சீனா: டிரோன்கள் மூலம் உணவு விநியோகத்துக்கு அனுமதி

சீனா: டிரோன்கள் வழி உணவு விநியோகத்துக்கு அனுமதி

பட மூலாதாரம், ELE.ME

டிரோன்கள் (ஆள் இல்லா விமானம்) மூலம் உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கு சீனாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இணையதள வர்த்தக நிறுவனமான அலிபாபாவுக்கு சொந்தமான உணவு விநியோகிக்கும் இஎல்இ.மீ (Ele.me) என்ற நிறுவனத்துக்கு சீனாவின் ஷாங்காய் நகரத்திலுள்ள ஜின்ஷன் தொழிற்பூங்காவிலுள்ள 17 இடங்களில் டிரோன்கள் மூலம் உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அந்த தொழிற்பூங்காவிலுள்ள 58 சதுர கிலோமீட்டர் பகுதிகளுக்கு டிரோன்கள் மூலம் உணவை விநியோகிப்பதற்கு இதன் மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஜின்ஷன் தொழிற்பூங்காவில் செயல்படும் 100 உணவகங்களுகளில் ஆர்டர் அளித்தால், அது டிரோன்கள் மூலம் இருபது நிமிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுவிடும்.

ஒவ்வொரு பாதையிலும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள இரண்டு குறிப்பிட்ட இடங்களுக்கிடையில் மட்டுமே டிரோன்கள் இயக்கப்படும் என்று தி சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆர்டர்களை பெறும் பணியாளர் உணவகத்துக்கு அருகிலுள்ள டிரோன் பறக்குமிடத்துக்கு சென்று அதை குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு அருகிலுள்ள டிரோன் பறக்குமிடத்துக்கு அனுப்புவார். அங்கிருக்கும் மற்றொரு பணியாளர், உணவை பெற்று வாடிக்கையாளரிடம் ஒப்படைப்பார்.

சாதாரண சாலை வழி உணவு விநியோக செலவை ஒப்பிடும்போது, டிரோன்கள் மூலம் விநியோகம் செய்வது செலவை குறைப்பதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஆறு கிலோ வரையிலான உணவுப்பொருட்களை 20 கிலோமீட்டர் தொலைவு வரை அதிகபட்சம் 40 கிலோமீட்டர் வேகத்தில் கொண்டுசெல்வதை இதே நிறுவனம் முன்னோட்டம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: