You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - பாக்., கிரிக்கெட்: இந்திய வெற்றிக்கு காரணமான 5 முக்கிய திருப்புமுனைகள்
சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிராக பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் 124ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவெற்றி பெற்றது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், இந்தியாவின் அமோக வெற்றிக்கு காரணமாக அமைந்த 5 முக்கிய காரணங்களை இங்கே காணலாம்.
- அருமையான தொடக்கம்; நிதானமிழக்காத இந்திய வீரர்கள்
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினர். 10 ஓவர்களின் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுத்திருந்தது.
இந்திய தொடக்க ஆட்டக்காரரர்களை பிரிக்க பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஷிகர் தவான் 68 ரன்களையும், ரோகித் சர்மா 91 ரன்களையும் எடுத்தனர். இந்த அடித்தளம் இந்தியா 300 ரன்களுக்கு மேலாக குவிக்க பெரிதும் உதவியது
- யுவராஜ்சிங், கோலி அதிரடி
39 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் எடுக்கப்பட்ட பவர் ப்ளேயில், இந்திய வீரர்கள் கோலி மற்றும் யுவராஜ்சிங் ஆகிய இருவரும், பாகிஸ்தானின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் விரட்டியடித்தனர்.
இதனால் மளமளவென்று இந்திய அணியின் ரன் எண்ணிக்கை உயர்ந்தது. கோலி மற்றும் யுவராஜ்சிங் ஆகிய இருவரும் அடுத்தடுத்து தங்களது அரைச்சதத்தை எட்டினர். 32 பந்துகளில் 53 ரன்களை யுவராஜ்சிங் எடுக்க, 81 ரன்களுடன் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- வருண பகவானின் ஆட்டம்
இந்த போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு இணையாக, ஆட்டத்தின் போக்கை மாற்ற மழையும் ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம்.
48 ஓவர்களில் 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தனது ஆட்டத்தை துவக்கிய பாகிஸ்தான் நான்காவது ஓவரை ஆடிக் கொண்டிருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 41 ஓவர்களில் 289 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இமாலய இலக்கு பாகிஸ்தானின் வெற்றியை மேலும் கடினமாக்கியது.
- நிலைத்து விளையாடாத பாகிஸ்தான் மட்டைவீச்சாளர்கள்
பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இந்த போட்டியில் நிலைத்து விளையாடதது அந்த அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாகும். நன்றாக ஆடிக் கொண்டிருந்த அஸார் அலி, அரைசதம் எடுத்த நிலையில், அடுத்த பந்திலேயே பாண்ட்யா கேட்ச் பிடிக்க ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
- துல்லியமான பந்துவீச்சு
இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் எடுத்தனர்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்