You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விராட் கோலி: இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியில் நடத்தை விதிகளை மீறியதால் அபராதம்
சனிக்கிழமையன்று சவுத்ஹாம்டனில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் வீரர்களுக்கான நடத்தை விதிகளை மீறியதாக விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எல்பிடபல்யூ வழங்குவது தொடர்பாக நடுவராக இருந்த அலீம் தர்ரை நோக்கி ஆக்ரோஷமாக வந்த தவறுக்காக விராட் கோலிக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் அவருக்கு கிடைக்கும் தொகையில் 25சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தவறை கோலி ஒப்புக் கொண்டதால், மேற்கொண்டு எந்தவித அதிகாரபூர்வ விசராணையும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி வீரர்களுக்கான நான்கு நிலை தவறுகளில் முதல்நிலை தவறை மேற்கொண்டுள்ளார்.
நிலை ஒன்றில் உள்ள விதிகளை மீறினால் போட்டிக்காக வழங்கப்படும் தொகையில் 0-50 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும்.
இதன்மூலம் கிரிக்கெட் வீரர்களுக்கான நடத்தை விதிமுறைகளை மீறுவதால் வழங்கப்பட்டும் ’டிமெரிட் புள்ளி’ ஒன்றையும் பெற்றார் விராட் கோலி. முன்னதாக 2018ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ப்ரிடோரியாவில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக விளையாடிய போது அவருக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள்ளாக நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றால் அந்த வீரருக்கு போட்டியில் விளையாடுவதற்கான தடை விதிக்கப்படும்.
முன்னதாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 11 ரன்களில் வெற்றிப் பெற்றது.
உலகக் கோப்பையில் வலுவான ஒரு அணியாக கருதப்படும் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக வெற்றிக் கொள்ளும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இந்திய அணி பெரும் போராட்டத்திற்கு பின்பே வெற்றி பெற்றது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்