ஞானவாபி: 'சிவலிங்கம்' கார்பன் டேட்டிங் விவகாரம் - இதுவரை என்ன நடந்தது?

பட மூலாதாரம், ROBERT NICKELSBERG/GETTY IMAGES
ஞானவாபி மசூதி வளாகத்தை ஆய்வு செய்தபோது கண்டெடுக்கப்பட்ட பொருள் சிவலிங்கமா அல்லது நீரூற்றா என்பதை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) உத்தரவிடக் கோரி நான்கு இந்து வழிபாட்டாளர்கள் தரப்பு தாக்கல் செய்த மனுவை வாரணாசி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. இந்த வழக்கு பரவலாக ராக்கி சிங் மற்றும் பலர் Vs உத்தர பிரதேச அரசு என்று அறியப்படுகிறது.
இந்த மனுக்களை விசாரித்த மாவட்ட நீதிபதி டாக்டர் ஏ.கே.விஷ்வேஷா, சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை சீல் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை மேற்கோள்காட்டி அதன் அடிப்படையில், அறிவியல் பூர்வமான விசாரணையை அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டார்.
முன்னதாக, ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி கமிட்டி, இந்து வழிபாட்டாளர்களின் கோரிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்தது.
இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், அந்த பகுதியை ஆய்வு செய்து பிறகு, அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருள் சிவலிங்கம் என்றும், அது இந்து பக்தர்களின் வழிபாட்டுப் பொருளாகவும், பழங்காலத்திலிருந்தே அந்த வளாகத்திற்குள் இருப்பதாகவும் இந்து வழிபாட்டாளர்கள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர்.
இந்த விவகாரத்தில் நீதியை நிலைநாட்டவும், ஏராளமான சிவ பக்தர்களுக்கு பரிகாரம் கிடைக்கும் வகையிலும் கண்டுபிடிக்கப்பட்ட பொருளின் உண்மையான தன்மை மற்றும் ஆயுளைக் கண்டறிய இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டியது அவசியம் என்று மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிவலிங்கம் (காணப்பட்டதாகக் கூறப்படுகிறது), அந்த சொத்து தொடர்பான ஒரு பகுதியா இல்லையா? மற்றும் - கூறப்படும் கட்டமைப்பு குறித்து 'அறிவியல் ஆய்வு' நடத்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? ஆகிய இரண்டு கேள்விகளுக்கு பதிலளிக்க மசூதி குழு அவகாசம் கோரியது.
இதைத்தொடர்ந்து, இந்து வழிபாட்டாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், "சிவலிங்கம் (கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் பொருள்) ஞானவாபி சொத்தின் ஒரு பகுதியே," என்று நீதிமன்றத்தில் வாதிட்டார்.
நீதிமன்றம் எழுப்பிய இரண்டாவது கேள்விக்கு, சிவில் நடைமுறைச் சட்டம் 1908இன் ஆணை 26 விதி 10Aஇன்படி, ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிவலிங்கத்தை 'அறிவியல் ஆய்வுக்கு' உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளது என்று வழக்கறிஞர் ஜெயின் கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தற்போது மாவட்ட நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி விட்டதால் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக தெரிவித்துள்ளார்.
வழக்கின் பின்னணி
ஞானவாபி மசூதியின் வளாகத்திற்குள் வழிபாடு நடத்த உரிமை கோரி இந்து பக்தர்கள் சிவில் நீதிமன்றத்தை அணுகிய பிறகே 'ஞானவாபி மசூதி' தகராறு தொடங்கியது, அது ஒரு இந்து கோவில் மற்றும் இன்னும் இந்து தெய்வங்கள் உள்ளன என்பது மனுதாரர்களின் வாதம்.
இந்த மசூதியை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஒருவரை 'நீதிமன்ற ஆணையராக' சிவில் நீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டது. அவர் தமது ஆய்வை காணொளியாக பதிவு செய்து சிவில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
இருப்பினும், சிவில் நீதிமன்றத்தின் முன் இருந்த இந்த வழக்கின் நுட்பமான தன்மை மற்றும் பிரச்னையின் தீவிரத்தைக் கருதி அதை மாவட்ட நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்றம், வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், 1991இன் கீழ் இந்த விவகாரத்தை மாவட்ட நீதிமன்றம் விசாரிக்க தடை ஏதுமில்லை என்று கூறியது.
இதையடுத்து, ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் சிவலிங்கம் என்று கூறப்படும் பொருளின் ஆயுள் மற்றும் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த அதை கார்பன் டேட்டிங் ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி இந்து வழிபாட்டாளர்கள் இந்த நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.
கார்பன் டேட்டிங் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
கார்பன் டேட்டிங் என்பது ஒரு காலத்தில் உயிருடன் இருந்த உயிரினங்களின் கரிம பொருட்களின் வயதைக் கண்டறிய பயன்படுத்தப்படும் ஒரு வழிமுறை.
உயிரினங்களில் பல்வேறு வடிவங்களில் கார்பன் உள்ளது. கார்பனில், கரிமம் 14 எனப்படும் ஓர் ஐசோடோப் (isotope) உள்ளது. இதிலிருந்து டேட்டிங் எனப்படும் காலக்கணிப்பைச் செய்ய முடியும். கரிமம 14-யில் அணுத்திணவான 14 உள்ளது. இதனால், ஓர் உயிரினம் காலப்போக்கில் கரிமப் பொருளாகச் சிதைகிறது.
ஒரு தாவரமோ அல்லது விலங்கோ இறந்த பிறகு, அதன் கரிம விகிதம் கார்பன 12-யில் இருந்து கார்பன் 14-க்கு மாறுகிறது அல்லது அதன் உடலின் எச்சங்களின் விகிதம் மாறத் தொடங்குகிறது. இந்த மாற்றத்தை அளவிடமுடியும். ஓர் உயிரினம் இறந்த காலகட்டத்தைக் கணக்கிட, இந்த கார்பன் டேட்டிங்கை பயன்படுத்த முடியும்.
இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், அனைத்து சூழ்நிலையிலும் கார்பன் டேட்டிங்கை பயன்படுத்த முடியாது. குறிப்பாக, பாறை போன்ற உயிரற்ற பொருட்களின் வயதைத் தீர்மானிக்க இதைப் பயன்படுத்த முடியாது.
மேலும், கார்பன் டேட்டிங்கின் மூலம் 40,000-50,000 ஆண்டுகளுக்கும் மேலுள்ள வயதைக் கணக்கிட முடியாது. ஏனென்றால், கரிம ஐசோடோப்புகளுடைய அரை-வாழ்நாளின் (அரை-வாழ்நாள்=5,700ஆண்டுகள்) எட்டு முதல் பத்து சுழற்சிகளைக் கடந்த பிறகு, கார்பன்-14இன் அளவு கிட்டத்தட்ட மிகவும் குறைந்துவிடும்.


ஞானவாபி விவகாரம் - இதுவரை நடந்தது என்ன?
2022, அக்டோபர் 14: வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் கண்டறியப்பட்ட சிவலிங்கம் அல்லது பொருளின் உண்மையான வயதை கண்டறிய கார்பன் டேட்டிங் செய்ய உத்தரவிடக் கோரும் வழக்கில் மனுதாரர்களின் கோரிக்கையை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது.
2022, செப்டம்பர் 12ஆம் தேதி, ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்து தெய்வங்களை வழிபட அனுமதி கோரிய இந்துப் பெண்களின் மனுவை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. முஸ்லிம் தரப்பின் எதிர்ப்பை நீதிமன்றம் நிராகரித்தது.
2022, மே 20ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தை வாரணாசி மாவட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பி, இந்த வழக்கு மேலும் விசாரிக்கத் தகுதியானதா இல்லையா என்பதை தீர்மானிக்குமாறு நீதிமன்றத்திடம் கூறியது.
2022, மே 17ஆம் தேதி, 'சிவலிங்கத்தின்' பாதுகாப்பிற்காக வுசுகானாவை(நீரூற்று) சீல் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, கூடவே மசூதியில் தொழுகையைத் தொடரவும் அனுமதித்தது.
2022, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு முன் மே 16 அன்று ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பதாக கூறப்படும் பகுதியை சீல் வைக்க வாரணாசி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது. அங்கு தொழுகைக்கும் தடை விதிக்கப்பட்டது.
2022, மே மாதம், ஞானவாபி மசூதியின் வீடியோ பதிவு தொடர்பாக மஸ்ஜித் இந்தஜாமியா உச்ச நீதிமன்றத்தை அணுகியது
2022, மஸ்ஜித் இந்தஜாமியா இந்த உத்தரவை பல தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் எதிர்த்தது. அது தள்ளுபடி செய்யப்பட்டது.
2022, ஏப்ரலில், ஞானவாபி மசூதியின் ஆய்வு மற்றும் வீடியோகிராஃபிக்கு சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2021:, அலகாபாத் உயர் நீதிமன்றத்தை மஸ்ஜித் இந்தஜாமியா என்ற குழு அணுகியது. உயர்நீதிமன்றம் மீண்டும் சிவில் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தியது.
2021, ஆகஸ்ட் 18 அன்று, டெல்லியைச் சேர்ந்த ஐந்து பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, மசூதி வளாகத்தில் மா சிருங்கார் கௌரி மற்றும் பிற தெய்வங்களை தரிசனம் செய்து வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கூறினர்.
2021: உயர்நீதிமன்றத்தின் தடை இருந்தபோதிலும், வாரணாசி சிவில் நீதிமன்றம் ஏப்ரல் மாதம் வழக்கை மீண்டும் தொடங்கி மசூதியை ஆய்வு செய்ய அனுமதித்தது.
2020: அலகாபாத் உயர்நீதிமன்றம் சிவில் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தது. பின்னர் இந்த விஷயத்தில் தீர்ப்பை ஒத்திவைத்தது.
2020: அடிப்படை மனுவை விசாரிக்குமாறு வாரணாசி சிவில் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
2019: அயோத்தி தீர்ப்புக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு 2019 டிசம்பரில் ஞானவாபி மசூதியை ஆய்வுசெய்யக்கோரி வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
1991: ஞானவாபி வழக்கு நீதிமன்றத்தை எட்டியது. ஞானவாபி மசூதி தொடர்பாக 1991ஆம் ஆண்டு முதன்முறையாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வாரணாசியில் உள்ள சாதுக்கள் மற்றும் துறவிகள் அங்கு வழிபாடு நடத்தக் கோரி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், மசூதி நிலத்தை இந்துக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மசூதி நிர்வாகக் குழு, இது வழிபாட்டுத் தலச்சட்டத்தை மீறுவதாகக் கூறியது.
1991: பிவி நரசிம்ம ராவ் காங்கிரஸ் அரசு 1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலச் சட்டத்தை (சிறப்பு விதிகள்) நிறைவேற்றியது. பாஜக இதை எதிர்த்தது. ஆனால் அயோத்தியை விதிவிலக்காக வைத்ததை வரவேற்றது. அதே நேரம் காசி மற்றும் மதுராவையும் விதிவிலக்காகக் கருத வேண்டும் என்று கோரியது. ஆனால் சட்டத்தின்படி, அயோத்திக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













