You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போன் அழைப்புகளை அலட்சியம் செய்த மகன்; ஆப் மூலம் தீர்வு கண்ட தந்தை
தனது அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் மகன் அலட்சியம் செய்தபோது மிகவும் வேதனைப்பட்ட பிரிட்டனை சேர்ந்த நிக் ஹெர்பெர்ட் இதற்கொரு தீர்வை காண எண்ணினார். ஆக்கப்பூர்வமாக செயல்பட முடிவு செய்த அவர், மகனை பதிலளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் ஒன்றை கண்டுபிடித்தார்.
''13 வயதிலே பென் ஏற்கனவே தனக்கென ஒரு செல்போனை வைத்திருந்தார். பெரும்பாலும் விளையாடுவதற்காகதான் அதை பயன்படுத்துகிறார். ஆனால், அதை சைலென்ட் மோடில் விட்டுவிடுவார். அதனால் ஒவ்வொரு முறையும் பென்னை தொடர்பு கொள்வது எனக்கு சிரமமாக இருந்தது,'' என்று பிபிசியிடம் கூறினார் ஹெர்பெர்ட்.
''செல்போன் சைலென்ட் மோடில் இருந்தாலும் அலாரம் மட்டும் வேலை செய்வதை உணர்ந்து, அந்த செயல்பாட்டை எனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன்,'' என்கிறார் அவர்.
இப்படித்தான் ரிப்ளை ஏஎஸ்ஏபி (ReplyASAP) என்ற அப்ளிகேஷன் உருவானது. செல்போனின் திரையை லாக் செய்யும் திறன் கொண்ட இந்த ஆப், கூடுதலாக பயன்பாட்டாளரின் கவனத்தை ஈர்க்க எரிச்சலூட்டக்கூடிய ஒலியை எழுப்பும்.
போனில் வந்திருந்த அழைப்பை ஏற்ற பின்னரோ அல்லது மெசேஜிற்கு பதில் மெசெஜ் அனுப்பிய பின்னரோ தான் லாக்கான போன் மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் வரும்.
இதற்காக, பிள்ளையின் செல்போனில் தந்தை ஒரு அப்ளிக்கேஷனை நிறுவ வேண்டியிருக்கும்.
அவசர செய்திகளை அனுப்ப பயன்பாட்டாளரை தொடர்புக்கொள்ளவும், பயன்பாட்டாளர் செய்தியை படித்து முடித்தவுடன் அதற்கான அறிவிப்பையும் பெற இந்த அப்ளிகேஷன் உங்களை அனுமதிக்கிறது.
முக்கிய விஷயங்களுக்காக மட்டுமே
இந்த அப்ளிகேஷனின் இலவச பதிப்பில் வெறும் ஒரு செல்போனை மட்டுமே இணைக்க முடியும். ஆனால், இதன் கட்டண பதிப்பில் சுமார் 20 மொபைல் போன்களை இணைக்கலாம்.
''ஆரம்பத்தில் என்னுடைய மகன் இதை விரும்பவில்லை,'' என்று கூறும் 45 வயதுடைய ஹெர்பெர்ட் லண்டனில் வசித்து வருகிறார்.
''ஆனால், சூழ்நிலையை புரிந்துகொண்டு இதன் அவசியத்தை பென் உணர்ந்து கொண்டார்,'' என்கிறார் அவர்.
இந்த வசதியை தான் எல்லா நேரங்களிலும் பயன்படுத்தவில்லை என்றும், சில முக்கிய தருணங்கள் போது மட்டுமே பயன்படுத்துவதாகவும் ஹெர்பெர்ட் கூறுகிறார்.
செல்போன் மீதான பெற்றொரின் கட்டுப்பாடு
ரிப்ளை ஏஎஸ்ஏபி அப்ளிக்கேஷனுக்கு முன்பு ஹெர்பெர்ட் வேறெந்த அப்ளிகேஷனையும் உருவாக்கியதில்லை.
இந்த அப்ளிக்கேஷனை உருவாக்க வேண்டும் என்று தோன்றி அதனை வெளியிடுவதற்கு பல மாதங்கள் ஆனதாக கூறுகிறார் ஹெர்பெர்ட்.
தற்போது இந்த அப்ளிக்கேஷன் சுமார் 36,000 பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளது. மேலும், ஆங்கில மொழியிலும் கிடைக்கின்றது. பிற மொழிகளும் இனிவரும் காலங்களில் சேர்க்கப்பட உள்ளது என்பது சிறப்பம்சமாகும்.
கூடுதலாக, ரிப்ளை ஏஎஸ்ஏபி அப்ளிக்கேஷனின் பிற பயன்களையும் ஹெர்பெர்ட் பரிசீலித்து வருகிறார். அதேசமயம், குழந்தைகளின் செல்போன் மீதான பெற்றோரின் கட்டுப்பாடும் இதில் அடங்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்