக
- நாளை இலங்கை சுதந்திர தினம் - தமிழில் தேசிய கீதத்துக்கு அனுமதி மறுப்பு ஏன்?
- தேர்தல் 2021: கூட்டணியில் பாமக, தேமுதிக - அதிமுக மிரட்டுகிறதா, மிரள்கிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: