You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிரிக்கெட்: இந்தியாவின் அபார வெற்றிக்கு 5 முக்கிய காரணங்கள்
இலங்கையில் உள்ள தம்புள்ளை மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அண்மையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3-0 என்று வென்ற இந்தியா, முதல் ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், அது குறித்த 5 முக்கிய காரணங்களை இங்கே காணலாம்.
தொடரும் டெஸ்ட் தொடரின் பாதிப்பு
3 டெஸ்ட் போட்டிகளை சிறப்பாக வென்றிருந்த இந்திய அணி, முதல் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அபார வெற்றி பெற்றுள்ளது.
முதல்முறையாக இலங்கை மண்ணில் 3-0 என்று டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணிக்கு, டெஸ்ட் தொடரின் மகத்தான வெற்றி ஒருநாள் போட்டி தொடரை நம்பிக்கையுடன் தொடங்க உதவியது.
டெஸ்ட் தொடரை மோசமாக தோற்றதால் அது இலங்கை அணியின் இன்றைய ஆட்டத்தில் பிரதிபலித்தது.
தொடக்கத்தை பயன்படுத்த தவறிய இலங்கை
போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் மட்டைவீச்சாளர்கள் விக்கெட் இழப்பின்றி 14 ஓவர்களில் 74 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தனர்.
இலங்கை அணியின் தொடக்கவீரர்கள் டிக்வெல்லா மற்றும் குணதிலக ஆகியோர் நன்கு அடித்தாடி அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைத்து தந்த போதிலும், பின்னர் களமிறங்கிய வீரர்களில் மெண்டிஸ் மற்றும் மேத்யூஸ் ஆகியோரை தவிர யாரும் சிறப்பாக விளையாடவில்லை.
மேலும், 43.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை 216 ரன்களை மட்டுமே எடுத்தது.
தவான் மற்றும் கோலியின் அதிரடி
217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி, தொடக்க வீரர் ரோகித்சர்மாவை சொற்ப ரன்களில் இழந்தாலும், தவான் மற்றும் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் மாபெரும் வெற்றி பெற்றது.
ஷிகர் தவான் மிகவும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார்.
ஷிகர் தவான் 3 சிக்ஸர்கள், 20 பவுண்டரிகள் விளாசி 90 பந்துகளில் 132 ரன்களை குவித்தார். அதேபோல விராட் கோலி 70 பந்துகளில் 82 ரன்களை விளாசினார்.
இவ்விருவரின் அதிரடி ஆட்டத்தால், 28.5 ஓவர்களில் இந்தியா வெற்றி இலக்கை எட்டியது.
சிறப்பாக பந்துவீசிய இந்திய பந்துவீச்சாளர்கள்
முதல் ஒருநாள் போட்டியை இந்தியா எளிதாக வெல்ல முடிந்ததற்கு முக்கிய காரணம் இந்திய பந்துவீச்சாளர்கள்தான்.
இந்திய அணியின் சார்பில் அக்சர் பட்டேல் 10 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், கேதர் ஜாதவ், சாஹல் மற்றும் பூம்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அக்சர் பட்டேல் மற்றும் பூம்ரா ஆகிய இரு பந்துவீச்சாளர்களும் சிக்கனமாக பந்துவீசியதால் இலங்கை அணியின் மட்டைவீச்சாளர்கள் விரைவாக ரன் குவிக்க பெரிதும் தடுமாறினர்.
சோபிக்க தவறிய இலங்கை பந்துவீச்சாளர்கள்
ஆறு பந்துவீச்சாளர்களை இலங்கை அணி பந்துவீச்சில் அமர்த்தியபோதும் அவர்களால் ஒரு விக்கெட்டை மட்டுமே பெற முடிந்தது.
இலங்கை அணியின் அனுபவம் மிகுந்த வேகப்பந்துவீச்சாளரான மலிங்கா, தான்பந்து வீசிய 8 ஓவர்களில் 52 ரன்களை வழங்கினார். இதே போல், மற்ற பந்துவீச்சாளர்களாலும் இந்திய மட்டைவீச்சாளர்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமுடியவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :