'ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியால் இந்தியா உருவாக்கப்பட்டது' - ஆளுநர் ஆர்.என். ரவி

ஆளுநர்.ஆர்.என். ரவி

வேற்றுமையில் ஒற்றுமை என்பதைத் தான் சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். சென்னை அருகே வானகரம் பகுதியில் நடந்த ஒரு தனியார் நிகழ்வில் பங்கேற்றபோது ஆற்றிய உரையில் ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

'ஹரிவராசனம்' பாடல் இயற்றப்பட்ட 100ஆவது ஆண்டை அனுசரிக்கும் வகையில் சபரிமலை ஐயப்பன் சேவா சமாஜம் ஒருங்கிணைத்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய தமிழக ஆளுநர் ரவி, ''ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியால் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது," என்றார்.

மேலும் அவர், சனாதன தர்மம் தான் பாரதத்தை உருவாக்கியது என்றும் ஒரே பரமேஸ்வரா என்பதையே சனாதன தர்மம் கூறுகிறது என்றார்.

''சோமநாதர் கோயில் சொத்துகளை அழித்து கந்தஹார் மற்றும் பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் பின்னர் அமெரிக்காவால் தாக்கப்பட்டன. இதிலிருந்தே சனாதன தர்மத்தின் வலிமையைப் புரிந்துகொள்ளலாம்," என்று ஆளுநர் தெரிவித்தார்.

சனாதன தர்மம் பற்றி ஆளுநர் ரவி ஆற்றிய உரையின் சாரம் ட்விட்டர் தளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

காணொளிக் குறிப்பு, சுய திருமணம் செய்துகொண்ட குஜராத்தின் ஷாமா பிந்து

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: