தமிழ்நாட்டில் மழை: வாகனங்களை பாதிப்பில் இருந்து பராமரிப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை மேலும் சில தினங்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. இந்த மழையின் தாக்கத்தை பல வடிவங்களில் மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் வாகன ஓட்டிகள்.
அனைவருக்குமே தத்தம் வாகனங்கள் மீது ஒரு தனி பிரியுமுண்டு. பலருக்கும் வாகனங்களை, அது இரு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி, நான்கு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி, குடும்பத்தில் ஒருவராக அதை கருதும் பழக்கம் கூட உண்டு.
இப்படி, வாழ்வின் முக்கியமானதோர் அங்கமாக மாறிவிட்ட வாகனங்களின் பராமரிப்புக்கு அதைப் பற்றிய புரிதலும் விழிப்பும் அதிகம் தேவைப்படுகிறது. குறிப்பாக பருவமழை காலங்களில் கன மழை மற்றும் சாலைகளில் மழை வெள்ளம் தேங்கும் நிலை நிலவும் சென்னை போன்ற பெருநகரங்களில் வாழ்பவர்களுக்கு, அந்த காலகட்டத்தில் ஒரு அடி வரைக்கும் தேங்கியிருக்கும் தண்ணீருக்குள் கூட சில நேரங்களில் வாகனம் ஓட்டவேண்டிய சூழல் ஏற்படுகிறது.
அத்தகைய சூழ்நிலைகளில் நம் வாகனங்களை எப்படிப் பராமரிப்பது, அதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டுள்ளதா என்பதை எப்படிக் கண்டறிவது என்பன போன்ற சந்தேகங்கள் நம்மில் பலருக்கும் உண்டு. அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளவே இந்தக் கட்டுரை.
வாகனத்தின் வேகத்தில் கவனம்
நான்கு சக்கர வாகனங்களை மழைக்காலங்களில் பராமரிப்பதில் கவனிக்க வேண்டிய அம்சங்களைத் தெரிந்து கொள்ள நான்கு சக்கர வாகனங்களுக்கான சர்வீஸ் தொழிலில் இருக்கும் டார்க் மேக்ஸ் ஆட்டோமோடிவ் நிறுவனத்தின் உரிமையாளர் அஷ்வின் ராஜ் வர்மாவிடம் பேசினோம். அவர் கூறிய தகவல்கள் இனி.


பொதுவாகவே, முன்பகுதியில் வைப்பரில் பயன்படுத்தப்படும் தண்ணீரைப் பொறுத்தவரை ஆர்.ஓ தண்ணீரை தான் பயன்படுத்த வேண்டும். அதோடு வைப்பர் சாம்பூ என விற்பதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை.
சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் சன்சில்க், சிக் போன்றவற்றின் ஒரு ரூபாய் பாக்கெட்டுகளையே பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு ரூபாய் பாக்கெட் ஒன்றை கலந்து பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்தினால், மழை நேரத்தில் வாகனம் ஓட்டும்போது, அந்த சோப்பு நீர் கண்ணாடியில் மழைநீரை நிற்கவிடாது மற்றும் கண்ணாடியில் மழைநேரத்தில் மூடுபனி ஆவதும் தவிர்க்கப்படும்.

நான்கு சக்கர வாகனத்தை தண்ணீருக்குள் ஓட்டிச் செல்வதாக இருந்தால், எவ்வளவு ஆழமுள்ள தண்ணீருக்குள் ஓட்டுகிறோம் என்பதில் கவனம் வேண்டும். வாகனத்தின் சக்கரம் பாதி மூழ்கும் அளவுக்கு தண்ணீரில் செல்லலாம்.
ரெனால்ட் க்விட், மாருதி ஸ்விஃப்ட், வெர்னா, ஐ10 போன்ற செடான் வாகனங்களில் செல்வதாக இருந்தால் அரை அடி முதல் முக்கால் அடி ஆழம் வரை தண்ணீரில் செல்லலாம். அதுவே, எஸ்யூவி-களான ஹுண்டாய் கிரெட்டா, டாடா நெக்சான், ஸ்கார்பியோ, பொலேரோ போன்ற பெரிய வாகனம் என்றால் அதிகபட்சம் ஒரு அடி ஆழம் வரை செல்லலாம்.
அதிக மழை பெய்துள்ளது, ஆனால் வேறு வழியில்லை தண்ணீரில் ஓட்டியாக வேண்டும் என்னும்போது தற்காப்பு ஓட்டுதலைத்தான் மேற்கொள்ள வேண்டும். தண்ணீருக்குள் போகும்போது வேகத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
வேகம் கூட்டினால் சிக்குவது நிச்சயம்
மணிக்கு 10-20 கி.மீட்டருக்கு மிகாமல் செல்ல வேண்டும். தண்ணீரை குடைந்து கொண்டு வேகமாக செல்லக் கூடாது. அப்படி சென்றால், 'ஏர் ஃபில்டர்' வழியாக தண்ணீர் வாகன எஞ்சினுக்குள்ளே இழுத்துக் கொள்ளப்படும். ஆகவே வேகத்தை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
தற்காப்பு ஓட்டுதலில் மற்றுமொரு அம்சமும் உண்டு. தண்ணீருக்குள் ஓட்டிச் செல்லும்போது, முன்னால் நடந்து செல்பவர்களையோ அல்லது வாகனங்களையோ கவனித்துக் கொண்டே செல்ல வேண்டும். அதன் மூலம் ஒருவேளை அவர்கள் ஏதேனும் ஓரிடத்தில் பள்ளத்தில் இறங்கி ஏறினால், அந்த ஆழத்திற்கு நம் வாகனம் செல்லுமா செல்லாதா என்பதைக் கணித்து ஓட்டிச் செல்ல முடியும்.
சக்கர உயரத்தில் பாதியளவு வரை மூழ்கி விடும் அளவுக்கான தண்ணீரில் சென்று வந்த பிறகு, பிரேக்குகளில் சேறு சகதிகள் சேர்ந்துவிடக்கூடும் என்பதால் முன், பின் என இரண்டு பக்கமும் பிரேக் சரியாக வேலை செய்கிறதா எனப் பார்க்க வேண்டும். அதோடு, நான்கு சக்கரங்களில் இருக்கும் பீயரிங் தேய்மானம் ஆகக்கூடும் என்பதால் அதுவும் சரியாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.
கனமழையில் தண்ணீர் நிரம்பி நிற்கும் சாலையில் சென்று வந்த பிறகு, அடுத்த நாளில் மீண்டும் வாகனத்தை எடுக்கும் முன்பாக கீழே குனிந்து பார்க்க வேண்டும். ஒருவேளை கூலன்ட் தண்ணீரோ, இன்ஜின் ஆயிலோ கசிந்திருந்தால் நிச்சயமாக அதைக் கவனிக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
அதேபோல், போனெட்டை திறந்து, எஞ்சின் ஆயில் அளவை சோதிக்க வேண்டும். அதோடு தண்ணீர் கலந்திருந்தால், எஞ்சின் ஆயிலின் நிறம் பால் போன்ற வெள்ளை நிறத்திற்கு மாறியிருக்கும். அப்படி ஆகியிருந்தால், அதையும் கவனிக்க வேண்டும்.
மூன்றாவதாக, பிரேக்கில் அசாதாரணமான சத்தம் கேட்டாலும் வாகனத்தை பழுதுபார்க்க கொண்டு செல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து வாகனத்தை எடுக்கும்போது எந்த இடைஞ்சலும் இன்றி ஸ்டார்ட் ஆகிவிட்டால் எந்தப் பிரச்னையுமில்லை. அப்படியல்லாமல், இவற்றில் ஏதேனும் பிரச்னை இருந்தாலும் பழுது பார்த்தாக வேண்டும்.
சைலென்சர் ரொம்ப முக்கியம்
இரு சக்கர வாகனங்களை மழைக்காலத்தில் எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து தனது கடந்த 50 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் மோட்டார் சைக்கிள் பழுது பார்ப்போர் நல சங்கத்தின் துணைத் தலைவர் ராசிக் அலியிடம் பேசினோம்.

மழை நேரங்களில் ஆக்டிவா, ஸ்கூட்டி போன்ற ஸ்கூட்டர் வகை வாகனங்களை எடுப்பதைத் தவிர்த்துவிட வேண்டும். வீட்டிற்கு அருகில், மிகச் சொற்ப தூரத்திற்குள் நீர் தேங்காமல் இருக்கும்போது ஓட்டிக் கொள்ளலாம். ஆனால், பள்ளங்கள், மேடுகளில் அதை ஓட்டுவது நல்லதல்ல. மேடுகளில் ஏற சிரமப்படும், சிறிய சக்கரத்தைக் கொண்டது என்பதால் சறுக்கிவிடக்கூடும்.

இரு சக்கர வாகனங்களில் தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் சைலென்சர் நனையாத வகையில் செல்லும்போது வாகனத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. அது மூழ்கிவிட்டால், வண்டி எந்த நிலையில் சென்று கொண்டிருக்கிறதோ அதே நிலையில் ஆக்சிலேட்டரை சீராக கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இல்லையென்றால், சைலென்சர் வழியாக தண்ணீர் புகுந்து இன்ஜினுக்குள் சென்றுவிடும். எஞ்சினுக்குள் சென்றுவிட்டால், வாகனம் மொத்தமாக நின்றுவிடும். சராசரியாக ஒரு அடிக்கு மேல் தண்ணீர் இருந்தாலே சைலென்சருக்குள் போய்விடும். ஆகவே ஓட்டும்போதும் நிறுத்தி வைக்கும்போதும் தண்ணீரின் அளவு சைலென்சரை எட்டுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
ஒருவேளை தண்ணீர் உள்ளே புகுந்து வாகனம் நின்றுவிட்டால், உடனே அதை ஸ்டார்ட் செய்யக் கூடாது. மெக்கானிக் கடைக்கு கொண்டு சென்று, சைலென்சர் போன்ற பாகங்களை கழட்டி காய வைக்க வேண்டும்.
தண்ணீர் உள்ளே சென்ற பிறகு ஸ்டார்ட் செய்துவிட்டால், ஆயிலோடு தண்ணீர் கலந்துவிடும். அது இன்ஜினில் இருக்கும் பிஸ்டன் வரைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏர் ஃபில்டரில் காற்று புக முடியாமல் கார்பரேட்டர் அடைத்துவிடும். ஆகவே, வண்டி நின்றுவிட்டால், இயன்றவரை அதை ஸ்டார்ட் செய்யாமல் இருப்பதே நல்லது.
மழை நேரத்தில் வாகனத்தை உயரமான இடத்தில் நிறுத்துவது நல்லது. வாகனம் ஒருவாரத்திற்கு மழைநீரில் நின்றுவிட்டது என்றால், சக்கரங்களைக் கழட்டி சுத்தம் செய்ய வேண்டும். பிரேக் ஷூ தண்ணீரில் ஊறிவிடுவதால், சறுக்கிவிட வாய்ப்புள்ளது. அதைக் கவனிக்க வேண்டும்.

தண்ணீரில் நீண்ட நாட்கள் நின்றாலும் இதைச் செய்தால் போதும். அதோடு, தண்ணீர் வடிந்த பிறகு சைலென்சர், ஏர் ஃபில்டருக்குள் தண்ணீர் புகுந்துள்ளதா என்று பார்க்க வேண்டும். அப்படி போயிருந்தால், அதைக் கழட்டி சுத்தம் செய்து பொருத்த வேண்டும். மற்றபடி எந்தப் பிரச்னையும் வராது.
வாகனம் மழையிலேயே நீண்ட நாள் நின்றாலும், தினமும் 30 நிமிடமாவது ஸ்டார்ட் செய்து நின்ற இடத்திலேயே ஓடவிடுவது நல்லது. அப்படிச் செய்தால், வண்டி பாகங்கள் சூடாகிக் கொள்ளும், பெரிய பிரச்னைகள் எதுவும் இருக்காது. இருப்பினும், தண்ணீர் வடிந்து வண்டியை எடுக்கும்போது ஒரு மெக்கானிக்கிடம் வண்டியை விட்டு ஒரு பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது.
வாகன பேட்டரியை பொறுத்தவரை, இப்போதுள்ள வாகனங்களில் வண்டியை ஸ்டார்ட் செய்து ஓடவிட்டாலே தானாக சார்ஜ் ஆகிக் கொள்ளும் வகையில் தான் பொருத்தப்பட்டுள்ளன. ஆகவே, குளிர்ச்சி காரணமாக எந்த பாதிப்பும் பேட்டரிக்கு வராது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













