You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிரிக்கெட்: 'இந்தியா -பாகிஸ்தான்' போட்டிகளுக்கு இணையாகுமா 'இந்தியா-வங்கதேசம்' போட்டிகள்?
- எழுதியவர், ;சிவகுமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
பிரிட்டனில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில், வியாழக்கிழமையன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் வங்கதேசத்தை இந்தியா எதிர்கொள்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் போல தற்போது இந்தியா - வங்கதேசம் இடையிலான போட்டிகள் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள நிலையில், முந்தைய போட்டிகளில் இவ்விரு அணிகளின் பங்களிப்பு, இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் ஆகியவற்றை இந்த அலசல் விவரிக்கிறது.
இந்தியா - வங்கதேசம் இதுவரை:
- இதுவரை இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே 32 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில், இந்தியா 26 முறையும், வங்கதேசம் 5 முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டியில் எந்த முடிவும் ஏற்படவில்லை.
- இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடந்த கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 2 முறையும், வங்கதேசம் 2 முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டியில் எந்த முடிவும் ஏற்படவில்லை.
- 2015-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில், வங்கதேசத்தை 109 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
- இப்போட்டியில் நடுவர் வழங்கிய ஒரு தவறான தீர்ப்பால், தாங்கள் தோல்வியடைந்ததாக குற்றம் சாட்டி வங்கதேச ரசிகர்கள் சமூகவலைதளங்களில் இந்திய வீரர்களுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கள், இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையே கருத்து மோதலை உருவாக்கியது.
- உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர் வங்கதேசத்தில் நடந்த ஒருநாள் போட்டி தொடரில் வங்கதேசம் 2-1 என்று இந்தியாவை தோற்கடித்தது. இத்தொடரின் போது தங்கள் அணியை ஆதரித்தும், மாற்று அணி வீரர்களுக்கு எதிராகவும் வங்கதேச மற்றும் இந்திய ரசிகர்கள் ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் தெரிவித்த கருத்துக்கள் இவ்விரு அணிகள் விளையாடும் போட்டிகளை இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிகளுக்கு இணையாக பரபரப்பாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் வியாழக்கிழமையன்று நடக்கும் அரையிறுதி போட்டியில் மோதும் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து காண்போம்
இந்திய அணியின் பலம் :
- இத்தொடரில் இந்திய மட்டைவீச்சாளார்களான ஷிகர் தவான், யுவராஜ் சிங், விராட் கோலி ஆகியோர் நல்ல நிலையில் விளையாடி வருவது, இந்தியாவுக்கு சாதகமான அம்சமாகும். ஒரு போட்டியை தவிர ரோகித் சர்மாவும் இத்தொடரில் சிறப்பாக பங்களித்துள்ளார்.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த கடைசி போட்டியில், இந்திய அணியின் ஃபீல்டிங் மிகச் சிறப்பாக அமைந்தது. மூன்று தென் ஆப்ரிக்க வீரர்களை இந்திய அணி ரன் அவுட் செய்ததால் அந்த அணியால் 191 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
- பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய இரு அணிகளுக்கு எதிராக நடந்த போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளர்கள் மிகவும் நேர்த்தியாக மற்றும் சிக்கனமாக பந்துவீசி எதிரணியை கட்டுக்குள் வைத்திருந்தனர்.
பலவீனம்
- பொதுவாக 'இழப்பதற்கு ஒன்றுமில்லை' என்ற பாணியில் வங்கதேச கிரிக்கெட் அணி விளையாடும். இதனால் அந்த அணி எவ்வாறு விளையாடும் என்று கணிப்பது இந்திய அணிக்கு சிரமமாகும்.
- இலங்கை அணிக்கு எதிராக 321 ரன்கள் குவித்தும் இந்திய பந்துவீச்சாளர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இலங்கையை போன்று வங்கதேச மட்டைவீச்சாளர்களும் நன்கு அடித்து ஆடக்கூடியவர்கள் என்பது இந்திய அணிக்கு பாதகமாக அமையலாம்.
- இதுவரை நடந்த போட்டிகளில், இந்திய அணியின் முதல் நான்கு மட்டைவீச்சாளர்களை தவிர மற்றவர்கள் நீண்ட நேரம் களத்தில் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விரைவாக சில விக்கெட்டுக்களை இழந்துவிட்டால், பின்னர் களமிறங்குபவர்கள் தடுமாறக்கூடும்.
வங்கதேச அணியின் பலம் :
- நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியில் கண்டிப்பாக வென்றே ஆக வேண்டும் என்ற சூழலில், மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளதால் வங்கதேச அணியினர் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மிகவும் நம்பிக்கையுடன் விளையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சுழல்பந்து வீச்சை திறம்பட சமாளிக்கும் வங்கதேச அணியை இந்திய சுழல்பந்துவீச்சாளர்களால் திறம்பட சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள், இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் தங்கள் அணிக்கு அளிக்கும் கூடுதல் உத்வேகம் அந்த அணியின் பங்களிப்புக்கு சாதகமாக அமையலாம். 2015-இல் வங்கதேசத்தில் நடந்த தொடரில் அந்த அணி வென்றதற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்பட்டது.
பலவீனம்:
- அனுபவம் வாய்ந்த இந்திய வீரர்களான கோலி, யுவராஜ், ரோகித் சர்மா மற்றும் டோனி போன்றோரில், ஓரிருவர் நிலைத்து நின்றால் இந்திய அணியால் மிகப் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியும்.
- புவனேஷ்வர் குமார், அஸ்வின் போன்ற இந்திய பந்துவீச்சாளர்கள் நேர்த்தியாக பந்துவீசி வருவதால் அவர்களை அடித்தாட முற்பட்டு வங்கதேச அணி தனது விக்கெட்டுக்களை இழக்கும் அபாயம் உள்ளது.
- அனுபவம் வாய்ந்த மட்டைவீச்சாளர்கள், அழுத்தம் அதிகமாக இருக்கும் முக்கிய போட்டிகளில் பலமுறை விளையாடிய வீரர்கள் என இரு அம்சங்களிலும் இந்திய அணி, வங்கதேச அணியை விட கூடுதல் பலத்துடன் உள்ளது.
தொடர்பான செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்