ஆந்திர கிராமத்தை தாக்கும் சிவப்பு எறும்புப் படை - அச்சத்தில் தவிக்கும் மக்கள்

எறும்பு

பட மூலாதாரம், DR PRONOY BAIDYA

    • எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
    • பதவி, பிபிசி தெலுங்குக்காக

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கரந்தமலை வனப்பகுதியில் பரவலாக இந்த மஞ்சள் எறும்புகளின் ஆதிக்கத்தால் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பல்வேறு மலை கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிபிசி தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது.

கால்நடைகளான ஆடு, மாடுகளின் கண்களைக் குறி வைத்து இந்த மஞ்சள் எறும்புகள் தாக்குவதால் அவை கண்பார்வை இழந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எங்கள் காலனியை எறும்புகள் தாக்குகின்றன. பத்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் எங்கள் காலனியை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். எங்களுக்கு உதவுங்கள் என்று ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள இசகலபேட்டா கிராமவாசிகள் அம்மாநில சட்டமன்ற சபாநாயகர் தம்மினேனி சீதாராமிடம் உதவி கோரியுள்ளனர்.

சபாநாயகரின் மனைவி வாணி இந்த கிராம பஞ்சாயத்து தலைவர். எறும்புகளிடம் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடமும் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

எறும்பு

அது சரி. மக்கள் அச்சமடையும் அளவுக்கு மிகக் கடுமையாக எறும்புகள் தாக்க கூடியவையா? அவற்றின் தாக்குதல் அவ்வளவு ஆபத்தானதா? இசகலபேட்டா கிரமத்தை மட்டும் குறிப்பாக ஏன் தாக்குகின்றன? இந்த பிரச்னை குறித்து கிராமவாசிகள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், உயிரியல் போராசிரியர்களிடம் பிபிசி பேசியது.

கடந்த இரண்டு வாரங்களாக எறும்புகள் தங்களை தாக்குவதாக இசகலபேட்டா கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அரசு அதிகாரிகள் தங்களை எறும்புகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

"பொதுவாக நாய்கள் மனிதரை கடிக்கும். சில இடங்களில் குரங்குகள் தாக்கும். எங்கள் கிராமத்தை எறும்புகள் தாக்குகின்றன" என்கிறார் பிபிசியிடம் பேசிய கிராமவாசி ஈஸ்வர ராவ்.

கிராமத்தை தாக்கும் சிவப்பு எறும்பு படை

எறும்புக் கடி காரணமாக 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவர் நீரிழிவு நோயாளிகள். எறும்பு கடிக்கு மருத்துவமனை சிகிச்சை பெறுகிறோம் என்றவுடன் எல்லாரும் எங்களை பார்த்து சிரிக்கின்றனர். ஆனால், அவர்கள் எங்கள் கிராமத்தை வந்து பார்த்தால் எங்கள் வலி புரியும் என்கிறார் ஈஸ்வர ராவ்.

நான்கு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த எறும்புகளின் பிரச்னை இப்போது உச்சத்தை அடைந்துள்ளது. இசகலபேட்டா கிராமத்தின் எல்லா திசைகளிலும், லட்சக் கணக்கணக்கான எறும்புகளை பார்க்க முடிகிறது. சாலைகள், வயல்கள், பள்ளிகள் மற்றும் வீடுகள் என கிரமத்தின் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கின்றன எறும்புகள்.

எல்லா இடங்களிலும் எறும்புகள், தேனீர் மற்றும் காப்பி குடித்தால் அவற்றில் எறும்புகள். சாப்பாட்டில் எறும்புகள். இதுவரை இந்த கஷ்டத்தை அனுபவிக்கவில்லை. இதனால் புதிய நோய்கள் பரவுமோ என அச்சமடைந்துள்ளோம். குழந்தைகளை வெளியே விளையாட அனுப்ப முடியவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தோம் என்று ஆதங்கத்தை கொட்டினார் பிபிசியிடம் பேசிய எறும்புகளால் பாதிக்கப்பட்ட வனஜா.

இந்த கிராமத்தில் மட்டும் ஏன்?

கிராமத்தை தாக்கும் சிவப்பு எறும்பு படை

பொதுவாக எறும்புகளை எல்லா வீடுகளிலும், கிராமங்களிலும் பார்க்கலாம். ஆனால், இசகலபேட்டா கிராமத்தில் மட்டும் எறும்புகள் நிறைந்திருப்பதற்கு என்ன காரணம்? என்று காகடியா பல்கலைக்கழகத்தின் விலங்கியல் பேராசிரியர் மாமிடலா இஸ்தாரியிடம் பிபிசி கேட்டது.

எறும்புகள் இவ்வாறு தாக்குவது அரிது. பல வகை எறும்புககளில் சிவப்பு எறும்புகள் ஆபத்தானவை. இசகலபேட்டா கிராமத்தல் இந்த நிலை ஏற்படுவதற்கு அந்த கிராமத்தை சுற்றியிருக்கும் எறும்பு குன்றுகள் கலைந்திருக்கலாம். அதனால், கிராமத்திற்குள் படையெடுத்திருக்காலம். ஒழுங்காக பூச்சி தடுப்பு மருந்துகளை பயன்படுத்தினால் இந்த பிரச்னையை தீர்க்கலாம் என்கிறார் மாமிடலா இஸ்தாரி.

"இந்த சிவப்பு எறும்புகள் எங்களை கடிக்கிறதா என்று கூட தெரியவில்லை. எங்கள் உடலில் அவை ஏறியவுடன் அவை ஊர்கின்ற இடம் சிவப்பாகி, வீங்குகிறது. தேய்த்தால் அல்லது சொறிந்தால் அந்த இடத்தில் குழி விழுகிறது என்கின்றனர் இசகலபேட்டா கிராமவாசிகள்.

இந்த கிராமத்திலுள்ள செங்கல் சூளைகளுக்கு பல்வேறு இடங்களில் இருந்து மண் வருகிறது. அந்த மண்ணோடு எறும்புகளும் வருகின்றன. தொடக்கத்தில் அவை குறைவாக இருந்தாலும், விரைவாக இனப்பெருக்கம் செய்து ஆயிரக்கணக்காக மாறிவிடுகின்றன. இவை கடித்த பின்பு, சில வேளையில், காய்ச்சலும் வருகிறது என்று அங்கலாய்க்கிறார் ரமணி.

கிராமத்தை தாக்கும் சிவப்பு எறும்பு படை

கிராமத்தில் சுகாதார முகாம்

"பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சை பெற்ற பத்து பேரில் நானும் ஒருவன். எங்கள் நிலைமை குறித்து மாவட்ட ஆட்சியர் உள்பட அனைவரிடமும் விளக்கிவிட்டோம். அவர்கள் கிராமத்தில் சுகாதார முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்" என்று கிராமவாசி ராமு தெரிவித்தார்.

புகாரின் அடிப்படையில் இந்த கிராமத்தை பார்வையிட்ட பஞ்சாயத்து அதிகாரிகள், நிலைமையை கண்காணித்து விட்டு கிராமத்தை சுத்தப்படுத்தி, எறும்குளை ஒழிக்கும் ரசாயனங்களை தெளித்தனர்.

இவ்வாறு எறும்புகள் பெருகுவதற்கு இந்த கிராமம் நாகவாலி ஆற்றங்கரையில் அமைந்திருப்பதே காரணம் என்ற புரிதலுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

நாகவாலி ஆறு இந்த கிராமம் வழியாக பாய்வதால், மரங்களும், செடி கொடிகளும் வளர்ந்திருப்பது, எறும்புகளுக்கு சிறந்த நிலபரப்பாக மாறியுள்ளது. இந்த நிலைமை அவை பெருகுவதற்கு சிறந்த சூழ்நிலையை வழங்குகிறது. எனவே, இதனை சமாளிக்க பூச்சியியல் நிபுணர்களை தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவித்தார் மாவட்ட பஞ்சாயத்து அதிகாரி ரவி குமார்.

கிராமத்தை தாக்கும் சிவப்பு எறும்பு படை

இந்த எறும்புகள் கடிப்பதால் அசௌகரியம் ஏற்படுகிறது. ஆனால் ஆபத்தில்லை. நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டிருப்போர் அதிக துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். இதனை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று தோகரம் தொடக்க சுகாதார மையத்தின் மருத்துவர் ஸ்ரவந்தி அறிவுறுத்துகிறார்.

இவற்றை காட்டு எறும்புகள் என்று உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவற்றின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து விட்டது. இதே நிலைமை தொடர்ந்தால், நாங்கள் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று கிராமவாசி ஆனந்த ராவ் கவலை தெரிவித்தார்.

மக்களை மட்டுமல்ல. கால்நடைகளையும் இந்த எறும்புகள் விட்டு வைக்கவில்லை. அவற்றின் தீவனத்தில் எறும்புகள் காணப்படுவதால், கால்நடைகள் வலிமை இழக்கலாம் என்று மக்கள் அஞ்சுகின்றனர்.

மேலும், வீடுகளில் இந்த எறும்புகளின் தொந்தரவால் எந்த பொருளையும் பாதுகாத்து வைக்க முடியவில்லை என்று மக்கள் புலம்புகின்றனர்.

கிராமத்தை தாக்கும் சிவப்பு எறும்பு படை

ஒரு மனிதருக்கு 10 லட்சம் எறும்புகள்

இசகலபேட்டா கிராமத்தில் எறும்புகளை அழிக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படுவது ஆச்சரியமளிக்கிறது என்கிறார் ஆந்திரா பல்கலைக்கழக்த்தின் விலங்கியல் பேராசிரியர் சி. மஞ்சு லதா.

ஆய்வுப்படி, உலகில் 22 ஆயிரம் எறும்பு வகைகள் உள்ளன. உலகெங்கும் உள்ள எறும்புகளை மனிதர்கள் அனைவருக்கும் பிரித்து அளித்தால், ஒவ்வொரு மனிதருக்கும் 10 லட்சம் எறும்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எறும்புகளின் எந்த வகைகளும் ஆபத்தானவை அல்ல என்று ஆய்வுகள் கூறினாலும், இசகலபேட்டா சம்பவம் போல நிலைமைகள் எழலாம் என்று பிபிசியிடம் தெரிவித்தார் மஞ்சு லதா.

இசகலபேட்டா கிராமத்தில் இந்த எறும்பு படை உருவாகுவதற்கு பின்னால் இருக்கும் காரணங்களை குறிப்பிட்டு சொல்ல முடியாவிட்டாலும், நில அமைவு காரணமாக இருக்கலாம் என்கிறார் அவர்.

காணொளிக் குறிப்பு, ஆதரவற்ற மன நோயாளிகளுக்கு இசை, தியானத்துடன் சிகிச்சை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: