திருக்குறள் - ஜி.யு.போப் சர்ச்சை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முன்வைத்த மொழிபெயர்ப்பு குற்றச்சாட்டு சரியா?

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜி.யு. போப் திருக்குறளை மொழிபெயர்த்தபோது, அதிலிருந்து ஆன்மிகத்தைப் பிரித்துவிட்டார் எனக் குற்றம்சாட்டியிருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. அவருடைய இந்தப் பேச்சு வழக்கம் போலவே சர்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தில்லி தமிழ் கல்விக் கழகம் நடத்தும் லோதி சாலை பள்ளியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வியாழக்கிழமையன்று திறந்துவைத்தார். அதற்குப் பிறகு திருவள்ளுவர் குறித்தும் திருக்குறள் குறித்தும் பேசிய ஆளுநர், அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களில் ஒருவரான ஜி.யு. போப் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
'ஆதிபகவன்' குறித்த சர்ச்சை?
"தமிழ்நாடு ஆளுநராக நான் வெளியே போகும்போதெல்லாம் எனக்கு டஜன் கணக்கில் திருக்குறள் புத்தகங்கள், அதன் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வழங்கப்படும். அதில் பெரும்பாலானவை ஜி.யு. போப் உடையது. அதை படித்தபோது, ஆதிபகவன் என்ற வார்த்தையை "முதன்மை தெய்வம்" (ப்ரைமல் டெய்ட்டி) என்று ஜி.யு.போப் மொழிபெயர்த்திருப்பார்.
'ப்ரைமல் டெய்ட்டி' என்பது பழைய சமூகங்களின் சமயத்தைக் குறிக்கும். சிலவற்றை பார்த்து அந்த சமூகத்தினர் பயப்படும்போது அதை போக்க அவர்கள் தெய்வத்தை உருவாக்கினர். அதனால் அந்த வார்த்தையை பயன்படுத்தி அவர்கள் அழைக்கப்படுகின்றனர். ஆனால், ஆதிபகவன் என்பது பழம் சமூகத்தால் கருதப்பட்ட வெறும் முதன்மை தெய்வம் மட்டும் கிடையாது. அதை விட சக்தி வாய்ந்தவர் ஆதிபகவன். அவர்தான் உலகை படைத்தார்.
ஆனால், ஜி.யு.போப் தனது மொழிபெயர்ப்பில் ஒரு அவமதிப்பை செய்திருக்கிறார். அவரது மொழிபெயர்ப்பை எப்படி பிறகு வந்தவர்கள் வழிமொழிந்து சென்றனர் என்று நினைத்து அச்சரியப்படுகிறேன். ஒட்டுமொத்த திருக்குறளையும் அவர் ஆன்மிகமற்றதாக ஆக்கியிருக்கிறார். தனது மொழிபெயர்ப்பில் திருக்குறளில் இருந்த ஆன்மிக தாக்கத்தை அவர் தவிர்த்திருக்கிறார்.
ஜி.யு. போப் யார் என்பதை உங்களுக்கு அறிமுகப்படுத்த இந்த நேரத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். அவர் ஒரு மதபோதகர். அவர் சுவிசேஷத்தை பரப்பும் சொசைட்டியின் (எஸ்பிஜி) உறுப்பினர். 1813இல் பிரிட்டிஷ் நாடாளுமன்றம், ஒரு சட்டத்தை இந்திய சாசனம் என்ற பெயரில் நிறைவேற்றியது. அதில், இந்தியாவில் கிறிஸ்துவ இறை நம்பிக்கையை பரப்பும் நோக்கம் வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன்படியே ஜி.யு.போப் இந்தியாவுக்கு ஊழியம் செய்வதற்காக வந்தார், தமிழை பயின்றார், திருக்குறளை தேர்ந்தெடுத்து அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதில் இருந்த ஆன்மாவை பிரித்தெடுத்தார்.
ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பை பார்த்தீர்களானால், அது ஆன்மா இல்லாத ஒரு சடலம் போல இருக்கும். தடயவியல் கூடத்தில் ஒரு உடலில் எல்லா உறுப்புகளும் இருக்கும். ஆனால், ஆன்மா இருக்காது. ஆன்மா இல்லை என்றால் உடலுக்கு அர்த்தமே கிடையாது. இதைத்தான் ஜி.யு.போப் செய்தார். அவரது மொழிபெயர்ப்பை படித்தபோது இப்படித்தான் நான் உணர்ந்தேன்.
காலனித்துவ கால இறை போதகர் ஜி.யு. போப் போன்றவர்களால் 'திருக்குறள்' ஆன்மிகமற்றதாக காட்டப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் கண்டனம்
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி வந்த பிறகு பொதுவெளியில் அவர் பேசிய பல பேச்சுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அதைப்போலவேதான் அவரது இந்தப் பேச்சும் அமைந்தது.
அவருடைய பேச்சை பழ நெடுமாறன் உடனடியாகக் கண்டித்தார். "ஜி.யு.போப் கிறித்துவ பாதிரியார். எனவே, அவர் திருக்குறளை தவறான கண்ணோட்டத்துடன் மொழிபெயர்த்துள்ளார் என்று ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அதே ஜி.யு. போப் அவர்கள் சைவத் திருமுறைகளில் ஒன்றான திருவாசகத்தைப் படித்து உள்ளம் உருகி அந்நூலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார் என்ற உண்மையையும் ஆளுநர் உணரவில்லை. திருக்குறளுக்கு வைதீக அடையாளத்தைச் சூட்டுவதற்கே ஆர்.என். ரவி முயற்சி செய்துள்ளார்.

பட மூலாதாரம், YOGESH_MORE / GETTY IMAGES
ஜி.யு. போப் அவர்கள் முதன்முதலாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதன் பெருமையை உலகமறியச் செய்தார். காந்தியடிகள் உள்பட பலரும் அம்மொழிபெயர்ப்பைப் படித்து திருக்குறளின் பெருமையை உணர்ந்து போற்றினர் என்பதையும் ஆளுநர் அறிந்திருக்கவில்லை.
தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு ஆகியவற்றைக் குறித்து தனது அறியாமையை வெளிப்படுத்துவதைவிட, பேசாமல் இருப்பது நல்லது என்பதை ஆளுநர் உணர வேண்டும்." என்று ஆளுநருக்குக் கண்டனம் தெரிவித்தார் நெடுமாறன்.
தி.மு.கவைச் சேர்ந்த மாநில அமைச்சர் மனோ தங்கராஜ் உடனடியாக இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். "மதத்திற்கும், சாதிக்கும் முற்றிலும் எதிரானதும், உண்மையானதுமான ஆன்மீகத்தை பற்றி திருக்குறள் விவரிக்கிறது. ஜி.யு. போப் தமிழ் இலக்கியத்திற்கு அளித்திருக்கும் பங்களிப்பு அளப்பரியது. ஆளுநர் ரவியின் பேச்சு, தான் விரும்பும் மத உணர்வை திருக்குறள் பிரதிபலிக்கவில்லை என்ற விரக்தியின் வெளிப்பாடே ஆகும். வருணாசிரமக்காரர்களின் இத்தகைய கருத்துக்கள் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் எதிராக விடுக்கப்பட்டிருக்கும் சவால்" என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
மதுரைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனும் ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று சனாதனத்தை தோலுரித்த வள்ளுவர் பற்றியும், 40 ஆண்டுகள் தமிழ்த் தொண்டாற்றிய ஜீ யூ போப் பற்றியும் பாடம் எடுக்கும் ஆளுநரே, கடவுள் வாழ்த்தே இல்லாமல் இந்திய அரசியல் சாசனம் ஏன் உருவாக்கப்பட்டது என்பதை படித்துப்பாருங்கள். ஆன்மீகத்தின் பெயரால் வெறுப்பை விதைப்பவர்களை வள்ளுவர் மனிதனாகவே மதிப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். உளறல்களை நிறுத்துங்கள்." என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2

ஜி.யு. போப் யார்?
ஜார்ஜ் உக்ளோ போப் எனப்படும் ஜி.யு. போப் ஒரு ஆங்கில கிறிஸ்தவ மதப் பிரச்சாரகர். 1820ல் கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் பிறந்த இவரது குடும்பம் 1826ல் இங்கிலாந்திற்குத் திரும்பியது. 14 வயதிலேயே ஜி.யு. போப் தென்னிந்தியாவில் செயல்பட்டுவந்த மதப் பிரசாரப் பணிகளில் சேர்ந்துகொண்டார். 1839ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயர்புரத்தை வந்தடைந்தார். இங்கிலாந்தில் இருந்தபோதே தமிழைப் படிக்க ஆரம்பித்திருந்த ஜி.யு. போப், சாயர்புரத்தில் ஆரியங்காவுப் பிள்ளை, ராமானுஜக் கவிராயர் ஆகியோரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.
1845ல் மனைவி இறந்துவிடவே, மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்த போப், 1849ல் இங்கிலாந்து திரும்பினார். பிறகு மீண்டும் 1851ல் தஞ்சாவூரை வந்தடைந்த போப், அங்கு ஏற்பட்ட சில பிரச்சனைகளால் ஊட்டியை வந்தடைந்தார். அங்கே ஐரோப்பிய மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தார். பின்னர் ஒரு பள்ளிக்கூடத்தையும் உருவாக்கினார். ஆனாலும் தொடர்ந்து பழைய தமிழ் நூல்களைக் கற்றுவந்த போப், பழைய ஏட்டுச் சுவடிகளையும் சேகரித்தார். 1871ல் பெங்களூர் சென்ற போப், பிறகு 1882ல் இங்கிலாந்து திரும்பினார். அங்கு ஆக்ஸ்பர்ட் நகரத்தில் குடியேறிய அவர், தமிழ், தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியரானார். 1908 வரை அந்தப் பணியில் இருந்த அவர், 87வது வயதில் உயிரிழந்தார்.

பட மூலாதாரம், Twitter
அவருடைய மூன்று மகன்கள் இந்தியாவில் பணியாற்றினர். தாமஸ் ஹென்றி என்ற அவருடைய ஒரு மகன் கண் மருத்துவராகப் பணியாற்றினார்.
இந்தியாவில் மதம் பரப்பவந்த பலரைப் போலவே, ஜி.யு. போப்பும் தமிழின் மீது மிகுந்த ஆர்வம் காட்டினார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1886ல் திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் The 'Sacred' Kurral of Tiruvalluva-Nayanar என்ற தலைப்பில் லண்டனில் வெளியிட்டார். இவரது நாலடியார் மொழிபெயர்ப்பு 'முனிவர் அருளிச்செய்த நாலடியார் (The Naladiyar, or, Four hundred quatrains in Tamil) என்ற பெயரில் ஆக்ஸ்ஃபோர்டில் 1893ல் வெளியானது. இவரது திருவாசக மொழிபெயர்ப்பு The Tiruvacagam; or, 'Sacred utterances' of the Tamil poet, saint, and sage Manikka-Vacagar: the Tamil text of the fifty-one poems, with English translation என்ற தலைப்பில் 1900ல் ஆக்ஸ்ஃபோர்டில் வெளியிடப்பட்டது.

திருக்குறளும் ஜி.யு போப்பும்
கி.மு. முதலாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குள் தொகுக்கப்பட்டதாகக் கருதப்படும் திருக்குறளுக்கு பலரும் உரை எழுதியிருக்கின்றனர். பரிமேலழகர், மு. வரதராசனார், தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட பலரும் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளனர். வீரமாமுனிவர் அறத்துப் பாலுக்கும் பொருட்பாலுக்கும் தமிழில் உரையெழுதியுள்ளார்.
அதேபோல, ஜி.யு போப் தவிர, கிண்டர்ஸ்லி, எஃப்.டபிள்யு. எல்லீஸ், டபிள்யு.எச். ட்ரூ, சார்லஸ் கி. கோவர், இ.ஜி. ராபின்சன், அருட்தந்தை ஜி. ராசரஸ், டி.எம். ஸ்காட், எச்.ஏ. பாப்லி உள்ளிட்டோர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். ஆனால், திருக்குறளை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது ஜி.யு. போப்தான்.
இந்தப் பின்னணியில் ஜி.யு. போப்பின் தமிழ்ப் பணிகள் தமிழறிஞர்களால் தொடர்ந்து போற்றப்பட்டே வந்திருக்கிறது. "ஜி.யு. போப் தமிழர்கள் நன்றியுடன் நினைக்கக்கூடிய பெயர்களில் ஒன்று. அவருடைய திருவாசக மொழிபெயர்ப்பு உலகறிந்தது. சைவசாத்திர நூலான திருவருட்பயனையும் தமிழ் சமூகத்தின் எட்டாம் நூற்றாண்டு வாழ்வியலைக் காட்டும் புறப்பொருள் வெண்பா மாலை எனும் இலக்கண நூலையும் மொழிபெயர்த்துள்ளார்" என்று குறிப்பிடுகிறார் மறைந்த தமிழ்ப் பேராசிரியரான தொ. பரமசிவம்.
ஆனால், ஜி.யு. போப் திருக்குறளை கிறிஸ்தவமயமாக்கினார் என்ற கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஆதாரமாக, தன்னுடைய மொழிபெயர்ப்பிற்கு அவர் எழுதிய முன்னுரை சுட்டிக்காட்டப்படுகிறது. முன்னுரையின் ஓரிடத்தில் கிறிஸ்தவ சிந்தனைகளையும் உள்வாங்கி அவர் திருக்குறளை எழுதியிருக்கிறார் என்று குறிப்பிடுகிறார் ஜி.யு. போப். திருவள்ளுவர் மயிலாப்பூரில் வசித்தவர் என்று கருதப்படும் நிலையில் அருகிலேயே சாந்தோம் தேவாலயம் இருப்பதையும் அவர் தனது முன்னுரையில் சுட்டிக்காட்டுகிறார். திருக்குறளின் பல பகுதிகள் கிறிஸ்தவத்தை உள்வாங்கியதைப்போலவே இருப்பாதாகவும் போப் குறிப்பிடுகிறார்.
சமணர்களின் எழுத்திலிருந்து அவர் ஒன்றிரண்டு சொற்களைப் பயன்படுத்தியதால், அவர்கள் அவரை தம் மதத்தைச் சார்ந்தவர் என்று கருதுவதாகவும் ஆனால், கிறிஸ்தவத் தாக்கமே மிகுந்திருப்பதாகவும் போப் தனது முன்னுரையில் கூறுகிறார். ராஜீவ் மல்ஹோத்ராவும் அரவிந்தன் நீலகண்டனும் எழுதிய Breaking India என்ற புத்தகம் இந்தக் குற்றச்சாட்டை வலுவாக முன்வைக்கிறது. இந்தியாவிலிருந்து தமிழுக்கு தனித்த அடையாளம் ஒன்றை உருவாக்க போப்பும் கால்டுவெல்லும் முயன்றதாகவும் அந்தப் புத்தகம் கூறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்துத்துவவாதிகளால் அடிக்கடி மேற்கோள்காட்டப்படும் புத்தகம் இது.

பட மூலாதாரம், Twitter @SuVe4Madurai
போப்பின் முன்னுரை இப்படியிருந்தாலும்கூட, அவருடைய மொழிபெயர்ப்பு கிறிஸ்தவத்தை அடிப்படையாக வைத்துச் செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டை இதுவரை யாரும் முன்வைத்ததில்லை.
ஆதி பகவன் என்றால் என்ன?
ஆளுநரின் கருத்து முழுமையாகத் தவறானது என்கிறார் தமிழறிஞரும் ஆய்வாளருமான பொ. வேல்சாமி. "அந்தக் கருத்து பொருத்தமில்லாதது. திருவள்ளுவர் பயன்படுத்தும் ஆதிபகவன் என்ற வார்த்தையை வேறு தமிழ் நூல்களில் காணமுடியாது. ஆகவே, அதன் சரியான பொருள் திருவள்ளுவரைத் தவிர யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை" என்கிறார் வேல்சாமி.
மேலும், "திருக்குறளை இந்து நூல் என்று சொல்லவே முடியாது. மாமிசம் உண்ணக்கூடாது என்று ஒரு அதிகாரம் இருக்கிறது. அப்படிச் சொல்வது சமணத்தில் மட்டும்தான் வரும். மழையை வாழ்த்துவதென்பது திருக்குறளிலும் சிலப்பதிகாரத்திலும்தான் உண்டு. இந்து மரபில் அது கிடையாது. மேலும், முதல் அதிகாரத்திலேயே "பொறிவாயில் ஐந்தவித்தான்" என்று ஒரு குறள் உண்டு. அதற்கு ஐம்பொறிகளின் எழும் ஆசைகளையும் அடக்கும் பக்குவம் கொண்டவனின் வழியில் செல்பவன் நீடூழி வாழ்வான் என்று பொருள். ஐம்புலன்களையும் அடக்குவதென்பது இந்து மரபில் கிடையாது. அதுவும் சமண மரபுதான் என்று தமிழறிஞர் திரு.வி. கல்யாணசுந்தரனார் ஆராய்ந்து கூறுகிறார்.
தமிழில் சமண சிந்தனை மரபு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடர்ச்சியாக இருந்திருக்கிறது. இந்து மரபு அந்த காலகட்டத்தில் உருவாகவில்லை.
திருக்குறளை மொழிபெயர்த்த கிறிஸ்தவப் பாதிரியார்கள், அந்த நூலில் பைபிளில் கூறப்பட்டுள்ள செய்திகள் திருக்குறளிலும் இருப்பதாக குறிப்பிடுவார்கள். அதை கிறிஸ்தவ நூல் என்று சொல்ல மாட்டார்கள். தவிர, அந்த சமயத்தில் திருக்குறளாக யாரும் மிகப் பெரியதாக தூக்கிப்பிடிக்கவில்லை. 1920க்கு பிறகுதான் தமிழ் நூல்களை ஒரு இனத்தின் அடையாளமாக தூக்கிப்பிடிக்கும் மரபு உருவாகிறது. 19ஆம் நூற்றாண்டில் பழந்தமிழ் நூல்களை எல்லாம் தம் ஆசிரியர் உட்பட பெரும் தமிழ்ப் புலவர்களே மறந்துபோன காலம் என்று உ.வெ.சாமிநாதய்யர் சொல்கிறார்.
இருந்தபோதும் வெளியில் இருந்து வந்த மதப் பிரச்சாரகர்களுக்கு பழைய தமிழ் நூல்களைப் பற்றித் தெரிந்திருந்தது. எல்லீசும் போப்பும்தான் திருக்குறளின் பெருமை உணர்ந்து அதனைத் தூக்கிப்பிடித்தவர்கள்" என்கிறார் பொ. வேல்சாமி.
மற்ற மொழி பெயர்ப்புகள் என்ன சொல்கின்றன?
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பலர், ஆதிபகவன் என்பதற்கு கடவுள் என்ற சொல்லைக்கூட பயன்படுத்தாமலும் இருந்திருக்கிறார்கள். வ.வே.சு. ஐயரின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் 'ஆதிபகவன்' என்ற சொல்லுக்கு Great Original என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பூர்ணலிங்கம் பிள்ளையின் மொழிபெயர்ப்பில் Supreme Being என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பி.எஸ். சுந்தரத்தின் மொழிபெயர்ப்பில், God Primordial என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













