சேலம் குழம்பு கடைகள்: வீட்டு சமையல் வேலையை குறைக்க உதவும் வியாபாரம்

சேலம் குழம்பு கடைகள்
    • எழுதியவர், ஏ.எம்.சுதாகர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காலத்தில் சேலத்தில் சத்தமில்லாமல் ஒரு தொழில் மும்முரமாக நடந்து வருகிறது. அதுதான் சேலம் குழம்பு கடைகள்.

சேலத்து மக்களின் உணவுப் பழக்க வழக்கம் மிகவும் சுவாரசியமானது. ருசியான பதார்த்தங்களை கொண்டாடும் சேலம் மக்களின் அன்றாட வாழ்வில் குழம்புக் கடைகளும் தற்போது இடம்பிடித்திருக்கின்றன.

சேலம் மாவட்டத்தில் 'குகை' என்ற பகுதியில், இங்குள்ள காளியம்மன் கோவில், அம்மாபேட்டை, கருங்கல்பாளையம் செவ்வாய்பேட்டை தாதகாப்பட்டி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் குழம்புக்கென்றே ஒரு வீதி உள்ளது.

இங்கே 200க்கும் மேற்பட்டகுழம்பு கடைகள் உள்ளன. வீட்டு முறைப்படி பெண்களே சமைத்து விற்பனை செய்கின்றனர். இங்கு வீட்டில் வைக்கும் சாம்பார், வத்தக்குழம்பு, காளான் குழம்பு, மோர் குழம்பு, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, சுண்டைக்காய், புளிக்குழம்பு, ரசம், கீரை குழம்பு வகைகள், பொரியல், சைடு டிஷ் ஆக வடை உள்ளிட்டவை சமைக்கப்படுகின்றன.

இங்கு சிறப்பு அம்சமே சுண்டல் குழம்பு, அவரைகொட்டை என்கிற மொச்சை கொட்டை குழம்பு தான். அதோடு பிரட் மசால் , மீள் மேக்கர் மசால், சோயா பீன்ஸ் சுக்கா, சேனைக்கிழங்கு சுக்கா என சைவத்தில் இருபதுக்கும் மேற்பட்ட வகைகள் செய்து விற்பனை செய்கிறார்கள்

அதே போல அசைவத்தில் சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, சிக்கன் வறுவல், மட்டன் வறுவல், காடை பிரை, குடல் போட்டி, சில்லி சிக்கன், மீன் குழம்பு, மீன் வறுவல், பிரியாணி என்ற வகைகள் செய்யப்படுகின்றன.

சேலம் குழம்பு கடைகள்

காலை, மதியம், இரவு என மூன்று வேளைக்கும் குழம்புகளை சமைத்து, அரசு அனுமதித்த குறைந்த மைக்ரான் கொண்ட பாலிதீன் பைகளில் கட்டிக் கொடுகின்றனர். மேலும் கல்யாணம், சீமந்தம், புதுமனை புகுவிழா என்று சின்ன சின்ன விஷயங்களுக்கும், ஆர்டரின் பேரில் இங்கிருந்து சமைத்துக் கொடுக்கிறோம் என்கிறார்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்கள்.

பொதுவாக திருமணமாகாதவர்களுக்கு இது போன்ற கடைகள் சொர்க்கம் என்றால் மிகையாகாது. ஆனால், சேலத்தில் இவர்களின் கடைக்கு பெண்களே அதிகம் வருகிறார்கள். சில வீடுகளில், ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்வதால், வீட்டில் சமைக்க நேரம் இருக்காது. இதனால் வெறும் சாதம் மட்டும் வைத்துக் கொண்டு 20 ரூபாய்க்கு குழம்பு வாங்கிக் கொண்டு போனால் போதும், அதை வைத்து குடும்பமே சாப்பிட்டு கொள்ளலாம்.

அதோடு கொரோனா .நோய்த்தொற்று, கடைகள் அடைப்பு, உணவுபொருள் தட்டுப்பாடு, எதிர்பார்த்த உணவு சமைக்க முடியாமல் போனது என பல்வேறு பிரச்னைகளை இல்லத்தரசிகள் சந்தித்து வருகிறார்கள். இதுபோன்ற சூழலில் வீட்டில் சமைக்கும் வேலையை பெருமளவு குறைத்துள்ளது இந்த குழம்பு விற்பனை கடைகள்.

சேலம் குகை பகுதியில் இத்தகைய கேட்டரிங் நடத்தி வரும் கவிதாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

"சேலம் மாவட்டத்தில் அம்மாபேட்டை, குகை, செவ்வாய்பேட்டை என 200க்கும் மேற்பட்ட குழம்பு கடைகள் உள்ளன. அவரை கொட்டை கூட்டு, சுண்டல் கூட்டு, தட்டப்பயிறு கூட்டு என தினமும் ஒருகூட்டு சமைப்போம். குகை பகுதியில் அவரைக்கொட்டை கூட்டு பிரபலம். வேலைக்கு செல்லும் கணவன், மனைவி உள்ள வீடுகளில் குழம்பை மட்டும் வாங்கிக்கொண்டு வீட்டில் சாப்பாட்டை சமைத்து கொள்வார்கள்.

சேலம் குழம்பு கடைகள்

ஒரு நாளைக்கு குழம்பு, ரசம், பொரியல், சுண்டல், உருளைக் கிழங்கு, மசால்வடை, மீல் மேக்கர் சுக்கா என பல்வேறு வகை உணவுப்பொருள்களை விற்போம். ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வகை குழம்பு விற்போம். இந்த பகுதியில் சைவம் மற்றும் அசைவ கடைகள் உள்ளன. வீட்டு சமையல் போல் உள்ளதால் ஏராளமானோர் வந்து வாங்கி செல்வார்கள்.

அதுமட்டுமல்லாமல் வீட்டில் நடக்கும் விஷேச நிகழ்ச்சிக்கு ஆர்டரின்பேரில் சமைத்து கொடுப்போம். 30 நபர்களுக்கு தேவையான பொருட்களை ஆயிரம் ரூபாய் செலவில் செய்து கொடுகிறோம். அதை ஹோட்டலில் வாங்கினால் 4 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை ஆகும். எங்கள் வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த தொழில் ஈடுபட்டு வருகிறோம். இந்த வியாபாரம் கொரொனா காலத்தில் எங்களுக்கு மிகவும் கைகொடுக்கிறது," என்றார் கவிதா.

மற்றொரு கேட்டரிங் நிர்வாகி நந்தகோபாலன் பேசுகையில், "வீட்டில் உள்ள பெண்கள் வீட்டு வேலை போக மீதி நேரத்தை சரியான முறையில் பயன்படுத்த இந்தக் கடை தொடங்கினோம். கடந்த 23 வருடங்களாக இந்தத் தொழில் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் குழம்பு 3 ரூபாய், ரசம் 2 ரூபாய், பொரியல் 1 ரூபாய் என 5 ரூபாய்க்கு ஒருவேளைக்கு தேவையான உணவு செய்து கொடுத்தோம். இங்கு நெசவு தொழில்தான் அதிகம். அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் சமைக்க போதுமான நேரம் கிடைக்காது. அதனால் இங்கு குழம்பு மட்டும் வாங்கிக் கொள்வார்கள். நாள்பட இறைச்சி குழம்பும் விற்பனை செய்ய தொடங்கினோம். கடைக்கு சென்று, இறைச்சி எடுத்து வந்து சமைத்து சாப்பிடும் போது அவர்களுக்கு நேரம் செலவாகும். வேலைக்கு செல்பவர்களின் சிரமத்தை குறைப்பதால் இது வரவேற்பு பெற்றுள்ளது" என்கிறார் நந்தகோபாலன்.

சேலம் குழம்பு கடைகள்

பெற்றோரை விட்டு பிரிந்து வெளிநாடு சென்ற பிள்ளைகள், வீட்டில் உள்ள வயதானவர்களின் சமையல் செய்யும் சிரமத்தையும் இதுபோன்ற குழம்புக் கடை போக்கியுள்ளது.

மேலும், கொரோனா ஊரடங்கு காலத்தில், மக்கள் வெளியே சென்று காய்கறி வாங்கி வந்து சமைக்க சிரமங்களை எதிர்கொண்ட வேளையில், நேராக இங்கு வந்து வேண்டிய உணவுகளை வாங்கிச் சென்றனர்.

வரதராஜன் என்ற மற்றொரு கேட்டரிங் கடை நிர்வாகி, தமது கடையில் சாம்பார், புளிக்குழம்பு, காளான் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு, காலிபிளவர் கிரேவி என வகை, வகையாய் குழம்புகளை சமைப்பதாகக் கூறுகிறார்.

"இங்கு அருகில் அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. எனவே இங்கு வேலை செய்பவர்கள் வீட்டில் இருந்து சாப்பாடு மட்டும் எடுத்து வந்து விடுவர். இங்கு வந்து அவர்களுக்கு தேவையான குழம்பு, பொரியல் ஆகியவற்றை வாங்கி செல்வார்கள். தற்போது கொரோனா காலம் என்பதால் வியாபாரம் சற்று மந்தமாகவே உள்ளது" என்கிறார் வரதராஜன்.

குழம்புக் கடை வாடிக்கையாளர் சுதாகர், "சேலத்தில் சிறிய, சிறிய குழம்புக் கடைகள் அதிகமாக உள்ளன. பெரிய உணவகங்களுக்கு சென்று வாங்கும்போது அங்கு சமைக்கும் பொருட்களுக்கு அஜினமோட்டோ போன்ற பொருட்கள் பயன்படுத்துவர். அது உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும். அத்தகைய பொருட்கள் இதுபோன்ற கடைகளில் பயன்படுத்தப்படுவதில்லை. மேலும் விலையும் குறைவாக இருப்பதால் எங்களுக்கு பயன் தருகிறது" என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :